Wednesday 28 October 2015

பாபநாசநாதர் கோவில் பாபநாசம்

🙏அகிலமெலாம் சிவமயம்🙏

அருள்மிகு பாபநாசநாதர் கோயில்
~~~~~~~~~~~~~~~~~

மூலவர் :- 
~~~~~
பாபநாசநாதர்

அம்மன்/தாயார்:-
~~~~~~~~~~
உலகம்மை, விமலை, உலகநாயகி

இருப்பிடம் :-
~~~~~~~~ திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் உள்ள பாபநாசத்திற்கு அடிக்கடி பஸ் இருக்கிறது.

பெயர்க்காரணம்:-
~~~~~~~~~~~
அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன்.

ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார்.

இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான்.

இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.

பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான்.

வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார்.

அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான்.

இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை "பாபநாசநாதர்' என்கின்றனர்.

இத்தலத்திற்கு "இந்திரகீழ க்ஷேத்திரம்' என்ற பெயரும் இருக்கிறது.

இந்தக் கோயிலின் சித்திரை விஷு மிகவும் பிரபலமானது.

அன்று தான் அகத்தியருக்கு ஈசன் தனது கல்யாணக் கோலத்தைக் காட்டி அருளினார் என்று சொல்கின்றனர்.

ஈசனின் திருக்கல்யாணத்தின்போது பூமிபாரம் தாங்காமல் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர, . . .

சமப்படுத்த வந்தார் அகத்தியர்.

பொதிகை மலைக்கு இங்கே இருந்த அகத்தியருக்கு ஈசன் சித்திரை விஷு அன்று தனது கல்யாணக் கோலத்தைக் காட்டி அருளியதாக ஐதீகம்.

மூலஸ்தான சந்நிதிக்குப் பின்னால் உள் பிரஹாரத்தில் அகத்தியருக்குக் கல்யாணக் கோலம் காட்டி அருளிய கல்யாண சுந்தரர், அம்பிகையுடன் ரிஷபாரூடராகக் காக்ஷி அளிக்கின்றார்.

அகத்தியர் தன் மனைவி லோபாமுத்திரையுடன் ஈசனை வணங்கிய கோலத்தில் காணப்படுவார்.

அகத்தியரின் சீடர் ஆன உரோமச முனிவர் ஈசனுக்கு தாமிரபரணிக்கரை ஓரம் கோயில்கள் எழுப்ப விரும்பி குருவை ஆலோசனை கேட்க,

ஈசனுக்கு வழிபாடு செய்த தாமரை மலர்கள் ஒன்பதை உரோமசரிடம் கொடுத்து அவற்றை ஆற்றில் வீசி எறியும்படி அகத்தியர் சொல்ல அப்படியே செய்கின்றார் உரோமசர்.

அவை ஒதுங்கிய ஒன்பது இடங்களிலே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து நவகிரஹப் ப்ரீதி ஸ்தலங்களாக ஆக்கினார்.

இங்கே உள்ள ஈசனுக்கு "முக்களா நாதர்" என்ற பெயரும் உண்டு.

மூன்று வேதங்களும் மூன்று களா மரங்கள் உருவில் ஈசனை வழிபட்டதாகவும் அதர்வ வேதம் ஆகாய ரூபத்தில் வழிபட்டதாகவும் சொல்கின்றனர்.

கருவறையில் ருத்ராக்ஷ வடிவில் ஈசன் காணப்படுவார்.

ப்ராஹாரத்தில் முக்களா மரத்தின் கீழ் காணப்படுகின்றார்.

""அம்பாள் பெயர் உலகம்மை""
இவள் சந்நிதி முன்பு "உரல்" ஒன்றும், "உலக்கையும்" உள்ளது.

கோயிலிலேயே விரலி மஞ்சள் கொடுக்கின்றனர்.

அதை இந்த உரலில் இட்டு இடித்துவிட்டு அதையே பிரசாதமாக எடுத்துக் கொண்டு வரலாம்.

இந்த மஞ்சள் பொடியினாலேயே அன்னைக்கு அபிஷேஹமும் நடக்கும் எனச் சொல்கின்றனர்.

இந்த அபிஷேஹ தீர்த்தமும் அருந்தினால் புத்திர பாக்கியம், திருமண பாக்கியம், தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று ஐதீகம்.

இங்கே தைப்பூசத்தன்று நந்திக்குச் சிறப்பு வழிபாடு சந்தனக்காப்போடு நடக்கிறது.

வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் தைப்பூசத்தன்று நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் ஆநந்த தாண்டவம் ஆடிய வண்ணம் ஈசன் காக்ஷி அளித்ததால் தைப்பூசத்துக்கு நந்திக்குச் சிறப்பு வழிபாடு.

நடராஜர் தனி சந்நிதியில் ஆநந்த தாண்டவக் கோலத்தில் காக்ஷி கொடுக்கிறார்.

இவருக்குப் புனுகு மட்டுமே சார்த்தப் படுகிறது.

இவரைப் புனுகு சபாபதி என்று அழைக்கின்றனர்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.