Tuesday 12 April 2016

ஜிபரிஷ் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது

ஜிபரிஷ் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என உனக்கு தெரியாமல் இருக்கலாம். அது ஜாபர் என்று பெயருடைய ஒரு சூஃபி ஞானியிடமிருந்து வந்தது. அதுதான் அவருடைய ஒரே தியானம். யார் அவரிடம் வந்தாலும் உடனே அவர் உம், உட்கார், ஆரம்பி என்பார். மக்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று தெரியும். அவர் பேசியதேயில்லை, அவர் எந்த சொற்பொழிவும் ஆற்றியதில்லை. அவர் மக்களுக்கு ஜிபரிஷ் தியானத்தை மட்டுமே கற்றுக் கொடுத்தார். உதாரணமாக புதிதாக யாராவது வந்தால் அவர் அவர்களுக்கு எப்படி ஜிபரிஷ் செய்வது என்று செய்து காண்பிப்பார். அரைமணி நேரம் அவர் எல்லா விதமான மடத்தனமான பேச்சுக்களையும் தானே உருவாக்கிய மொழியில், மொழியற்ற உளறலாக பேசிக் காண்பிப்பார். அவருடைய மனதில் என்ன வருகிறதோ அதை அவர் சொல்வார். அதுதான் அவருடைய ஒரே போதனை. அதைப் பற்றி தெரிந்த யார் வந்தாலும் அவர் உட்கார், ஆரம்பி என்றே சொல்வார்.
ஜாபர் பலர் முழுமையாக அமைதியடைய உதவியிருக்கிறார். எவ்வளவு நேரம் உன்னால் பேச முடியும் மனம் காலியாகியே தீரும். மெது மெதுவாக ஒரு ஒன்றுமில்லாதன்மை வந்து அமரும். அந்த ஒன்றுமில்லை தன்மையில் விழிப்புணர்வு ஒளிரும். அது எப்போதும் அங்கேயே இருக்கிறது. உன்னுடைய ஜிபரிஷ் தன்மையால் சூழப்பட்டு இருக்கிறது. இந்த ஜிபரிஷ் எடுக்கப்பட வேண்டும். அதுதான் உனது நோய்.
உடலைப்பற்றியும் இதுதான் பொருத்தமாக இருக்கும். உன்னுடைய உடலில் பதட்டம் இருக்கிறது. உனது உடல் செய்ய விரும்பும் இயக்கத்தை செய்ய உதவி செய். நீ அதை தடை செய்யக்கூடாது. அது நடனமாட விரும்பினால், குதிக்க விரும்பினால், ஓட விரும்பினால், தரையில் படுத்து புரள விரும்பினால் நீயாக அதை செய்யாதே. உடல் செயல் பட அனுமதித்துவிடு. உடலிடம் நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை சுதந்திரமாக செய் என்று கூறிவிடு. அப்போது நீ வியப்படைவாய். கடவுளே, உடல் இத்தனை விஷயங்களை செய்ய விரும்பியிருக்கிறது, ஆனால் நான் அதை அனுமதிக்க வில்லை. ஆகவேதான் இந்த பதட்டம் என்று உணர்வாய். ஆகவே இரண்டு விதமான பதட்டங்கள் இருக்கின்றன. உடல் பதட்டம், மனப்பதட்டம். தளர்வடைய ஆரம்பிப்பதற்கு முன் இரண்டும் விடுவிக்கப்பட வேண்டும். அதுதான் உனக்கு விழிப்புணர்வை வெளியே கொண்டு வரும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.