Friday 8 July 2016

வழிபாடு வலியுறுத்துவது சரணாகதியையே!

வழிபாடு வலியுறுத்துவது சரணாகதியையே!

நீங்கள் பார்ப்பதெல்லாம் உங்களுக்குள் ஓர் எதிரொலியை ஏற்படுத்தி விடும். ஆழ்ந்த பொருளில், நீங்கள், எதைப் பார்க்கிறீர்களோ அதுவாக  ஆகிவிடுவீர்கள். புத்தர் சிலைகள் எல்லாமே மற்றவர் இதயங்களில் கருணையை ஏற்படுத்தத்தான் அதுதான் அவரது உள்ளார்ந்த செய்தி. ‘உங்களிடம் கருணை இருந்தால், நீங்கள் எல்லாம் பெற்றவர்,’ என்று புத்தர் கூறினார். கருணை என்றால் என்ன? அது அன்பு அன்று. அன்பு, வரும்  போகும். கருணை, வந்தால் போகாது மற்றவரிடம் ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கும் நுட்பமான ஆசை அன்பில் மறைந்திருக்கிறது. ஆனால், கரு ணையில், கொடுப்பதற்கு யாரிடமும் எதுவும் இல்லை என்ற விழிப்புணர்வு அடங்கியிருக்கிறது. 

கருணையில், வேண்டிப் பெறும் எண்ணம் இல்லை. அந்த நிலையில் கொடுப்பதற்கான ஆசைகூட எழுவதில்லை. கருணையால் இதயத்தின் எல்லா  வாசல்களும் திறந்து கொள்ளும். இயல்பாகவே ஏதாவதொன்றை அது வினியோகிக்க ஆரம்பித்துவிடும். “நீங்கள் தியானம் செய்தாலும் வழிபாடு நடத்தினாலும் எவ்வித அமைதியைப் பெறுகிறீர்களோ, அதை உடனே மற்றவர்க்கு வழங்கி விடுங்கள்!” என்று புத்தர் கூறினார். “ஒரு கணம்கூட அதை சொந்தத்திற்காக வைத்துக் கொள்ளாதீர்கள். அப்படிச் செய்தால் நீங்கள் சமயவாதியே அல்ல. தியானத்தின் பிறகு உங்களிடம் நிறைய  மகிழ்ச்சி ஏற்பட்டால், தேவைப்பட்டவர்
களுக்கு வழங்கி விடுங்கள். உங்கள் இதய வாசல்கள் திறந்துகொள்ளட்டும்.

மகிழ்ச்சியெல்லாம் தேவையானவர்களை நோக்கிப் பாயட்டும். மலையிலிருந்து கீழே பாய்ந்து வரும் தண்ணீர்போல,” என்றார் அவர். “மாபெரும் கருணையே இறுதி விடுதலை’’ என்றார் புத்தர். அதனால்தான் புத்தர் சிலைகள் கருணை வடிவில் உருவாக்கப்பட்டன. அந்தச்  சிலைகளின் முன்னால் அமர்ந்து வழிபடும் ஒருவர், அவரது கருணையின் ஒத்ததிர்வைத் தமக்குள் பெறுவார். ஆனால், புத்தர் சிலையை எவ்வாறு வழிபடுவது? உங்களுக்குத் தெளிவுபடுத்த ஒரு சான்றை விளக்குகிறேன். புத்தர் சிலையை வழிபட வேண்டு மானால், வழிபாட்டின் மையம் இதயமாக இருக்க வேண்டும். இது விளங்காவிட்டால், புத்தர் சிலையைப் புரிந்துகொள்ளவே முடியாது. ஏனென் றால், அதன் முக்கிய நோக்கமே உங்களுக்குள் கருணையை உருவாக்குவதுதான்.

கருணையின் மையம் இதயம்தான். அதனால், புத்தரை வழிபடுகையில், நமது விழிப்புணர்வு அவரது இதயத்தின்மேல் இருக்க வேண்டும். ஒரு பக்கம்  அவரது இதயத்தின் மேலும், மறுபக்கம் நமது இதயத்தின் மேலும் இரண்டு இதயங்களும் ஒரே தாளகதியில் துடிக்கும். ஆழத்திற்குள் நீங்கள் பாய்ந் துவிட வேண்டும்.
உங்கள் இதயத்திற்கும், புத்தர் சிலைக்கும் இடையில் ஒரு கயிறு பிணைக்கப்பட்டிருப்பதை உணரும் நேரம் ஒன்று வரும். உணர்வது மட்டுமல்ல,  அந்தச் சிலையின் இதயம் துடிப்பதை, உங்கள் திறந்த கண்களால் பார்க்கலாம். அது நிகழும்போது, அந்தச் சிலைக்கு உயிர் வந்துவிடுவதையும்  உணரலாம். இல்லாவிட்டால் அதற்கு உயிர்தான் ஏது? அதை வழிபடுவதில்தான் என்ன அர்த்தம்? உங்கள் இதயத் துடிப்பிற்கேற்ப, சரியான முறையில் தியானம் செய்தால், புத்தர் சிலையின் இதயம் துடிக்கும். 

இருவர் இதயத்திற்கும் ஓர் உறவு  நிலைபெறும். கண்ணாடியில் உங்கள் முகம் பிரதிபலிப்பது போலவே, உங்கள் இதயம், புத்தர் இதயத்தோடு இணைந்து துடிக்கும். உங்கள் இதயம் துடிப்பதை எப்போதாவது கண்ணாடியில் பார்த்திருக்கிறீர்களா? கண்ணாடி, வெறும் கண்ணாடிதான். அதன் முன்னால் தோன்றும்  எல்லா அசைவுகளையும் அது அப்படியே வெளிப்படுத்தும் என்று நீங்கள் கூறலாம். ஓர் ஆழமான சமய அடிப்படையில், சிலையும் ஒரு கண் ணாடிதான். அதனால், உங்கள் இதயமும், சிலையின் இதயமும் ஒன்றுபோலத் துடிக்கின்றன. இது நிகழும்வரை, அந்தச்சிலை ஒரு கல்தான். அதற்குள் உயிர் ஏற்றப்படவில்லை, என்று பொருள். புத்தர் சிலையை வழிபட விரும்பினால், மையம் இதயமாகத்தான் இருக்க முடியும். மகாவீரரை வழிபடும்போது மையம் வேறு. இயேசுவையே  வழிபட மையம் வேறு. கண்ணனுக்கு மையம் வேறு.

எல்லாச் சிலைகளும், வேறு வேறான மையம் கொண்டே சமைக்கப் படுகின்றன. ஒரு சமுதாயம், குறிப்பிட்ட சிலையொன்றைப் பல்லாயிரம் ஆண் டுகள் வழிபட்டு வந்தாலும், அதற்கு மையம் தெரிந்திருக்கும் என்று சொல்ல முடியாது. மையம் தெரியாதவரை அதற்கும் நமக்கும் தொடர்பு  ஏற்படாது. மலர் தூவி, தீபங்கள் கொண்டு வணங்கினாலும், அது வெறும் கல் வழிபாடுதான். அந்தக் கல், விக்கிரகம் ஆகவேண்டும்! அதைச் சிற்பி செய்ய முடியாது. நீங்கள்தாம் செய்ய வேண்டும். சிற்பி வடிவம் மட்டுமே கொடுக்கிறார். உயிர் கொடுப்பது யார்? பக்தர்தான் அதற்குள் உயிரைப் புகுத்த  வேண்டும். அதன்றி, அது வெறும் கல்தான். சிலை உயிர்பெற்ற பின்பே, வழிபாடு ஆரம்பமாக முடியும். சரி வழிபாடு என்றால் என்ன? ஒரு சிலைக்குள் உயிரைச் செலுத்த உங்களால் முடியுமானால், நீங்கள் வழிபாடு செய்வதாகப் பொருள்; அதாவது, உயிருள்ள விக்கிரகத்தை. இதை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்; ஒன்று உயிர் பெற்றவுடனே, வடிவுள்ளதும் வடிவற்றதும் அதற்குள் குடிகொண்டிருக்கும். அதன் உடல், வடிவம்,  உயிர், வடிவற்ற அம்சம். உயிருக்கு வடிவில்லை.

என் கை வெட்டப்பட்டால், என் உயிர் வெட்டப்பட்டு விடுவதில்லை. என்னை மனோவசியம் செய்தோ, மயக்க மருந்து கொடுத்தோ கையை வெ ட்டினால், வலி தெரிவதில்லை. எனக்குத் தெரியாமலேயே என் மூளை முழுவதையும் வெளியே எடுத்துவிடலாம். எங்கே உயிர் இருக்கிறதோ, அங்கே  உருவத்திற்கும் உருவில்லாததற்கும் ஓர் சந்திப்பு நிகழ்கிறது. பொருளுக்கு வடிவமுண்டு. பிரக்ஞைக்கு இல்லை. விக்கிரகம் கல்லாக இருக்கும் வரை அதற்கு வடிவம் மட்டுமே உண்டு. உயிர் இல்லை. பக்தர்  அதற்குள் உயிரை ஏற்றிய உடனே அது உயிர் பெற்று விடுகிறது. வழிபடுகிறவர் தமது இதயத்துடிப்பை, சிலையில் ஏற்படுத்தாதவரை, இறுதி நிலையின் இதயத் துடிப்பைத் தம்முள் உணர முடியாது என்பதை மறந்துவிட வேண்டாம். அளவுகோல் அதுதான். பக்தர் இதயம் சிலையில் துடிக்க, அதற்கு உயிர் வந்துவிடுகிறது. அப்புறம் அதற்கு வடிவமும் இருக்கிறது. வடிவற்றதற்கான வாயிலும் அதில் இருக்கிறது. அந்த வாயில் வழியாகப் பயணம் செய்வதே வழிபாடு.

உருவிலிருந்து உருவிலா நிலை நோக்கிச் செல்லும் பயணமே வழிபாடு. வழிபாட்டிற்குப் பல படிகள் உண்டு. ஒருவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை, ஒவ்வொரு தனிமனிதனும் சுயநோக்கு உள்ளவன் எ ன்பதுதான். இந்த உலகில் ‘நான் இருக்கிறேன்’ என்பதே மையமாக இருக்கிறது. அதுவே வாழ்க்கை முறையாக இருக்கிறது. ‘நிலவும் விண்மீன்களும் எனக்காகவே தோன்றுகின்றன. என் மகிழ்ச்சிக்காகவே பறவைகள் பறக்கின்றன. கதிரவனும் எனக்காகவே  ஒளி கொடுக்கிறான் உலகம் என்னைச் சுற்றியே சுழல்கிறது. நானே உலகின் மையம்.’ இப்படி நினைக்கும் மனிதனுக்கும் வழிபாடு தெரியாது. தானே உலகின் மையப்புள்ளி, உலகில் உள்ள மற்றவை எல் லாம் பரிதி வட்டம் என்று நினைப்பவன் இவன். வழிபாட்டில் நீங்கள் இதற்கு நேர்மாறா னதைத்தான் காண முடியும்: “நானே பரிதி வட்டம் மையப்புள்ளி வேறு யாரோ.”

சமய உணர்வு இல்லாத மனிதனின் தத்துவ அடிப்படையே, ‘நானே மையம், உலகம் வெளி எல்லை’ என்பதுதான். கடவுள் இருந்தால்கூட அவர்  எல்லையில்தான் இருக்க முடியும். “அவர் எனக்காகவே இருக்கிறார். நான் நோயடைந்தால், அவர் குணப்படுத்த வேண்டும். என் மகன் வேலையில் லாமல் இருந்தால், அவர் வேலை வாங்கிக்கொடுக்க வேண்டும். நான் விவகாரத்தில் மாட்டிக் கொண்டால், கடவுள் உடனே உதவிக்கு வரவேண் டும்.” -இதுதான் அவனது மனோபாவம். இந்த வகையான கடவுள் நம்பிக்கை, நாத்திகத்தைவிட மோசமானது. இப்படிப்பட்டவர், தாம் பேசுவதன் அர்த்தம் விளங்காமலேயே பேசிக்கொண்டிருப்பார். வழிபாட்டின் உண்மையான அர்த்தம். பிரார்த்தனையின் உண்மையான அர்த்தம், சமண உணர்வு கொண்டவராக இருப்பது, நீங்கள் வெளிவட்டக் கோடாக இருப்பதையும், பிரபஞ்ச இருப்பே மையப் புள்ளியாக இருப்பதையும் உணர்வதுதான். சிலையின் இதயம் உயிருடன் துடிக்க சிலை உயிர் பெற்று விட்டதாக ஒருவர் உணர்வார். உடனே வடிவிலாமை அதற்குள் பிரவேசித்துவிடும். ‘நான்  வெளி எல்லை. நான் உனக்காகப் பாடுவேன்; ஆடுவேன்; உனக்காக உயிர் வாழ்வேன்; மூச்சு விடுவேன் - என்னவெல்லாம் நிகழுமோ எல்லாம்  உனக்காக, மையத்திற்காக, என்ற உணர்வு பெறுவதுதான், வழிபாட்டின் அடிப்படை.

தோட்டாபுரி என்ற மகான் இராமகிருஷ்ணருடன் வாழ்ந்து வந்தார். “இன்னும் எத்தனைக் காலம் விக்கிரக ஆராதனை செய்யப் போகிறீர்கள்? உரு வை விட்டு, அருவம் நோக்கிப் பயணம் செல்ல வேண்டாமா?” என்று தோட்டாபுரி கேட்டார். அதற்கு இராமகிருஷ்ணர் தான் தயாராகத்தான் இருப்பதாகவும், ஆனால் தன் தாயிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று கூறினார்.  எவரிடமி ருந்தும் எதையும் கற்றுக்கொள்ள எப்போதும் தயாராக இருப்பவர் இராமகிருஷ்ணர்.
“எந்தத் தாயிடம்?” என்று கேட்டார் தோட்டாபுரி. “என் தாயிடம். காளி மாதாவிடம்.” என்றார் இராமகிருஷ்ணர். “அதைத்தானே சொல்ல வந்தேன். எத்தனைக் காலம்தான் காளியின் சிலையை வணங்கிக் கொண்டே இருப்பீர்கள்? அதற்கும் கல்லைத்தான் கேட்க வேண்டுமா?” என்றார் தோட்டாபுரி. “என்ன செய்வது! அவளிடம் கேட்பது தவிர, எனக்கு வேறு வழியே இல்லை! நான் அவளை வழிபட ஆரம்பித்த உடனே, அவள் மையப்புள்ளி  ஆகி விட்டாள். நாள் வெளிவட்டம் ஆகிவிட்டேன். நான் செய்வதெல்லாம் அவளுக்காகவே. அவள் உத்தரவின்றி, ஞானத்திற்குக்கூட அர்த்தமில் லை. அவள், நரகத்திற்குப் போகச் சொன்னாலும், போய்விடுவேன். ஆனால், அவளைக் கேட்காமல் எப்படி?” என்றார் இராமகிருஷ்ணர்.

தோட்டாபுரிக்கு அது விளங்கவில்லை. காளியை வணங்குவதை நிறுத்தக் காளியிடமே அனுமதி கேட்டால், அவள் எப்படி அனுமதி கொடுப்பாள்?  ஒருவரைக் கைகழுவி விட அவரிடமே அனுமதி கேட்போமா என்ன? ஒன்றை விட்டுவிடக்கூட அனுமதி தேவைதானா? அப்போது இராமகிருஷ்ணர் கோயிலுக்குள் போயிருந்தார். தோட்டாபுரியும் உள்ளே போனார். உள்ளே, இராமகிருஷ்ணர் கண்களில் கண்ணீர் பெருக நின்று கொண்டிருந்தார். அவளை வழிபடுவதை நிறுத்த அவளிடம் அனுமதி கேட்டுக் கெஞ்சிக்கொண்டிருந்தார்! ‘தோட்டாபுரி எனக்காகக்  காத்திருக்கிறார் அம்மா!’ என்றும் கூறினார். பிறகு, சட்டென அவர் மகிழ்ச்சியடைந்தார். நடனமாட ஆரம்பித்துவிட்டார்! அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த தோட்டாபுரி ‘என்ன  ஆயிற்று?’ என்று கேட்டார். “எனக்கு அனுமதி கொடுத்துவிட்டாள். இனி நான் உங்களிடம் பாடம் கற்றுக்கொள்கிறேன்,” என்றார் இராமகிருஷ்ணர்! வேறு ஒருவரை நீங்கள் மையமாகக் கொண்டிருந்தால், உங்கள் வாழ்வு சரணாகதி அடைந்த வாழ்வாகும். சரணாகதி வாழ்வையே வழிபாடு  வலியுறுத்துகின்றது. பரம்பொருளை வழிபடுவது என்பது, பரம்பொருளின் விருப்பப்படி வாழ்வது; இருப்பதும், நிற்பதும், உண்பதும், குடிப்பதும், பேசுவதும், மௌனமாக இருப்பதும் பரம்பொருளுக்காகவே அமைய வேண்டும்.

உருவமற்றது ஒருவரின் மையமாக அமைந்தவுடன், மர்மமான வெள்ளமொன்று பாய ஆரம்பித்துவிடும். ஒரு வகையான விரிவாக்கம் ஆரம்பமாகிவி டும். நம்மை நாமே சுருக்கிக்கொண்டு விட்டதால் - விதை வெடித்து முளை விடும்போது - அது மரமாக வளர ஆரம்பித்து விடும். நாம், ‘நான்  என்று இறுகிச் சுருங்கிவிடும். ‘நான்’ உடைந்து பிளவுபடும்போது, அந்தப் பிளவு வழியாக விதை முளை விட்டு வளர ஆரம்பிக்கும். விரிவாக்கம்  ஆரம்பமாகிவிடும். முளைத்தெழுவது உலகையே சுற்றி வளைத்துவிடும். சமயத்தில் நிறைய ஆச்சரியங்கள் உண்டு. ஆனால், அவை எவ்வாறு நிகழ்கின்றன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. காரணம்,  பிறப்பு முதல் நாம்தான் உலகத்தின் மையம் என்று நினைப்பதுதான். மயானத்தில் தம் சீடர்கள் சில காலம் செலவழிக்க வேண்டும் என்று புத்தர் சொல்வது வழக்கம். துறவறம் பூண்வதற்கு முன், மூன்று மாத  காலமாவது அங்கிருக்க வேண்டும். உங்களிடம் கற்றுக் கொள்ளத்தான் வந்தோமே தவிர, மயானத்திடம் அல்ல என்று அவர்கள் சொல்லலாம். ஆனால், புத்தர் விடமாட்டார். “பிணங்கள் எரியும் சுடுகாட்டில், ‘நான்’ என்பது சரணாகதி அடைந்துவிடும். அப்போது உன்னை அணுகுவது  எளிது. மூன்று மாதம் ஒவ்வொரு நாளும் எரியும் பிணங்களைப் பார்த்து வரும்போது, இந்த உலகம் உனக்காக மட்டும் இல்லை என்பது ஒருநாள்  புரியும். நீ இல்லாத போதும் உலகம் இருக்கும்.

எரியும் அந்தப் பிணம், உயிரோடிருந்த அந்த கடைசிக் கணத்திலும், உலகம் தனக்காகவே என்று நினைத்திருக்கும். அந்த மனிதன் இப்போது இல்லாதிருப்பதும்கூட உலகிற்குத் தெரியாது ஓர் அலை தோன்றி மறைந்ததைக் கடல் கவனிப்பதில்லை. “கவனித்துக்கொண்டே இரு. உலகம் உனக்காக இல்லை என்பதை உணரும்போது என்னிடம் வா அப்புறம் உண்மையான தியானம் ஆரம்பமாகிவி டும். நீ மையமாக இருக்கும் வரை உண்மையான வழிபாடு நடத்துவது சாத்தியமில்லை. பிரார்த்தனையோ, தியானமோ சாத்தியமில்லை. அதுவரை  மாயை மட்டுமே நிலைத்திருக்கும். மாயை மறைந்தால்தான் வழிபாடு ஆரம்பமாகும். ‘நான்’ மறைந்து, ‘தாங்கள்’ முக்கியத்துவம் பெறும்போது,  வழிபாடு தொடங்கிவிடும்,” என்பார் புத்தர். இதை நினைவில் வையுங்கள்: பக்தர், விக்கிரகத்தை மறையச் செய்யும்போது, வடிவிலாமைக்கான வாயில்கள் திறந்து கொள்கின்றன. அப்புறம் அவர் தன்னையே மறையச் செய்துவிடுகிறார். அப்போது ஆரம்பமாவது வழிபாடு. அந்த வாயில்கள், விக்கிரகத்தின் மூலம்  திறந்து கொள்ளும்போதுதான், ஆணவம் அழித்தல் எளிதாகும். அந்த வாயில்களை அவர் உணரும்போதுதான், அவரே, வடிவிலாமைக்கான  வாயிலாக முடியும் என்பதை உணர்வார். அவர் தமது சுயத்தை மறக்கும்போதுதான், ஆழத்திற்குள் பாய்வது சாத்தியமாகும்.

இரண்டு வடிவங்களுக்கிடையில் வேறுபாடு உண்டு. ஆனால், இது வடிவற்றதற்குப் பொருந்தாது. ஏனென்றால், வடிவற்றது ஒன்றே ஒன்றுதான்.  சிலை, வடிவம் இழந்துவிடும்போது, பக்தரும் வடிவம் இழந்து விடுகிறார். அப்புறம் ‘இரண்டு’ என்பது இல்லை. வடிவற்றதற்கும் எண்ணிக்கைக்கும்  எவ்வித உறவும் இல்லை. இதுதான் அடிப்படை. ஆனால், இந்த அடிப்படையைப் பயன்படுத்த, பலவிதமான வழிமுறைகளும், உத்திகளும் இருக்கின்றன. இது தொடர்பாக, சில விஷயங்களை  நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சூஃபிகள், ஒரு வழிபாடாகவே நடனத்தைக் கருதி, அதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்கள். மீரா, சைதன்யர் போன்ற பக்தர்கள், நடனத்திற்கு  மிகுந்த முக்கியத்துவம் தந்தவர்கள். இதை ஒரு வழிமுறையாக ஏற்றுக் கொண்டால் பல பக்தி ஒழுக் கங்கள்  உருவாக உதவும். நடனம் ஆடும்போது, நாம் உடலல்ல என்ற அனுபவம் ஏற்படுவதுதான் முதல் அம்சம். வேகமான அசைவுகளின் காரணமாக, நீங்களும், உடலும்  வேறுபட்டு விடுவீர்கள். எதார்த்தத்தில் உங்கள்  உடலுக்கும், உங்கள் பிரக்ஞைக்கும் ஓர் உறவு இருந்துகொண்டே இருக்கிறது. அது ஒரு நல்ல ஒழு ங்கமைப்புதான். அன்றாட வாழ்வில் இந்த உறவு உடைந்துபோவதே இல்லை.

குர்ட்ஜியெஃப் ஒன்றைக் குறிப்பிடுகிறார். ஒரு சிறு டின்னில் பல கூழாங்கற்களைப் போட்டுக் குலுக்கினால், கற்களின் இருப்பு நிலை மாறிப்  போகிறது. அடியிலிருப்பது, மேலேயும், மேலிருப்பது கீழேயும் போய்விடுகின்றன. நடுவிலிருப்பது, வேறுபக்கம் போய்விடுகிறது. எங்கோ இருந்தது  வேறு எங்கோ நகர்ந்து விடுகிறது. இவ்வாறு  அதனதன் நிலைகள் தாறுமாறாக மாறிப் போவதால் அவற்றின் ஆணவங்கள் அழிந்துவிடும். ஒவ்வொரு கல்லும், ‘நான் ஒன்றுமில்லை.’  என்றுதான் உணரும். நிலைகள் தடுமாறி, மாற நிகழ்வது இது. எனவே, மீராவும் சைதன்யரும் நடனத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்தார்கள். ‘டெர்லிஷ்’ நடனம் மிக ஆழ்ந்தது. அதில், மிக வேகமாகச் சுழன்று  சுழன்று ஆடுவார்கள். உடலின் ஒவ்வொரு கண்ணறையும் (செல்), தசை நார்களும் மிகுந்த அதிர்வுகளைப் பெறும். இதுதான், உடலுக்கும்  பிரக்ஞைக்கும் உள்ள உறவைத் தகர்ப்பது. அப்போதுதான், நடனமாடுகிறவர், தாமும் உடலும் வேறு வேறு என்பதாக உணர்கிறார். அதனால், நடனத்தைப் பயன்படுத்துவது, மிகவும் மதிப்பு வாய்ந்தது.

- See more at: http://m.dinakaran.com/aDetail.asp?Nid=4050#sthash.T4m1kpmj.dpuf

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.