Tuesday 10 May 2016

சித்து விளையாட்டு

சித்து விளையாட்டுகள் வேண்டாம்.
----------------------------------------------------

சித்தர்கள்(Tamil Scientists) கண்டுணர்ந்த இயற்கையான வேதியல் சித்துக்கள்... இன்று வியாபாரமாக உபயோகப்படுத்தப்படும் சில...இங்கே...

வெரும் கையில் மோதிரம் வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் வருவது எல்லாம் மந்திரங்க.........

சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாமியாரின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக ஒரு பெரிய தகவலே பரவியது. இப்படி விபூதி கொட்டுவது ஒன்றும் தெய்வீகமானது அல்ல. நீங்கள் விரும்பினால் உங்கள் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம்.

உங்களுக்கு தெரிந்த நாட்டு வைத்தியர் யாரவது இருந்தால் அவரிடம் சிறிதளவு திமிர் பாஷானம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் இது நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு திமிர்பாஷானத்தை விற்கமாட்டார்கள்.

நீங்கள் வைத்தியரிடம் வாங்கிய திமிர் பாஷானத்தில் ஒரே ஒரு சொட்டு மட்டும் எடுத்து உங்கள் படத்தின் கண்ணாடியில் வைத்து விடுங்கள். அடுத்து ஆறு மணி நேரத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்து விடும். இது எப்படி நிகழ்கிறது என்றால் திமிர் பாஷானத்தின் தன்மை காற்றில் உள்ள தூசிகளை தனக்குள் இழுத்து வெளியிடுவதாகும். காற்றில் உள்ள தூசிகள் தான் வெள்ளை விபூதியாக கொட்டும்.

மேலும் இந்த திமிர்பாஷானத்தை வைத்து சில வித்தைகள் செய்யலாம். கற்பூரத்தை ஒரு பத்து நிமிடம் இதில் ஊர வைத்து ஒரு பாட்டலில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். எதாவது யாகம், ஹோமம் நடக்கும் இடத்திற்கு சென்று சமித்து என்ற மர குச்சிகளின் மீது அந்த கற்புரத்தை வைத்து மந்திரம் சொல்வது போல் முணுமுணுத்து குப் என்று ஊதுங்கள், கரியமலவாயு பட்டவுடன் கற்பூரம் தானாக பற்றி கொள்ளும்,

நல்ல பருமனான கடப்பாறை கம்பியை வளைத்து ஒடிக்க விரும்புகிறீர்களா? அதற்கு ஒன்றும் நீங்கள் பயில்வானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒடிக்க விரும்பும் கடப்பாரையை பத்து நாட்களுக்கு முன்பாகவே குலை தள்ளிய வாழை மரத்தில் நடுவில் சொறுகி வைத்துவிட வேண்டும். வாழை மர சாரானது இரும்பின் கட்டி தன்மையை நீர்த்து போக செய்துவிடும். பிறகு சுலபமாக ஒடித்து விடலாம்.

இப்படி கொதிக்கும் எண்ணெயில் கை விடுவது ஒன்றரை மணி நேரத்தில் கம்பு விதையை பயிராக்கி கதிர் தள்ள செய்தல் என்று எத்தனையோ வித்தைகள் உள்ளன. இவற்றை செய்து பார்க்க மந்திரம் தேவையில்லை.

குறுக்கு புத்தி இருந்தால் போதும். இந்த மாதிரியான வித்தைகளை கற்று கொண்டவர்கள் தான் வெறுங்கையில் விபூதி வரவழைப்பது உட்பட பல வேலைபாடுகளை செய்கிறார்கள்.

# # ஆன்மீகத்தில் அது நம்மை முக்தி வழியை தடுத்து நிறுத்தும் அதற்கான சிறு கதை.........

முன்னொரு காலத்தில் முனிவர் ஒருவர் நடுக்காட்டில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். கடும் தவத்தின் காரணமாக சில சித்து விளையாட்டுகள் அவருக்குத் தெரியும். அதனால் அவர் புகழ் நாடு முழுவதும் பரவியது. முனிவரைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து ஓர் இளைஞன் வந்தான்.

சுவாமி உங்கள் சக்தி பற்றி கேள்விப்பட்டே நான் வந்திருக்கிறேன். என்று கூறினான். முனிவர் மிகவும் மகிழ்ந்து, அவனை அருகில் அமரச் சொல்லிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது யானை ஒன்று ஆசிரமத்தின் பக்கமாக வந்தது. அதைக் கண்ட இளைஞன், சுவாமி, தங்களால், அந்த பலம் பொருந்திய யானையைக் கொல்ல முடியுமா? என்றான்.

இதென்ன பெரிய காரியம்? என்று சொன்ன முனிவர், கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து, மந்திரத்தை ஜெபித்து அந்த யானை இருந்த திசை நோக்கி வீசினார்.

என்ன ஆச்சரியம், அந்த வினாடியே அந்த யானை சுருண்டு விழுந்து இறந்தது! இதை ஆச்சரியத்துடன் பார்த்த இளைஞன், முனிவரே, உங்கள் மந்திர சக்தியைக் கண்டு பிரமிக்கிறேன் என்றான். முனிவருக்குப் பெருமை பிடிபடவில்லை. கர்வத்துடன் அதை ஆமோதித்தார்.

உடனே இளைஞன், சுவாமி, இறந்து போன யானையை உங்களால் பிழைக்க வைக்க முடியுமா? என மறுபடியும் வினவினான். அதுவும் என்னால் முடியும். இதோ பார். என்றவாறு, மீண்டும் கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து, ஜெபித்து யானை மேல் தெளித்தார். அந்த வினாடியே யானை உயிர் பெற்று, உற்சாகமாகத் துள்ளிக் குதித்து எழுந்தது.

இளைஞன், அந்த முனிவரைப் பார்த்தான். முனிவரே, நீங்கள் யானையை முதலில் கொன்றீர்கள். பின்னர் அதைப் பிழைக்க வைத்தீர்கள். இதனால் நீங்கள் பெற்ற பலன் என்ன?

இதனால் என்ன ஆன்மிக வளர்ச்சியை அடைந்தீர்கள்? இந்த சித்து விளையாட்டு, கடவுளை நீங்கள் எளிதாகக் காண உங்களுக்கு உதவி புரியுமா? இறைவனின் அருளைப் பெற்ற ஒருவன், விலை மதிப்பில்லாத ஞானம், வைராக்கியம், பக்தி இவற்றை விட்டுவிட்டு சித்துகளைச் செய்ய ஆரம்பிப்பது தவறு இல்லையா? இந்த மந்திர தந்திரங்கள் எல்லாம் இறைவனுக்குப் பிடிக்குமா? கடவுளை அடைய இவையெல்லாம் தடை அல்லவா? என்றான்.

முனிவர் அதிர்ந்துபோய், அந்த இளைஞனை நிமிர்ந்து பார்த்தார். அந்த இளைஞன் அவர் பார்க்கும்போதே மாயமாய் மறைந்தான். ஆமாம். இளைஞனாய் வந்தவர் கடவுள்தான்! கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்ட முனிவர், அன்று முதல் தன் சித்து வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஆன்மீகப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.