Monday 29 February 2016

பணக்காரங்க மேலும் பணக்காரங்க ஆகறாங்க ஏழைங்க மேலும் ஏழைங்களா ஆகறாங்க

பணக்காரங்க மேலும் பணக்காரங்க ஆகறாங்க 
ஏழைங்க  மேலும் ஏழைங்களா  ஆகறாங்க...
ஏ  இந்த முரண்பாடு என்று ஒரு பள்ளி மாணவர் கவலையா கேட்டார்.

" இது முரண்பாடு  அல்ல. இதுதான் நம்மை போன்ற வளரும் நாடுகளின் அடிப்படை பொருளாதார சமன்பாடு என்றேன்"

புரியவில்லை என்றார்.

உதாரணமாக ஒரு வளரும் நாடு. அந்த நாட்டில் 10 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். அந்த நாட்டில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 3000 ம் பேரிடம் மட்டுமே அந்த நாட்டில் 8000 ஏக்கர் நிலம் உள்ளது. இது பாரம்பரியமாக வந்ததாக இருக்கலாம் அல்லது கைப்பற்றப்பட்டதாக இருக்கலாம். மீதமுள்ள 7 ஆயிரம் பேர் வெறும் 2000 ஏக்கர் நிலங்களில் மட்டுமே வாழ்கிறார்கள்.

ம்...

இந்த 3000 பேரிடம் 8000 ம் ஏக்கர் நிலம் உள்ளதால் அவர்கள் மீதமுள்ள 7 ஆயிரம் பேரைவிட பெரிய பணக்காரர்கள்தானே..

ஆமாம்..

சரி, ஆக 10 ஆயிரம் பேருக்கும் நல்ல தண்ணீர் வேண்டும், நல்ல சாலை வேண்டும், நல்ல உணவு பொருட்கள் வேண்டும். நல்ல உடை, வாகனம் வேண்டும் அல்லவா ?

ஆமாம்...

இவற்றை உற்பத்தி செய்ய தொழில் தொடங்க வேண்டும்.

ஆமாம்...

தொழில் தொடங்க பணம் வேண்டும்.

கரெக்ட்.

இப்போ  அந்த நாட்டில் யாரிடம் பணம் உள்ளது ?

அந்த 3000 பேரிடம்.

குட்.

அப்போ அவர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்குகிறார்கள்.

சரி..

தொழிற்சாலை தொடங்கினால் மட்டுமே போதுமா ? அதில் உழைக்க ஆள் வேண்டுமே ?

கரெக்ட்..

அப்போ மீதமுள்ள  7 ஆயிரம் பேரையே வேலைக்கு அமர்த்துகிறார்கள்.

ஆகா நல்ல விஷயம்தானே ..அத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறதே...

உடனே முடிவுக்கு வராதே...இதையும் கேள். இப்போ  அந்த நிறுவனங்களில் பணி புரியும் 7000 பேருக்கும் மாசம் ஒரு ஆளுக்கு 1000 ரூபாய் சம்பளம்.

சூப்பர் அண்ணே...நல்ல சம்பளம்தான்..

ஆமாம் நல்ல ..சம்பளம்தான். இப்போ அந்த நிறுவனங்கள்ல உற்பத்தி செய்யற நல்ல தண்ணீர், உடைகள், உணவு பொருட்களை எல்லாம் யார் வாங்குவாங்க ?

ம்ம்..ம்ம்ம்ம்...அந்த நாட்டுல உள்ள பத்தாயிரம் பேரும்தான்.

எக்சல்லண்ட்... சரி பத்தாயிரம் பேர்ல 3000 பேர் முதலாளிகள், பணக்காரர்கள். மீதமுள்ள 7000 பேர் தொழிலாளிகள் அதாவது 3000 பேரைவிட ஏழைகள்.

கரெக்ட்...

இப்போ இந்த 7000 பேர் அந்த பொருட்களை வாங்கணும்னா பணம் செலவு செய்யனுமா ?

ஆமா..இதென்ன கேள்வி...

அவங்க எந்த பணத்துல இருந்து செலவு செய்வாங்க....

என்னண்ணே சின்ன புள்ளதனமா கேள்வி கேட்டுட்டு....அதுதான் சம்பளமா வாங்கறாங்களே...

வெரி குட். அப்போ அவங்க வாங்கற  ஆயிரம் ரூபாய் சம்பளத்துல இருந்து மாசம்தோறும் சுமார் 750 ரூபாய் செலவு செஞ்சு அந்த பொருட்களை, வசதிகளை வாங்கறாங்க இல்லையா...

ஆமாம்....

அப்படியானா  7000 பேரோட 750 ரூபாய் எங்க போகுது..?

7000 இண்டூ 750...  52 லட்சத்து 50 ஆயிரம்னே......அது அந்த நிறுவனங்களுக்குத்தான்  போய் சேருது...

அந்த நிறுவனங்களோட முதலாளிகள் யார் ?

அந்த 3000 பேர். ..

எக்சல்லண்ட்...

இப்ப யார் பணக்காரர்களாவே இருக்காங்க ?

அந்த 3000 பேர்.

யார் எழைகளாவே இருக்காங்க

அந்த 7000 பேர்....

இப்போ புரியுதா ..நீ கேட்ட கேள்விக்கு பதில் ?

சரி..இதை சரி செய்ய என்ன செய்யணும் ?

என்ன செய்யணும் அந்த 3000 பேரிடம் மட்டுமே உள்ள சொத்துக்களை எல்லாம் அரசு எடுத்துக்கிட்டு 10000 பேருக்கும் சமமா நல்லது செய்யணும்...

அது நடக்குமாண்ணா....

இதை சொன்னா கம்யுனிஸ்ட்னு சொல்லுவாங்க. ஆனா அது இல்ல. எந்த சித்தாந்தமும் சாராம சாதரணமா சிந்திச்சாலே இந்த உண்மை புரியும். பொருளாதார நிபுணர்களே சொல்ற தீர்வு இதுதான்.

சரிண்ணே...அந்த 3000 பேர் மட்டுமே எப்படின்னே பணக்காரங்களாவே  இருக்காங்க ? யாரும் கேட்க மாட்டாங்களா ?

3000 பேர் பணக்காரங்க, 7000 பேர் ஏழை..இது கடவுள் கிருபை, விதின்னு சொல்லிட்டா ?

ஆமா..நம்ம பாட்டுக்கு நம்ம வேலைய பார்க்க போயிடுவோம்...

இப்படித்தான்யா இத்தனை 100 ஆண்டுகளா ஓடுது வாழ்க்கை..

படித்ததும் மனதில் பதிந்ததும்...

உங்கள் பார்வைக்கு...

Saturday 27 February 2016

சுவாமி விவேகானந்தர்

🎁 சுவாமி விவேகானந்தர் 🎁
🌿கடலில்  இருக்கும்  அத்தனை  நீரும்  ஒன்று  சேர்ந்தால்  கூட  ஒரு  கப்பலை  மூழ்கடிக்க முடியாது.

கப்பலுக்குள்  புகுந்தால்  மட்டுமே  அது  சாத்தியம்.

" வாழ்வின்  எந்த  பிரச்சனையும்  உங்களை  பாதிக்கவே  முடியாது  நீங்கள்  அனுமதித்தால்  தவிர "

🌿 நமக்கு  நாமே  செய்து கொள்கின்ற  துன்பத்தை  தவிர  வேறு  எந்தத்  துன்பமும்  நம்மை  அணுகாது.

🌿நாம்  செய்யும் செயல்  எதுவாயினும்  நமது  முழு மனத்தையும்  அதில்  செலுத்த  வேண்டும்.

🌿 இந்த  உலகம்  மிகப்பெரிய  ஓர்  உடற்பயிற்சிக்  கூடம். இங்கு  நாம்  நம்மை  வலிமையுடையவர்களாக்கி கொள்வதற்காக  வந்திருக்கிறோம்.

🌿உனது  எதிர்காலத்தை  நீயே  உருவாக்கு. ஏற்கனவே  நடந்து  முடிந்ததைக்  குறித்து  வருந்தாதே. எல்லையற்ற  எதிர்காலம்  உன்  முன்னால்  விரிந்து  பரந்திருக்கிறது. உன்னுடைய  ஒவ்வொரு  சொல்லும்  சிந்தனையும்  செயலும், அதற்கு  ஏற்ற  பலனைத் தரும்.

🌿நீங்கள்  எந்த  பிரச்சினையையும் சந்திக்காமல்  அமைதியாக  சென்று  கொண்டிருந்தால், உங்கள்  வாழ்க்கையில்  நீங்கள்  தவறான  பாதையில்  சென்று  கொண்டிருக்கிறீர்கள்  என்று  அர்த்தம்.

🌿 சரியான  உற்சாகத்தோடு  வேலை  செய்ய  ஆரம்பித்தால்  வெற்றி  நிச்சயம்.

🌿 இதயம்  சொல்வதையை  செய். வெற்றியோ, தோல்வியை  அதை தாங்கும்  வலிமை  அதற்கு  மட்டுமே  உண்டு.

🌿இந்த  உலகில்  நீங்கள்  வந்துள்ளதால்  உங்கள்  முத்திரை  ஒன்றை  விட்டுச்  செல்லுங்கள்....🌹🌹🌹

விட்டுக் கொடுத்தல்

விட்டுக் கொடுத்தல்:-
      சாக்ரடீஸுக்கு நீதிபதிகள் ஒரு  வாய்ப்பு  அளித்தார்கள். அவர் ஏதென்ஸை விட்டுச் சென்றுவிட்டால், ஏதென்ஸுக்கு வெளியில் வசித்தால் மரணதண்டனையிலிருந்து தப்பிக்கலாம். எவருமே, "இது ஒரு  எளிய விட்டுக் கொடுத்தல், ஏதென்ஸின் எல்லைக்கு வெளியே  நீங்கள்  வசிக்கலாமே" என்றுதான்  கூறுவார்கள். ஏனெனில்  அந்த நாட்களில் நகர மாகாணங்கள் மட்டுமே  இருந்தன. ஒவ்வொரு நகரமும் ஒரு மாநிலமாக இருந்தது. அந்த எல்லைக்கு வெளியே வாழ்ந்தால் நீங்கள்  மாநிலத்திற்கு வெளியே  வந்து  விடுவீர்கள்.  அவர் அவ்வாறு  நகரைச் சுற்றியுள்ள  இடங்களில்  வாழ்ந்திருக்கலாம். ஆனால்  சாக்ரடீஸைப் போன்ற மனிதர்கள் பிடிவாதக்காரர்கள்.
        "நான்  தப்பிச் செல்வதைவிட மரணமடைவதை விரும்புகிறேன்.  எனினும்,  எனக்கு வயதாகி விட்டது. இன்னும் எத்தனை காலம்  நான்  வாழப் போகிறேன்?  இன்றைய நாட்களின் மிக நாகரிகம் வாய்ந்த நகரம் என்னைச் சகித்துக் கொள்ளவில்லை என்றால் வேறு யார் என்னைச் சகித்துக் கொள்ளப் போகிறார்கள்?  வேறு எங்கும்  மரணமடைவதை விட ஏதென்ஸில் இறப்பது மேல். குறைந்தபட்சம்   ஆதி நாகரிகம் வாய்ந்த மக்களால் நான் கொல்லப்படுகிறேன என்ற  ஆறுதலாவது எனக்குக் கிடைக்கும்" என்றார்  சாக்ரடீஸ்.
         நீதிபதிகள்  அவரை எப்படியாவது காப்பற்றப்பட வேண்டும்  என்று  முயன்றார்கள். ஏனெனில்  அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. கூட்டம் அவர் கொல்லப்பட வேண்டும்  என்று விரும்பியது. அவர் இளைஞர்களைக் கெடுத்துக் கொண்டிருந்தார்.
         இப்போது, உலகத்திற்குப் புதிய சிந்தனைகளைக் கொண்டு வருகின்ற எவர்மேலும் இளைஞர்களைக் கெடுப்பதாகக் குற்றம்  சாட்டலாம். ஏனெனில்  அவரது கருத்துக்கள் நிச்சயமாகப் பழைய கருத்துக்களுக்கு எதிராக இருக்கும்.  பழைமைக்கு எதிராக அவர் போராடுவார். நீங்கள்  அதைக் 'கெடுப்பது' என்று  கூறலாம்.  அவர் நமது பாரம்பரியத்தை, மதத்தை, பண்பாட்டைக் கெடுக்கிறார்.
        நீதிபதிகள் மற்றொரு பரிந்துரையை முன்வைத்தனர். "நீங்கள்  தொடர்ந்து  ஏதென்ஸில் இருக்கலாம். ஆனால்  உண்மையைப் பற்றி பேசுவதை நிறுத்தி  விடுங்கள் ".
        அதற்கு சாக்ரடீஸ்,  "நீங்கள்  என்னைச் செய்ய முடியாத காரியத்தைச் செய்யச் சொல்கிறீர்கள். நான்  உண்மையைப் பற்றி, உண்மையைப் பற்றி மட்டுமே  எனது இறுதி  மூச்சுள்ளவரை பேசுவேன்.  என்னைப் பொய்கள் சொல்லச் சொல்கிறீர்களா? அல்லது  என்னைப் பேசவே  வேண்டாம் என்கிறீர்களா? அதுவும்   கூட ஒரு பொய்தான். ஏனெனில்  எனக்கு உண்மை தெரியும்.  அதை நான்  பேசவில்லை.  அந்தப் பொய் மனிதர்களின்  மனதில் பரவிக் கொண்டு இருக்கிறது.  முடியாது. நான்  இங்கேதான் இருப்பேன், உண்மையைத்தான் பேசுவேன்.
          "நீங்கள்  என்ன வேண்டுமானாலும்  செய்து  கொள்ளுங்கள்.  நீங்கள்  என்னைக் கொன்று போடலாம். ஆனால்  நான் விட்டுக் கொடுத்துச் சமரசமாகப் போக மாட்டேன் " என்றார்.
          உங்களது தனித்தன்மையை, மெய்ம்மையைக் கண்டு பிடியுங்கள்.  விட்டுக் கொடுத்துப் போகாமலிருக்க முயற்சி  செய்யுங்கள்.  ஏனெனில்  நீங்கள்  எந்த  அளவுக்கு  விட்டுக் கொடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு  உங்கள்  தனித்தன்மையை இழக்கிறீர்கள். நீங்கள்  ஒரு  பெரிய யந்திரத்தின் ஒரு  சிறு பாகமாக ஒரு  கூட்டத்தின் பகுதியாக இருக்கிறீர்கள்.  உங்களது சொந்த அழகுடன் சொந்த உரிமையில் ஒரு  தனி நபராக இருப்பதில்லை.
         நான்  விட்டுக் கொடுப்பதை முழுமையாக  எதிர்க்கிறேன்.  விட்டுக் கொடுத்துச் சமரசம் செய்து  கொண்டு வாழ்கின்ற ஒரு வாழ்க்கையை  விட மரணம் மேலானது.

மன அழுத்தங்கள்

மின்னலென வந்து செல்லும் மன அழுத்தங்கள்

அன்றாட வாழ்க்கையில் நம்மைக் கடந்து செல்லும் சின்னச் சின்ன மன அழுத்தங்கள் பற்றி நாம் அவ்வளவாய்க் கண்டுகொள்வதில்லை.

ஒரு நாளில் பல முறை விநாடி நேரங்களில் வந்து மறையும் மன அழுத்தங்கள் ஏராளம்.

பெரும்பாலும் இத்தகைய மனஅழுத்தங்கள் வெளிப்படுத்த முடியாத கோபங்களால் ஏற்படுபவை. 

ஏனெனில் இவை யாரென்றே தெரியாத மூன்றாம் மனிதர்களோடு ஏற்படும் கோபங்கள்.    மூன்றாம் மனிதர்களிடம் கோபத்தை எப்படி வெளிப்படுத்த இயலும்?  எனவே இந்தக் கோபங்கள் சின்னச் சின்ன உணர்ச்சி முடிச்சுகளாக மாறி மனதில் பதிந்து அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

சில உதாரணங்கள்

உங்கள் இரு சக்கர வாகனத்தில் பயணத்திக் கொண்டிருக்கிறீர்கள்.  ஓரிடத்தில் போக்குவரத்து நெரிசல்.  நகருவதற்கு இடமில்லை. உங்கள் பின்னால் நிற்கும் பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கிறார்.   இப்போது மனதிற்குள் அவரை “காட்டுமிராண்டிப் பய” என திட்டித் தீர்க்கிறீர்கள்.  ஆனால் இந்தக் கோபத்தை பெரும்பாலும் வெளியில் காட்ட இயலாது.

மதிய உணவிற்குப் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என படுக்கைக்குச் செல்கிறீர்கள்.  உங்கள் வீட்டருகில் உள்ள மின்கம்பத்தில் கட்டப்பட்ட ஒலிப்பெருக்கி காதைப் பிளக்கிறது.   ஏதோ ஒரு கட்சி மீட்டிங் நடக்கவிருக்கிறதாம்.  உங்கள் உறக்கத்தை, அமைதியைக் கெடுத்த அந்தக் கட்சித் தொண்டர்களின் மீது ஆத்திரமாய் வருகிறது.   ஆனால் இதை வெளியில் காட்ட இயலாதே.  என்ன செய்வது?

பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்யும்போது அருகில் அமர்ந்திருக்கும் ஒரு குண்டான நபர் உங்கள் இருக்கையில் கால்பங்கையும் அவரே ஆக்கிரமித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.  நீங்கள் ஒப்புக்கு அமர வேண்டிய சூழ்நிலை.  பார்த்தால் ரௌடி போல் தெரிகிறது.  ஏதாவது சொன்னால் சண்டைக்கு வருவாரோ என பயப்பட்டு, உங்களில் எழுந்த கோபத்தை அடக்கி வைக்கிறீர்கள்.

நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறீர்கள்.  ஓட்டல் அறையில் உங்களுக்கு அவ்வளவாய் அறிமுகமில்லாத நண்பரின் நண்பரோடு தங்குமாறு நேருகிறது.  அவருடைய குறட்டைச் சப்தத்தால் உங்களால் இரவு முழுவதும் உறங்க முடியவில்லை.  அவரை எழுப்பிச் சொல்லவும் முடியவில்லை.  இப்போது ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பை யாரிடம் எப்படிக் கொட்டித் தீர்ப்பது?  (பிற்பாடு உங்கள் நண்பரிடம் புலம்பித் தீர்ப்பீர்கள் என்பது வேறு விசயம்)

அவசரமாய் நீங்கள் நடந்துசெல்லும்போது அல்லது மாடிப் படியிறங்கும்போது, உங்களுக்கு வழி விடாமல் ஆடி அசைந்து செல்லும் இருவர் மீது ஏற்படும் சினத்தை என்ன செய்வது?

இவைகளுக்கான தீர்வு என்ன? 

இவற்றை எப்படிக் கையாள்வது?

இவைகளால் நேரும் தீமை என்ன?

இன்னும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த இத்தகைய நிகழ்வுகள் எவை.  

Friday 26 February 2016

யார் மேதை? யார் முட்டாள்?

யார் மேதை? யார் முட்டாள்?
******************************

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார். பல மன்னர்கள் தங்கள் நாட்டுப்பொருளாதாரத்தை சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப்பார்த்து கிண்டலாகச்சொன்னார் “ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக்கேட்டால், அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் “தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான் “தங்கம்”. அவர் கேட்டார் “பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான் “தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக்கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்து இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக்கொள் என்பார். நான் உடனே வெள்ளியை எடுத்துக்கொள்வேன். உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்து கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக்கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்…!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம். மற்றவர்கள் அதைப்பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்!

மன இறுக்கமும் ஓய்வும்-

மன இறுக்கமும் ஓய்வும்- ஓஷோ- பகுதி-5

நான் மலைப்பிரதேசங்களில் ஜிப்ரிஷ் தியானத்தை நடத்தும்போது ……….இந்த தியானத்தை நகரங்களில் அனுமதிப்பது கடினம். ஏனெனில் உங்களுக்குப் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அவர்கள் உடனே காவல்துறைக்கு தொலைபேசியில், எங்களது முழு வாழ்க்கையும் நாசமாகிக் கொண்டிருக்கிறது. என்று புகார் கொடுத்துவிடுவார்கள். அவர்களும் அவர்களுடைய வீடுகளில் இந்த தியானத்தைச் செய்தால், இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பைத்தியகாரத்தனத்திலிருந்து வெளிவந்து விடலாம் என்பதை அந்த பக்கத்து வீட்டு மக்கள் அறிய மாட்டார்கள். அவர்களது பைத்தியகாரத்தனமே முதலில் அவர்களுக்குத் தெரியாது.

ஜிப்ரிஷ் தியானம் என்பது ஒவ்வொருவரும் தங்களது மனதிற்குள் என்னவெல்லாம் வருகிறதோ, அதையெல்லாம் சத்தமாக வெளியே சொல்வதற்கு அனுமதிப்பதாகும். மேலும், இப்படி மக்கள் சம்பந்தம் இல்லாமல் முட்டாள்தனமாக உளருவதைக் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஏனெனில் அப்போது நான் மட்டுமே சாட்சியாக இருப்பேன். மக்கள் எல்லாவிதமான விஷயங்களையும் செய்து கொண்டிருப்பார்கள். மேலும், இதில் உள்ள ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், நீங்கள் வேறு யாரையும் தொடக் கூடாது என்பதுதான். நீங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்கள் செய்யலாம் – சிலர் தலைகீழாக நின்றுகொண்டிருப்பார்கள், சிலர் தங்களது ஆடைகளை கழற்றி எறிந்துவிட்டு நிர்வாணமாக இருப்பார்கள், சுற்றிலும் ஓடிக் கொண்டும் இருப்பார்கள். அந்த ஒருமணி நேரமும் இப்படி இருப்பார்கள்.

அப்போது, ஒருவர் எனது முன்னால் உட்கார்ந்திருப்பது வழக்கம். அவர் ஒரு பங்குச் சந்தை தரகரோ அல்லது வேறு எதுவோ தெரியாது. ஆனால், தியானம் ஆரம்பித்த உடன், முதலில் அவர் சிரிப்பார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை நினைத்து அவரே சிரிப்பார். அதன்பின்னர், தனது தொலைபேசியை எடுத்து ஹலோ, ஹலோ…. என்று பேசுவார். அவரது ஓரக்கண்ணால் என்னையும் பார்த்துக் கொண்டே இருப்பார். நானும், அவரது தியானத்தை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து விடுவேன். அவர் தொலைபேசியில் அவரது பங்குச் சந்தை பங்குகளை விற்பார், வாங்குவார்….. அந்த ஒருமணி நேரமும் அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டே இருப்பார்.

ஒவ்வொருவரும் இதுவரை தாங்கள் உள்ளடக்கி வைத்திருந்த விநோதமான செயல்களைச் செய்வார்கள். அந்த தியானம் முடியும்போது, அதில் பத்து நிமிட ஓய்வு இருக்கும். மேலும், அப்போது அந்த பத்து நிமிடத்தில் அந்த மக்கள் முற்றிலும் களைப்பாக இருப்பதால் எந்தவிதமான முயற்சியும் இல்லாமல் கீழே படுத்துக் கிடப்பதைக் காண முடியும். எல்லா குப்பைகளும் வெளியேற்றப் பட்டு விட்டதால், அவர்களுக்குள் ஒரு சுத்தமான தன்மை உருவாகிவிடுவதால், அவர்கள் ஓய்வுடன் இருப்பார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பார்கள். ஆனால், உங்களால் அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

மக்கள் என்னிடம் வந்து, அந்த பத்து நிமிடத்தை இன்னும் கொஞ்சம் நீட்டியுங்களேன். ஏனெனில் எங்களது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு ஓய்வு நிளையை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தது. விழிப்புணர்வு என்றால் என்னவென்று நாம் எப்போதாவது புரிந்துகொள்வோம் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததேயில்லை. ஆனால் அந்த விழிப்புணர்வு வருவதை எங்களால் உணர முடிந்தது. என்று கூறுவார்கள்.

உற்சாகம் தற்காலிகமானது. எப்போதும் உற்சாகத்திலேயே இருந்து விட முடியாது. அப்படி இருந்தால் இரத்த அழுத்தம் ஏறிவிடும். ஆளே காலியாகி விட வேண்டியது தான்!
குறிப்பிட்ட அளவுக்கு ஏறிவிட்டால், அப்புறம் இறங்குமுகம் தான். மேலும் கீழுமாகவே போய் வரும் உற்சாகம். சோகத்தில் வீழ்ந்து விட்டால் மனம் உற்சாகம் தேடும்..... சாதாரண வாழ்வின் ஓட்டம் இதுதான்.
ஆனால், தியானத்தின் மூலம் நிறைவு பெற்று விடும் போதும் உள் பிரதேசத்தில் அமைதி ஏற்படும்போது, எதுவுமே அசையாத போது, காலம் நின்று விடும் போது. ....ஆரம்பத்தில் அற்புதமான பரவச நிலை தோன்றும். அது வெறும் உற்சாகமன்று. பழகப் பழக ஆரம்பப் பரவசம் தோன்றாது. ஆனால், அது மந்தமும் அல்ல, எல்லாம் நின்று போன நிலையும் அல்ல. அது இயல்பு. அப்படித்தான் அது ஆகும்.
அதனால், உன்னுடைய நிறைவை, அமைதியை, மெளனத்தை, மகிழ்ச்சியை எப்படிப் பார்ப்பது என்று கலையை நீ கற்றுக் கொள்ள வேண்டும். நேற்றிருந்தது போல அது இன்றிருக்காது. இறந்த காலத்தைச் சுத்தமாய் மறந்து விட நீ கற்றுக் கொள்ள வேண்டும்.
சரியாக சொன்னால், இறந்த காலத்தில் நீ இறந்து விட வேண்டும். அப்போதுதான், உனது நிறைவும், அமைதியும், பரவசமும் புத்தம் புதிதாய், இப்போது கண்டு கொள்ளப்பட்டது போல் இருக்கும்.
ஒவ்வொரு இறந்த காலக் கணத்திலும் இறந்து போ!
ஒவ்வொரு புதிய நொடியிலும் புதிதாய்ப் பிற. மறுபடியும். ....மறுபடியும். .....
ஒவ்வொரு கணமும், இறப்பாகவும், புத்துயிர்ப்பாகவும் மாறி விட வேண்டும்.
செத்துப் பிழைக்கும் கலையைக் கற்றால்தான் பெற்றவை நிலைக்கும். இல்லாவிட்டால் சலிப்புதான். எதுவும் மாறாமல், ஒன்றே திரும்பத் திரும்ப நிகழ்வதாய்த் தோன்றும்.
மாற்றங்கள் மூலமாக உங்கள் இலட்சக் கணக்கான முன் வாழ்வுகளை வாழ்ந்திருக்கிறீர்கள், ஏதாவது உற்சாகம் ஏற்படும் என்ற நம்பிக்கையில். இனிப் புதிய கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும். உமது இருப்பில் இனிய புதிய பரிமாணம் திறக்கும்----நிரந்தரத்தில் எப்படி வாழ்வது என்பது.
தற்காலிகமான மாற்றங்கள் மூலமே வாழ்வை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் , அவை நிலையற்றவை. மாறாத, நிரந்தரம் என்ன, பரிபூரண அசைவின்மை என்ன, கால வெளியைக் கடந்து என்ன என்பதை இனிக் கற்றுக் கொள்ளுங்கள். அது புதிய கலை.
இந்தக் கலையைக் கற்ற பிறகு, உங்கள் நினைவில் நித்தமும் புது மலர்கள் பூக்கும். உங்கள் மெளனத்தில் புதிய விண்மீன்கள் உதிக்கும். பரவச மழை பெய்யும். ஆனால், நீங்கள் நேற்றைத் தினங்களை மறக்க வேண்டி வரும். இல்லாவிட்டால், ஒன்றே திரும்பத் திரும்ப வருவது போல் தோன்றும்.
எனக்குச் சலிப்பில்லை......நான் நிறைவில் வாழ்ந்தவன். பரிபூரண அமைதியில் வாழ்ந்தவன். எனக்குள் எதுவும் அசைவதில்லை. எல்லாம் முழுமையாக, அமைதியாக, அசையாமல் இருக்கின்றன. நான் நேற்றை நினைக்காததால்தான் அப்படி. போனது போனதுதான். நான் திரும்பிப் பார்ப்பதே இல்லை-----ஒவ்வொரு கணமும் நிறைந்த பரவசமே, எனக்கு. அதே நிறைவு, அதே அமைதி, அதே மெளனம். நான் இறந்தக் காலத்தைக் கை கழுவிக் கொண்டே இருப்பதால், எனக்கு எல்லாமே புதிது.
என்றும் புதிதான நிரந்தரத்தைப் பெறும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள். சாஸ்வதக் கண்ணாடி மீது புழுதிபடிய விடாதீர்கள்.

கவலைப்படுகிறவர்களுக்கே உற்சாகம் தேவை. உற்சாகமில்லாமல் அவர்களால் வாழ முடியாது. கவலை அவ்வளவு கனம்! சின்னதாய் ஓர் உற்சாகம், புதியதாய்ச் சிறிது காதல், ஒரு லாட்டரி கடை திறப்பு--- போன்றவைதாம் அவர்கள் தொடர்ந்து வாழத் தூண்டுதல்.
சிரமப்படும் வாழ்வில், சின்னச் சின்ன உற்சாகங்கள் மசகு எண்ணெய் போல. இன்னொரு உற்சாகத்தை எதிர் பார்த்து வாழ்வை நகர்த்தலாம்.
உங்களது உற்சாகங்கள் என்ன? புதிய வீட்டிற்குக் குடி போவதால் உற்சாகம் வருமா? புதிய கார் வாங்கினால் உற்சாகம் வருமா?
நான் கேள்விப்பட்ட நிகழ்ச்சி ஒன்றைச் சொல்கிறேன். அழகான வீட்டில் வாழ்ந்து வந்த ஒருவருக்கு அந்த வீடு சலித்து விட்டது. அந்த அழகான வீட்டிற்குப் பின்னால் ஓர் அழகான ஏரி இருந்தது. அதற்குப் பின்னால், காடும், மலைகளும். ஆனால் தினசரி அதே காட்சிதான். காலையும், பகலும், மாலையும் ஒரே காட்சி. சலித்துவிட்டது.
அதனால், அவர், ஒரு தரகரை அழைத்து, அதை விற்க ஏற்பாடு செய்யச் சொன்னார். தரகருக்கு வியப்பு. அவ்வளவு அழகான வீட்டை விற்பதா? எவ்வளவு மனோகரமான சூழல்! அந்த இடம் ஒரு சுவர்க்கம்! ஆனால், வீட்டுக்காரர் விற்றே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.
"சரி, உங்கள் இஷ்டம். பத்திரிகையில் விளம்பரம் செய்து, விற்று விடலாம்", என்றார் தரகர்.
மறுநாள், பத்திரிகையில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தார், வீட்டுக்காரர்.
"அழகான பளிங்கு மாளிகை. ஏரி சூழ்ந்த எழில் மனை. அருகில் பசுமை போர்த்தியக் காடு. நீல மலைச்சாரல். வீட்டைச் சுற்றி வளர்ந்திருக்கும் மரங்கள் வானத்தைத் தொடும். ..."என்றெல்லாம் கவித்துவம் வர்ணிக்கப்பட்டிருந்தது. விளம்பரத்தில் யார் பெயரும் இல்லை. ஒரு தொலைபேசி எண் மட்டும் காணப்பட்டது. அது அவரது தரகரின் எண்.
வீட்டுக்காரர் உடனே போன் செய்தார். "அந்த வீட்டைப் பேசி முடித்து விடுங்கள். அது எனக்கு வேண்டும், " என்றார்.
"அதை வாங்க முடியாது, ஐயா. அது உங்கள் வீடுதான், " என்றார் தரகர்.
"அட கடவுளே! என்ன கவித்துமான வர்ணனை! நான் இந்த ஏரியை மறந்தே போனேன். காடு, மலையெல்லாம் மறந்தே போயிற்று. நான் முதல் முதலாகக் குடி பெயர்ந்தபோது அந்த உற்சாகம் இருந்தது," என்றார் வீட்டுக்காரர்.
உற்சாகம் தற்காலிகமானது. எப்போதும் உற்சாகத்திலேயே இருந்து விட முடியாது. ஓஷோ