Sunday 31 July 2016

குரு

குரு
ஆதிகுரு தட்சிணாமூர்த்தி
எல்லாம் வல்ல இறைவன் முதன் முதலில் உயிர்களுக்கு தன்னை அடைய வழி காட்டி முதல் குருவாக – ஆதி குருவாக வந்த திறத்தினையும் அவர் கூறி அருளிய மோன உபதேசத்தினையும் இக்கட்டுரையில் காண்போம்.
புராதன காலத்தில் பிரம்ம புத்திரரகள் நால்வர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர்கள் பூரணத்துவம் பெறாமல் தவித்தனர்.
எல்லாம் வல்லவனை, எங்கும் நிறைந்தவனை, ஆதி அந்தமில்லா அருட் பெருஞ்ஜோதியினை, பரம் பொருளை, பிரபஞ்சகர்த்தாவை, ஒவ்வொரு அணுவுக்குள்ளும் அணுவாக ஒளிர்பவனை அறியவெண்ணாமல் வழி தெரியாமல் பரிதவித்தனர். வேண்டினர் பரமாத்மனிடம், மனம் உருகினர் மன்பதை உய்ய வழியை நாடி! தவித்தனர் செய்வதறியாமல்.
சனகாதிகளின் தவிப்பை உணர்ந்த சர்வேஸ்வரன் அருள்புரிய திருஉளம் கொண்டார். சனகாதி முனிவர்கள் முன் தோன்றினார். திடீரென்று தங்கள் முன் ஒரு உருவம் தோன்றியதை கண்டு திகைத்து நின்றனர். பரம்பொருளை – கடவுளை காண விரும்பினோமே. இப்படி ஒரு உருவம் முன் இருக்கிறதே! ஏன்? யார்? எதற்கு? என மிகவும் ஆச்சர்யத்துடன் தங்களுக்குள் வினவிக் கொண்டனர்.
கல்வி கேள்விகளில் கற்றுத் தேர்ந்த சனகாதிகள் ஒருவாறு யூகித்து அறிந்தனர். நாம் கடவுளை காண விரும்பினோமே, திடீரென்று தோன்றிய இவ்வுருவம் ஒன்றும் கூறாமல் நம்முன் இருக்கிறதே! கடவுளை காண அந்த கடவுளே நமக்கு வழிகாட்டத்தான் வந்த்திருக்கிறார் என யூகித்து அறிந்தனர்.
கடவுளை எல்லாம் கடந்தவனை அவ்வளவு எளிதில் காண முடியுமா என்ன? நாம் அதற்கு பக்குவமாக இருக்க வேண்டாமா? சனகாதிகளுக்கே இறைவன் நேரடியாக அருள்புரியவில்லை!?
சர்வமும் அறிந்த சனகாதி முனிவர்களுக்கு, அதன் மூலம் உலகுக்கே, இறைவன் முதன் முதலாய் குருவாக வந்து காட்சி கொடுத்து மோன உபதேசம் அருளினான்.
தன்னை அடைய குரு உபதேசம் பெற வேண்டியதன் முக்கியதுவத்தை இறைவனே சனகாதி முனிவர்களுக்காக தட்சிணா மூர்த்தியாக காட்சி கொடுத்தார். அதன் மூலம் மீட்சி பெற வழிகாட்டினார்.
தங்கள் முன் பேசாமல் , பாதி கண் திறந்த நிலையில் இடக்காலை மடக்கி வலக்காலை ஊன்றி அசுரனை மிதித்த நிலையில் கல்லால் மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் பகவானை கண்டனர். ஒரு கையில் தீயும் ஒருகையில் உடுக்கையும் ஒரு கையில் வேதமும் ஒரு கை சின்முத்திரையுடன் அருளும் நிலையும் இருக்கக் கண்டனர். நாற்கரமும் கண்டனர்.
சடா மகுட சிரசின் வலப்பக்கம் சூரியன், இடப்பக்கம் சந்திர பிறையுடன் , சாந்தம் தவழும் புன்னகை தவழும் அழகிய முகமும் கண்டனர். யோசித்தனர் – யுகித்தனர் ஒருவாறு உண்மையை உணர்ந்து கொண்டனர். அது என்ன?
ஆதிகுரு தட்சிணாமுர்த்தி தங்கள் முன் தோன்றியுள்ளது. தென் திசையான எமனிடமிருந்து மீள, மரணமில்லாத பேரின்ப பெருவாழ்வு பெற தென்திசை நோக்கி இருக்கும் ஆதி குரு தட்சிணாமுர்த்தியை நோக்கி நாம் வடதிசை நோக்கி அமரவேண்டும். தட்சிண பாகத்தை தென்திசையை நோக்கி அமர்ந்த மூர்த்தம் ஆனதால் தட்சிணாமுர்த்தி என்றனர் சனகாதி முனிவர்கள். ஆதிகுரு தட்சிணாமுர்த்தி ஒன்றும் பேசாமல் இருப்பதால் நாமும் ஒன்றும் பேசாது மௌனமாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தனர். இதுவே மோன நிலை.
இறைவன் தீயை சுமந்து தான் தீயாக அக்னியாக ஜோதி சொருபமாக இருப்பதாய் உணர்த்தினார். அது மட்டுமல்ல ஒளியான அவனோடு உடுக்கை ஒலி, ஓங்காரம் நாதமும் இருப்பதாகவும் உணர்த்துகிறார். அதாவது ஒளியும், ஒலியுமாக விந்து நாதமாக இருப்பவன்.
மற்றொரு கையிலுள்ள வேதங்கள் சொல்வது இதை தான். தட்சிணாமூர்த்தியான இறைவன் பற்றியும் , அவனை அடைய வழியுமே. நான்காவது கை அருள்பொழியும் சின்முத்திரை தாங்கிய கை. ஒலி சேர்ந்த ஒளியாக பரம்பொருள் சின்முத்திரையில் உள்ளார். சின்முத்திரை அறிந்து உணர்ந்து தவம் செய்க.
கண்ணை திறந்து பேசாது “சும்மா இரு” என்பதுவே தட்சிணாமுர்த்தி ஆதிகுரு சொல்லாமல் உணர்த்திய ஞான இரகசியம். வேதங்கள் சொல்லும் மறைபொருள், ஞான இரகசியம்! பரம்பொருளான இறைவன் பேரொளியானவர். ஒளியோடு ஒலியும் இணைந்துள்ளது. அது மனித தேகத்தில் சின்முத்திரையில் உள்ளது. சின்முத்திரை பிடித்தால் சும்மா இருந்தால் நாம் இறைவனை அடையலாம். சனகாதி முனிவர்கள் அறிந்தனர். உணர்ந்தனர். அடைந்தனர். உய்தனர்.
இதில் முக்கியமானது சின்முத்திரை. இதுதான் – மனித தேகத்தில் இறைவன் துலங்கும் இடம். நாம் தவம் செய்ய வேண்டிய ஸ்தலம். சும்மா இருக்க வேண்டிய இடம். இறைவன் தன் வலதுகை பெருவிரலில் மத்தியிலுள்ள கோட்டை ஆள்காட்டிவிரலால் மடக்கி தொட்டு , மற்ற விரலை நீட்டியபடி அருள்பாலிக்கிறார்.
சபரி மலை அய்யபனும் இந்த சின்முத்திரை காட்டியே அருள்புரிகிறார். சின்முத்திரை வைத்தபடியே கையை புரட்டி பார்த்தல் ஆள்காட்டிவிரலும் கட்டைவிரலும் கூடிய பகுதியானது நமது கண்போலவே தோன்றும். கட்டை விரலின் மேல் நுனியிலிருந்து ஆள்காட்டி விரல் தொட்டு உள்ள கோடு வரையிலுள்ள இடமே நம் கண் அளவு. ஆக சின்முத்திரை என்பது “கண்” என்பதை மறைமுகமாக பரிபாசையாக சூட்சமமாக யூகித்து அறிந்து கொள்ள வேண்டியே சொல்லப்பட்டது. உணர்த்தப்பட்டது.
கடோபநிசத்தில் நசிகேதன், மனித தேகத்தில் இறைவன் இருக்கும் இடம் யாது? என எமதர்மரஜனிடம் வினவ, அதற்கு எமன், இறைவன் கட்டை விரல் அளவான இடத்தில் புகை இல்லாத ஜோதியாக விளங்குகிறான் என்று பதில் கூறுகிறார். இதுவே ஆதாரம் இதற்கு.
நம் உடலில் கட்டைவிரல் அளவான இடம் என பரிபாசையாக கூறப்பட்டது நமது கண்ணையே. பேரொளியான அருட்பெரும் ஜோதியான இறைவன் புகையில்லாத ஜோதி. நம் கண்மணி உள் இருக்கும் சுயம் ஜோதி. எவ்வளவு பெரிய ஞான இரகசியம். இது தெரிந்தால் தானே தட்சிணாமூர்த்தி உணர்த்தியது போல கண்ணை திறந்து சும்மா இருந்து தவம் செய்ய முடியும்.
தட்சிணாமுர்த்தியாக ஆதிகுருவாக இறைவன் உணர்த்திய உபதேசம் கண்ணில் ஒளியை உணர்ந்து விழித்து சும்மா இரு என்பதுவே. “சும்மா இரு” என்பதுவே. சனகாதி முனிவர்கள் அதிபுத்திசாலிகள் ஆனதால் அறிவால் அறிந்தனர். ஆதிகுரு சொல்லாமல் சொன்னதால் , அறிவித்ததால் அறிந்து உணர்ந்தனர். இதுவே உண்மை, சத்தியம் என வேதமும் சித்தர்களும் பற்பல ஞானியரும் பறைசாற்றுகிறார்கள்.
சனகாதி முனிவர்களுக்கு மோனமாக உணர்த்திய ஆதிகுரு , அருணகிரிநாதருக்கு, முருகன் ஓர் அந்தணர் வடிவாக வந்து “சும்மா இரு” என்று சொல்லியே காத்தார்.!
இறைவன் நேரடியாக அருளவில்லை. குருவாக உபதேசித்து அருளினார். தன்னை அடைய குரு மிக மிக மிக முக்கியம் என்பதை உணர்த்தி , “சும்மா இரு” எனவும் உபதேசிக்கிறார். சும்மா இருந்து விழித்திருந்து தவம் செய்து பக்குவம் பெற்றவர்க்கே இறைவன் தன்னை காட்டியும் உணர்த்தியும் அரவணைத்தும் ஆட்க்கொள்கிறார். இதுவே ஞான நிலை. மோன நிலை.
விழி தான் ஞானம் பெற ஒரே வழி என்பதை உணர்வீர். விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே நம் தவம் என்பதையும் உணர்வீர். விழி! விழி!
இன்றைய உலகில் ஜாதகம் பார்க்கும் பலர் குருபெயர்ச்சி பற்றி கூறி குழப்புகிறார்கள். ஜாதகத்தில் உள்ளது நவகிரகங்கள். அதில் உள்ளது குருகிரகம் – பிரகஸ்பதி – தேவகுரு. இந்த குரு தான் பெயர்ச்சி அடைவது. தட்சிணாமூர்த்தியல்ல. நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நவ கிரகத்தில் ஒன்றான பிரகஸ்பதி – குரு வேறு! ஆதி குரு தட்சிணாமூர்த்தி வேறு. ஆதி குரு தட்சிணாமூர்த்தி தான் ஞான குரு. ஆதி குரு தட்சிணாமூர்த்தி உணர்த்தியதே ஞானம். நவ கிரகத்தில் ஒன்றான குரு அல்ல தட்சிணாமூர்த்தி.
ஆதி குருவாம் தட்சிணாமூர்த்தி உணர்த்திய சும்மா இருந்து தவம் செய்து இறைவனை அடையும் உபாயத்தை , எதாவது குரு மூலம் உபதேசம் பெற்று அறிந்து தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்பவனே ஞானம் பெற்று அந்த இறைவனை அடைவான். இந்த ஆதி குரு சுட்டிக்காட்டிய விழி வழி தவம் செய்பவரின் பற்பல பிறவிகளில் செய்த கோடி வினைகளையும் இந்த ஆதிகுரு – இறைவன் பார்த்தால் தான் தீரும். ஆதிகுரு நம்முள் இருந்து பார்க்கணும். தட்சிணாமூர்த்தி அருள் கிட்டணும். ஆதிகுருவை அறிய நீ இங்கே ஒரு சற்குருவை பணிந்து உபதேசம் தீட்சை பெறு. தவம் செய்.
எதாவது ஒரு குரு கிடைத்தால் போதும். சீடன் உத்தமனாய் இருந்தால் போதும். குரு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அவர் குருதான். சீடன் உத்தமனாயிருந்தால் அந்த ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அந்த நல்ல சீடனுக்கு வேறு நல்ல சீடனுக்கு வேறு நல்ல குருவை காட்டி இரட்சிப்பார். தீய ஒரு குருவை நாடிடும் சீடனின் நம்பிக்கையே ஆதி குரு தட்சிணாமூர்த்தி சற்குருவை நல்ல ஒரு குருவை பணியச்செய்து தடுத்தாட்க்கொள்வார். தயா பெருந்தகை. ஞான சொருபம். ஆதி குரு.
ஆக குரு வேண்டும். நல்ல குரு வேண்டும். ஆதி குருவை அறிய வேண்டும். “குருவின் அடிபணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்.”
குருவே தெய்வம்!
குரு வார்த்தையே வேதம்!
குரு தரிசனம் பாவ விமோசனம்!
குருவின் திருவடியே பரம பதம்!
குருவின் வார்த்தையே மந்திரம் !
குரு சேவையே
உன்னத இறைபணி!
குருவை பணிந்தவனே ஞானம் பெறுவான்!
குருவை போற்றுபவனே அறிவு பூரணமாக பெறுவான்!
சர்வமும் குருவே! சகலமும் குருவே!
என்று சும்மா இருப்பவனே இறைவனை அடைவான்!
-ஞான சற்குரு
“எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் ஓங்குக.”

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.