Friday 26 January 2018

வெந்தய டீ

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள். எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை. அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம். அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.

அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது. சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.

அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும் வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உனவில் சேர்ப்பது என நீங்கல் செய்திருப்பீர்கள். வெந்தய தே நீரை குடித்திருக்கிறீர்களா? அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும், அதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.

தயாரிக்கும் முறை :
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து, மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி, தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்.


வெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :
குடலை சுத்தமாக்க :

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும். நச்சுக்களை உடலில் தங்க விடாது.


ரத்த சோகை :
இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள். மன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த வெந்தய டீ அருமருந்தாகிறது.


மாதவிடாய் வலிக்கு :
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும். அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.


டீன் ஏஜ் பெண்கள் :
பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும். பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.


தாய்ப்பால் அதிகரிக்க :
முற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது. தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.


கொழுப்பு கரைய :
கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும். மேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.


மலச்சிக்கல் :
வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.


உடல் எடைக்கு :
வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலில் அவசியமற்று தங்கி கேடு விளைவிக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது. அதோடு மேலும் உடல் எடையை தக்க வைக்கவும் உதவுகிறது.


இதய நோய்கள் :
தினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம். இதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை.


அசிடிட்டி :
அதிக அமிலம் எதுக்களிப்பு நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாகிறது. இது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது. இதனால் அல்சர் போன்ற நோய்கள் தடுக்கபப்டுகிறது.


சர்க்கரை வியாதி :
தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், இந்த காலத்தில் பெரும்பாலோனோரைத் தாக்குகின்ற டைப்- 2 சர்க்கரை வியாதியை வாராமல் தடுக்கலாம். அவ்வாறு சர்க்கரை வியாதி வந்தவர்கள் இதனை குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட தேவையிருக்காது. சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.


கூந்தல் வளர்ச்சி :
இந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்வு. தினமும் இந்த வெந்தய தேனீர் குடித்து வாருங்கள். முடி அடர்த்தியாவை நீங்களே காண்பீர்கள். இது முடி வளற்ச்சியை வெகு வேகமாக ஊக்குவிக்கின்றது.


பித்த நோய்கள் :
நிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள். இந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

– அனைவருக்கும் பகிருங்கள்

Wednesday 24 January 2018

காமாக்யா கோவில்

காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா? பிரம்மபுத்திரா படகு வீடுகள், சாலையோரப் பரிதாப வாழ்க்கை, முண்டியடிக்கும் ரிக்‌ஷாக்களைப் பார்த்துக் கொண்டே அதிலிருந்து கொஞ்சம் பிரிந்து, நீலாஞ்சல் மலையைச் சுற்றிச் சுற்றி ஏறினால், மாயங் கிராமத்தை அடைந்துவிடலாம். இந்தியாவின் தாந்திரிக வழிபாட்டின் மையமான காமாக்யா கோயில் இங்கேதான் இருக்கிறது.

வெல்லும் சொல் கொல்லும்

சுற்றி அமைந்திருக்கும் மலைக் குன்றுகள் மேல் அமைக்கப்பட்டிருக்கும் காமாக்யா கோயிலில் நுழைவது - அதுவும் பொழுது சாய்ந்து செல்வது - திகிலூட்டும் ஓர் அனுபவம். மந்திர தந்திரங்களின் பூமி இது. சிவனை மணந்த இளம் மனைவியான சக்தியே இங்கு காமாக்யாவாக நின்று அருள்பாலிப்பதாக ஐதீகம். ஒரு குகையில், தரை மட்டத்துக்கும் கீழ் எப்போதும் நீர் சுரக்கும் சுனையிலிருக்கிறாள் உக்கிர தேவதை காமாக்யா.

எல்லாக் கோரிக்கைகளையும் வேண்டுதல்களையும் காமாக்யா நிறைவேற்றுவதாக நம்பிக்கை. பலியை ஏற்கும் தாய் என்பதால், ரத்தக் கவுச்சி கோயில் வளாகத்தைச் சூழ்ந்திருக்கிறது. தரையிலும் ஆங்காங்கே ரத்தம். கோயில் படிக்கட்டுகளில் நீண்ட தாடியுடனும் மிரட்டும் விழிகளுடனும் கஞ்சா புகைக்கும் சாமியார்களில் மந்திரவாதிகளும் அடக்கம்.

வழிபாடுகள் உக்கிரமாக நடக்கின்றன. “எல்லாவற்றையும் குறியீடாகப் பார்க்கும் தாந்திரிக மரபின் சடங்குகளும் யோக வழிமுறைகளும் நுட்பமானவை. பொதுவில் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாதவை. தாய்வழிச் சமூகமான காரோ பழங்குடிகள் ஆரம்பக் காலத்தில் பன்றிகளைப் பலியிட் டார்கள்.

அந்த மரபு இப்போதும் தொடர்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆட்டுக் கடாக்களையே பலி கொடுக்கிறார்கள். திருவிழா காலத்தில் எல்லா வகையான ஆண் பிராணிகளும் பலியிடப்படும்” என்றார் உடன் வந்த நண்பர்.

பகீரதப் பிரயத்தனங்களுக்குப் பிறகு, ஒரு மந்திர வித்தகரைச் சந்தித்தோம். “சொற்களின் வலிமையும் கூர்மையும்தான் மந்திரங்கள். ஒரு மந்திரம் போதும், உங்கள் வாயைக் கட்டிப்போட்டுவிட; இன்னொரு மந்திரம் மூலம் உங்களை மறையச் செய்துவிடலாம். ஆனால், தர்மம் இல்லாமல் மந்திரங்களைப் பிரயோகிக்கக் கூடாது. பிரயோகித்தவன் பாவத்தை அனுபவிக்க வேண்டும். காமாக் யாவில் அருளும் மந்திரங்களின் வலிமையும் கட்டுக்கதை அல்ல. இதற்கெல்லாம் ஆதாரங்கள் உண்டு” என்றவர் கண் முன்னே ஒரு பூச்செடியின் முள் ஒன்றை ஒரு மந்திரத்தின் மூலம் பூவாக மாற்றினார். பின்னர், ஒரு இடை வெளிக்குப் பின் நீண்ட பிரார்த்தனையில் ஈடுபட்டவர், அந்தப் பூவை முள்ளாக மாற்றினார். “மந்திரங்கள் விளையாட்டு அல்ல; கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகத்தின் இயல்பை நாம் மாற்றுவதை அன்னை ஒருபோதும் அனுமதிக்க மாட்டாள்” என்கிறார்.

அரண்டுபோய்விட்டார்களா ஆங்கிலேயர்கள்?

புராதனமான காமாக்யா கோயில் அசாமின் முதல் பேரரசான காமரூபா காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலைப் பற்றிய முதல் குறிப்புகள் மிலேச்ச வம்ச வனமாலா வர்மதேவர் ஆட்சிக் காலத்திய தேஜ்பூர் கல்வெட்டுகளில் (ஏழாம் நூற்றாண்டு)காணக் கிடைக்கின்றன. ஏகப்பட்ட படையெடுப்புகள், தாக்குதல்களுக்குப் பின் 500 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட கோயிலையே இப்போது பார்க்கிறோம் என்கிறார்கள். கோச் வம்சம், அஹோம் வம்சம், கச்சார் வம்சத்தோடு கோயிலைத் தொடர்புபடுத்தி வெவ்வேறான கதைகள் சொல்லப்பட்டாலும், கோயில் கதையைச் சொல்பவர்கள் யாவரும் ஆங்கிலேயர்கள் காமாக்யாவுக்கு அஞ்சி இங்கு கை வைக்க நடுங்கினார்கள் என்ற விஷயத்தைச் சொல்கிறார்கள்.

தாந்திரிக அறிஞர் மந்தீர் சாய்கியா, “மணிப்பூர் இளவரசர் மைபாங், கச்சார் சாம்ராஜ்யத்தை நிறுவினார். அவருடைய பெயர்களில் ஒன்றே ஊரின் பெயரான மாயாங். புத்தத் துறவிகள் இங்கு தாந்திரிகம் கற்றனர். அவர்கள் அசாமின் பல்வேறு பகுதிகளுக்கும் அதன் பின் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தாந்திரிகத்தைக் கொண்டுசென்றனர்” என்று குறிப்பிடுகிறார்.

வாய்மொழி வழக்கில் இருந்த மந்திரங்களைக் கச்சார் மன்னர்கள்தான் எழுத்தில் பதிய ஊக்குவித்தார்கள். ஏராளமானவை தொலைந்து விட்டாலும் இப்போதும் அங்கும் இங்குமாக சுமார் நானூறு சுவடிகள் இருக்கின்றன. ஆனால், மந்திரங்களைத் தேவையில்லாமல் பிரயோகிக்கக் கூடாது; தேவியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்கிறார்கள்.

அரசியல்வாதிகளின் கூட்டம்

எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றும் என்று நம்பப்படும் ஒரு கோயிலை எப்படி விட்டுவைப்பார்கள் நம்முடைய அரசியல் வாதிகள்? வடகிழக்குப் பகுதி மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவி கிறார்கள். “எப்போதும் கோடைக்காலத்தில் நடக்கும் அம்புபாச்சி மேளாவின்போதும் இலை யுதிர் காலத்தில் நவராத்திரி துர்கா பூஜை யின்போதும்தான் இங்கு கூட்டம் அலை மோதும். அப்போது நாடு முழுவதிலுமிருந்து தாந்திரிகர்கள் இங்கே வழிபட வருவார்கள். இப்போதெல்லாம் தேர்தல் காலகட்டத்திலும் கூட்டம் அதிகமாகிவிடுகிறது” என்கிறார் கோயில் வளாகத்தில் கடை வைத்திருக்கும் பூரி.

அரசியல்வாதிகளுக்கு காமாக்யாவின் மந்திர விற்பன்னர்கள் இடம் அளிக்கிறார்களா? இல்லை என்று வலுவாக மறுக்கிறார்கள். “காமாக்யா பீடத்தின் சக்தியைக் கேள்விப்பட்டு, மந்திரங்களைப் பயன்படுத்திப் பதவிக்கு வந்துவிடலாம் என்கிற நப்பாசையில்தான் அரசியல்வாதிகள் இங்கு வருகிறார்கள். ஆனால், இங்கு மந்திர விற்பன்னர்கள் அவர் களுக்கெல்லாம் துணைபோவது கிடையாது. தவிர, எல்லோருக்குமே ஒரு விஷயம் தெரியும் - மந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தினால், காமாக்யாவின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்று. ஆகையால், வரு வார்கள், பிராத்தனை செய்வார்கள், பலி கொடுப்பார்கள், அவ்வளவுதான்” என்கிறார்கள்.

கோயிலை விட்டு வெளியேறியபோது சரசரவென வந்து புகுகின்றன கொடி கட்டிய நான்கு கார்கள். உள்ளிருந்து கச்சிதமான உடைகளில் இறங்குகின்றனர் அரசியல்வாதிகள். ஒரு காரிலிருந்து எதையோ எடுக்க/இழுக்க படாத பாடுபடுவது தெரிந்தது. நெருங்கிப் பார்த்த போது, மறுத்துக்கொண்டு வெளியே வந்தது ஒரு முரட்டுக் கடா. அதை இழுத்துக்கொண்டு கோயிலை நோக்கி முழங்கிக்கொண்டே நுழைகிறார்கள்: “ஜெய் காமாக்யா!”

Monday 15 January 2018

மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள்

மன்னிப்பைப் பற்றி
மருத்துவம் சொல்வது
பகீர் தகவலாக உள்ளது.

'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள். மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன. `ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.

இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.

'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.

ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது? நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்‍ையை தெரிந்துகொள்ள முடியும்..

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது. மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர் களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும். குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம். அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.

மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.

Sunday 14 January 2018

அமாவாசை தினம்

அமாவாசை தினம் நமது சமயத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றது..! தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது..!

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.அமாவாசையில் பிறந்தவர்கள் புத்தி மிகவும் கூர்மையாக செயல் புரியும் ஆகையால் அவர்கள் அறிவை சரியான முறையில் செயல் படுத்தினால் மிக உயர்ந்த இடத்திற்க்கு செல்ல முடியும். அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.அமாவாசைப் பிறவிகளில் அனேகருக்கு தலையில் இரண்டு சுழி இருப்பதாக கூறப்படுகிறது முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை!  இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. முன்னோர்கள் இறந்த தேதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது உகந்தது.மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்தபோது, அவர்களை சரிவர கவனிக்காததால், அவர்கள் அடையும் துன்பங்கள் யாவும், பாவத்தின் வடிவில் கவனிக்கத் தவறியவர்களை சேர்வதாக கூறப்படுகிறது. பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான்.நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள்.ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.

*பித்ரு சாபம் , பித்ரு தோஷம் எப்படி உண்டாகிறது?*

பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.
நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம். அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம். நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.
நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார். நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் வழிபாடு ஆவி வழிபாடு ஆகும். இதுவே நம் பண்டைய தமிழர்களின் முக்கிய வழிபாடு ஆகும். இந்த வழிபாடு தற்போது மு.கிருஷ்ண மோகன் 8526223399
மறைந்து விட்டது.ஆவிகள் என்றவுடன் நம்மில் சிலர் பயந்து போய் இருக்கலாம். பயம் கொள்ள தேவையில்லை. நமது முன்னோர்களின் ஆவிகள் மறுபிறப்பு எய்தும் வரை நமது நலனில் அக்கறை கொண்டவையாகவே இருக்கும். இத்தைகய நம்முடை முன்னோர்களின் ஆவிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு தான் பிதுர்கடன் எனப்படுகிறது. நமது பித்ருக்கள் தான் கடவுளரின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள். நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித் தருபவர்கள் நமது பித்ருக்களே.எனவே நமது நலனில் அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும். அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியினால் வாடுவர். அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நமது இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவர். அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர். வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர். இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள். எனவே நாம் அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது. மேலும் நமது பித்ருக்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதி படுத்த வேண்டும்.பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது. இந்த தோஷம் உள்ள உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான். எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும். பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும். அவ்வாறு நீங்கிய பின்னரே அவர்களின் வாழ்க்கையில்
எந்த ஒரு முன்னேற்றமும் வரும்
பிதுர் தோஷமும் பரிகாரங்களும்
ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும். நிழல் கிரகங்களான் ராகுவும், கேதுவும் நமது முன்வினைகளை பிரதிபலிப்பவை. மேலும் ராகு தந்தை வழி பாட்டனாரைக் குறிக்கும் கிரகம் ஆகும். அதே போல் கேது தாய் வழி பாட்டனாரைக் குறிக்கும கிரகம் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும், ஒருவர் செய்த முன்வினை கணக்கினை தெளிவாக காட்டுபவை ஆகும்.ராகுவும், கேதுவும் அவரவர் முன்னோர்கள் செய்த பாவ-புண்ணிய கணக்கினை தெளிவாக காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த பாவங்களை தீர்க்க முடியுமா அல்லது முடியாதா என்பதையும் காட்டும் கிரகங்கள் ஆகும். ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு பாம்பு கிரகங்களே கிரகங்களில் மிகவும் வலிமையானவை. ஆனால் தற்கால சோதிடமோ ராகு மற்றும் கேது ஆகியவற்றிற்கு பலமில்லை என்று கூறுகின்றன். ராகுவை ஞான-போக காரகன் என்றும் கேதுவை மோட்ச காரகன் என்றும் அழைப்பர்.
முன்பு
குறிப்பிட்டவாறு ஜாதகத்தில் ராகு, கேது அமைந்திருந்தால் ஜாதகரின் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை, குழந்தைப்பேறு இவற்றில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கான காரணம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களே. ஒருவர் தனது முற்பிறவிகளில் அவர் செய்த பாவங்களே அவருடைய இப்பிறவியில் ஜாதகத்தில் தோஷங்களாகவும், முற்பிறவிகளில் செய்த புண்ணியங்களே அவரது ஜாதகத்தில் யோகங்களாகவும் அமைகின்றன.அது மட்டுமல்லாமல் நமது முன்னோர்களிடமிருந்து இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை பெறுவதால் நம் முன்னோர்களின் பாவ-புண்ணியங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி ஆகும்.

அமாவாசை வழிபடுவது எப்படி..?

அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து தெற்கு பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்கு மு.கிருஷ்ண மோகன் 8526223399 தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.செய்ய கூடாதவை அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

அமாவாசை மகிமை...

பிரதிமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. அன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி, தோஷம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும். ராகு, கேது மற்றும் பிற கிரகங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண அமாவாசையன்று பரிகாரம் செய்தால் சிறப்பான பலனைத் தரும். மேலும் மூததையர்களின் ஆசியும் கிடைக்கும்.

*காகத்துக்கு சாதம் படைப்பது ஏன்?*

அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், எமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது எமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால் எம லோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. காகம் சாதத்தை எடுக்காவிட்டால் முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கையாக உள்ளது...

பித்ரு லோகம் என்பது , சூரியனுக்கு அப்பால், பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர்.  அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றை போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி சந்ததியரை வாழ்த்துவார்கள். அமாவாசையன்று தங்களுக்கு வழங்கப்படும் எள் தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பித்ருக்கள் காத்து நின்று கொண்டிருப்பார்களாம்..!!  பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தை அமாவாசை சிறந்த நாளாகும். அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர்களை நினைத்து திதி கொடுக்கலாம்.  தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற திருத்தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்று சூரிய வழிபாடு செய்வது அவசியம்.  இறந்தவர்களின் நாள், தேதி தெரியாதவர்களும், வருடத்தின் 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம்.  இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். அன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்ய வேண்டும்.  மறைந்த தாய், தந்தை படங்களுக்கு மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வணங்க வேண்டும். அன்று காகம் வடிவில் மூதாதையர்கள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பதும் முக்கியம்

அவர்கள் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். தானத்தில் சிறந்தது அன்னதானம் .அன்று அன்னதானம் செயவது மிகவும் சிறப்பு அது போல ஆடைகள் தானமும் மிகவும் சிறப்பு.

அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்..!