Thursday 31 May 2018

நாக வழிபாடு

*நாக வழிபாடு எப்படி தோன்றியது*
************************************
  
இந்தியாவை பொருத்த வரை இமயம் முதல் குமரி வரை பாம்பு வழிபாடு இருந்து வருகிறது. குறிப்பாகத் தென் இந்தியாவில் பாம்பு வழிபாடு அம்மன் வழிபாட்டுடன் இணைத்தே நடைபெறுகிறது.

நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. முதலில் இயற்கை வழிபாட்டை அறிந்த மனிதன் பின்னர் ஆவி வழிபாட்டை மேற்கொண்டான். பின்னர் தனக்கு நல்வாழ்வு தரும் சக்திகளை மனிதன் பல்வேறு உருவங்களில் கண்டு அவற்றிற்குக் கோவில் எழுப்பி வழிபட்டான்.

இது தொடர்பான சம்பவங்கள் தான் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் மலர்ந்தன. இவற்றின் அடிப்படையிலேயே பாம்பு கோவில்கள் தோன்றின.
நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர். நாகதோஷம் இருந்தால் குழந்தை பிறக்காது என்று நம்பினர். இன்றும் புற்றுக்குப் பால் வார்த்து வழிபடும் வழக்கம் உள்ளது.

முதலில் பயம் காரணமாக நாகங்களை வழிபட்டவர்கள் பின்னர் அது ஏதோ ஒரு தெய்வ சக்திக்குக் கட்டுப்பாடு நடப்பதாகவும், விதி முடிந்தவரை மட்டுமே அது கடிப்பதாகவும், நம்பினார்கள்.

நாளடைவில் அனைத்து விலங்கு வழிபாட்டு முறைகளிலும் பாம்பு வழிபாட்டிற்கு எனத் தனி முக்கியத்துவம் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை பாம்பு வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாம்பு வழிபாடு வேறு பல நாடுகளிலும் இருந்து வந்துள்ளது. பொனீசியா, மெஸபடோமியா, கிரேக்கம், இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, எகிப்து, நேபாளம் ஆகிய நாடுகளிலும் பாம்பு வழிபாடு இருந்து வருகிறது.

இந்தியாவை பொருத்த வரை இமயம் முதல் குமரி வரை பாம்பு வழிபாடு இருந்து வருகிறது. குறிப்பாகத் தென் இந்தியாவில் பாம்பு வழிபாடு அம்மன் வழிபாட்டுடன் இணைத்தே நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலும் பாம்பு வழிபாடு புகழ் பெற்றது. பாம்பின் பெயர்கள் கொண்ட இறைவனது பெயர்கள் பல உள்ளன. நாக ஆபரண விநாயகர், சர்ப்பபுரி ஈசுவரர், நாகநாதர், நாகேசுவரர், புற்றீசர், வன்மீக நாதர் போன்ற பெயர்கள் இறைவனுக்கு வழங்கப்படுகின்றன.

அதே போல் நாகத்தின் பெயர் கொண்ட தலங்கள் பல உள்ளன. நாகர்கோவில், நாகபட்டினம், நாகமலை, ஆலவாய், கோடநல்லூர், திருப்பாம்புரம், பாம்பணி, காளத்தி போன்ற பெயர்கள் பாம்பின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவை.

பாம்பின் பெயர்களோடு பொருந்தி இருக்குமாறு பெயர் வைக்கும் பழக்கமும் தமிழ் மக்களிடம் உள்ளது. நாகராஜன், நாகப்பன், நாகமணி, நாகரத்தினம், நாகபூஷணம், நாகார்ஜுனன், நாகநாதன், நாகலட்சுமி, நாகம்மை, நாகலிங்கம், நாககுமாரி, நாகநந்தினி போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கவை. கருவுற்ற பெண் நாகம் ஒன்றைப் பார்த்து விட்டால் அவள் பெற்றெடுத்த குழந்தைக்கு நாகத்தின் பெயரோடு பொருந்தி வருமாறு பெயர் வைப்பது நாட்டுப்புற வழக்கமாகும்.

பழங்காலத்தில் நாகர் என்ற இனத்தவர் இருந்தனர். இவர்களில் தீவுகளில் வாழ்ந்தனர். இவர்கள் தலையில் ஐந்து தலைநாகம் போல் அமைந்த குடைபோன்ற அமைப்பைச் சூடியிருந்தனர். கைகளிலும் நாகப்படம் பொறித்த வளையங்களை அணிந்திருந்தனர்.

கருவுற்று, மழைநீரால் நனைந்தும், இடருற்ற தவளைக்கு, படமெடுத்த நல்ல பாம்பு குடைபிடித்த புனித இடம் சிருங்கேரி. அந்தக் காட்சியைக் கண்ட ஆதிசங்கரர் அங்கே சாரதா பீடத்தை நிறுவினார். அதேபோல மதுரைக்கு எல்லை வரைந்தது மற்றொரு பாம்பு. இதனால் மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் உண்டானது.
இவ்வாறு பாம்பு வழிபாடு பழமை வாய்ந்த வழிபாடாகத் திகழ்கிறது.


பாம்பு உடம்பிற்குள் வாழும் சித்தர்கள்*.
*********************************************
 
நாம் நாகத்தை பாம்பாக மட்டுமே பார்க்கிறோம்.  ஆனால் நமது பண்டைய கால ஞானிகள் பாம்பு வடிவத்தை மூலாதார சக்கரத்தில் உறங்கி கொண்டிருக்கும் குண்டலினி  சக்தியாக பார்த்தார்கள்.
புற்றுக்குள் இருக்கும் பாம்பு சீண்டி விட்டால் சீறிக் கொண்டு எப்படி கிளம்புமோ அதே போலவே யோக பயிற்சியால் சீண்டப்படும் குண்டிலினி தண்டுவடத்தை பற்றிக் கொண்டு சரசரவென பிரம்ம கபாலத்தை நோக்கி எழும்பும் என்று சொன்னார்கள்.

இதனால் தான் கடவுள்களின் உருவத்தோடு நாகத்தை சம்பந்தப்படுத்தினார்கள்.பரந்தாமனின் பாம்பு படுக்கை பரமசிவனின் பாம்மனி எல்லாமே குண்டலினி தத்துவத்தை விளக்க எழுந்ததே யாகும்
 
இனி நாக வழிபாடு நம் நாட்டில் எப்போது இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை சற்று ஆராய்வோம்.

  இந்திய துணைக்கண்டம் முழுவதுமே ஆதிகாலம் தொட்டே நாக வழிபாடு, இருந்து வருகிறது. சைவம், வைஸ்ணவம், பௌத்தம், ஜைனம் போன்ற மதங்கள் வளர்ச்சி அடைந்த காலத்தில் அந்தந்த சமயத்தின் சாயல்களை கொண்டு இந்திய துணைக் கண்டம் முழுவதுமே நாக வழிபாடு விரிவடைந்தன என சொல்லலாம்.

திருமாலும் சிவபெருமானும் மட்டுமே நாகங்களை துணையாக கொள்ளவில்லை.  பல புத்தர் சிலைகளை பார்க்கும் போதும் மகாவீரரின் சில தோற்ற கோலங்களை காணும் போதும் ஐந்து தலை நாகம் அவர்களுக்கு குடைபிடித்து இருப்பது தெரிகிறது.

சிந்து சமவெளி நாகரிக காலத்திலும் அதற்கு முன்னரும் கூட நாகங்களை மக்கள் வழிபட்டு இருக்க வேண்டும். ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு முத்திரைகளில் வழிபாட்டுக்குரிய நாகங்கள் செதுக்கப்பட்டிருப்பதை வைத்து நாம் இந்த முடிவுக்கு வரலாம்.

வேதங்களில் பல இடங்களில் பாம்புகளை பற்றி விரிவான குறிப்புகள் வருகின்றன.
வேதகால மக்கள் பாம்புகளை அஹீ என்ற பெயரில் அழைத்திருக்கிறார்கள்.  ரிக், சாம வேதங்களில் வணக்கத்துக்றியதாக பாம்புகள் சொல்லப்படவில்லை. ஆனால் யஜøர் வேதம் பாம்புகளை தெய்வ நிலையோடு ஒப்பிட்டு பேசுகிறது யஜூர் வேதம் பாஞ்சால நாடுகளில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பழங்கால பாஞ்சல தேசத்திடில் தலைநகரம் அஹீசத்திரமாகும்.  அதாவது இதன் பொருள் பாம்புகளின் வீடு என்று சொல்லலாம். இந்த தேசத்தின் மன்னர்களாக விளங்கிய அக்னிமித்திரன், பானு மித்திரன் ஆகியோர்களின் காலத்து நாணயங்களில் பாம்பு முத்திரை பொறிக்கபட்டுள்ளது. 

அதர்வண வேதத்தின் சில பகுதிகளில் பாம்புகளை தாந்திரிக நெறிக்கு பயன்படுத்தும் விபரங்கள் உள்ளன

நாக வழிபாடு பற்றி நித்தேஷ என்னும் பௌத்த நூலும் பேசுகிறது.  அதில் சர்ஜீகோணோவில் உள்ள பகவா நாகோ என்ற வழிபாட்டுக்குரிய நாகத்தை பற்றி விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
குஷான மன்னர்களின் காலத்தில் இந்த நாக வடிவம் சிலை வடிவாக உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மதுராவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் கனிஷ்க மன்னனால் செதுக்கி வைக்கப்பட்ட நாக வடிவம் இன்றும் இருக்கிறது. கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்ட நாகங்கள் காலப் போக்கில் இறந்தவர்களின் ஆவியோடு தொடர்பு படுத்தப் பட்டும் புதையல்களை மர்மமான முறையில் பாதுகாக்கப்படுகின்றன என்றும் நம்பிக்கை ஏற்பட்டது.

பாம்புகளை பொறுத்த வரை எல்லா மதத்தினரும் அறிவு பூர்வமாகவும், மூடத்தனமாகவும் நம்பினர் என்றே சொல்ல வேண்டும். பண்டைய கால சிற்பங்களும், ஓவியங்களும், நாகர்களும், நாக கன்னிகளும் காட்டப்படுகிறார்கள்.  இவர்கள் பாதி மனித உருவம், பாதி பாம்பு வடிவமும் பெற்றவர்கள்.

பாலித்தீவில் நாக கன்னிகை மழை கடவுளான வருண தேவனின் பனிப்பெண்ணாக கருதுகிறார்கள்.

மகாபாரதத்தில் அனுசாய பருவத்தில் நாகத்தை வழிபடுவதன் மூலம் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் பலத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

இதனாலேயே பிற்காலத்தில் உருவான வராக சிற்பத்தில் காலுக்கடியில் பாம்பு செதுக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் தனிப்பெரும் வாழ்க்கை முறையை விவரிக்கும் சங்க இலக்கியங்களில் நாக வழிபாடு சிறப்பாக கூறப்பட்டுள்ளதை காணலாம்.
 
பொதுவாக பாம்புகளை வழிபடுவது இந்து மதத்தில் உள்ள யோக சார மார்க்கத்தின் வழிபாட்டு முறையேயாகும். ஆனால் அந்த உண்மை நிலை மறைந்து இன்று கிராம தேவதைகளின் பட்டியலில் நாக தேவதைகள் சேர்ந்து விட்டன.

இதற்கு முக்கிய காரணம் இறந்தவர்களின் ஆன்மா பாம்பு வடிவத்தில் உலாவுவதாக உள்ள நம்பிக்கையே ஆகும் நல்லப்பாம்பு என்ற நாகத்தை வீணாக சாகடிக்க கூடாது என்று சொல்வதில் பல அமானுஷ்ய உண்மைகள் உண்டு சித்தர்கள் பரகாய பிரவேசம் என்ற கூடுவிட்டு கூடுபாயும் வித்தை தெரிந்தவர்கள் என நமக்குத் தெரியும்

மனித ஆத்மாவானது மனித சரீரத்தை தவிற காக்கை மற்றும் நாகப்பாம்பின் உடல்களில் சுலபமாக பிரவேசிக்கலாம் என்று சித்தர்களின் ரகஸிய சித்தாந்தங்கள் சொல்கின்றன

இதனால் தவ வாழ்வை எந்தத் தொந்தரவும் இல்லாமல் கழிக்க பாம்பின் உடல்களை தேர்ந்தெடுத்து பல சித்தர்கள் வாழலாம் நாம் தெரியாத்தனமாக சர்ப்பங்களை சாகடித்தால் அவர்களின் தவத்தைக் கலைத்த பாவத்திற்கு ஆளாவோம் எனவேத்தான் பாம்புகளை சாகடிக்க வேண்டாமென முன்னோர்கள் சொன்னார்கள்

                   -  *சித்தர்களின் குரல் shiva shangar*

ஞானம்

ஓஷோவின்
ஞான விளக்கம்,,,

சாது ஒருவர் இமாலயத்துக்கு தவம் செய்யப் போனார். மிக நீண்ட காலம் அங்கே தங்கி தவம் செய்தார்.

தனிமை,மௌனம். ஒரு கட்டத்தில் அவர் தான் போதுமான முதிர்ச்சியும் ஞானமும் அடைந்து விட்டதாக எண்ணினார்.

மனம் முழுவதும் அமைதி அவரை ஆட்கொண்டிருந்தது. சரி, இதுதான் திரும்பிச் செல்ல சரியான தருணம் என்று கீழே இறங்கி நகரத்துக்கு வந்தார்.

வரும் வழியில் ஒருவனைப் பார்த்தார். "கோயில் எங்கே இருக்கிறது?" என்று கேட்டார்.

என்னங்க?" என்றான் அவன். -வருடக்கணக்கில் பேசாததால் குரல் சரியாக வரவில்லை போலும் அந்த சாதுவுக்கு.

இன்னொருமுறை கேட்டார்.

இப்போதும் அவனுக்குக் கேட்கவில்லை. "சரியா சொல்லுங்க சாமி, என்ன கேட்கறீங்க? முதல்ல நீங்க யாரு? ஊருக்கு புதுசா?"

அவ்வளவு தான். கோபம் பொத்துக்கொண்டு
வந்து விட்டது அவருக்கு .

அற்பப் பதரே, என்னையா தெரியவில்லை? வருடக்கணக்கில் இமாலயத்தில் தவம் செய்து ஞானம் தேஜஸ் எல்லாம் பெற்று வந்திருக்கிறேன், என்னிடம் எப்படிப்பேசுவது என்று தெரியவில்லை?

கையில் வைத்திருந்த தடியை வைத்து அவனை அடிக்கத் தொடங்கி விட்டார்.

ஓஷோ,,,

அதாகப்பட்டது அறியப்படும்
நீதிஎன்னவென்றால்,,,

சாதுவுவின் வருடக்கணக்கிலான சாதகம் ஒரு நொடியில் விழுந்து விட்டது.

நீங்கள் எங்கே போனாலும் இமாலயத்துக்கு தப்பித்துப் போனாலும் அதே ஆள் தான். சூழ்நிலை தான் மாறுகிறது.

அதே துருப்பிடித்த பழைய ஆள் தான். கோபம், முட்டாள்தனம், பைத்தியக் காரத்தனம், ஈகோ எதுவும் மாறுவதில்லை.

உண்மையில் நீங்கள் ஞானம் பெறத்தகுதியான இடம் இமாலயம் அல்ல. அங்கேதான் உங்களைக் கோபப்படுத்த, உங்கள் தன்முனைப்பை சீண்ட  யாருமே இருக்க மாட்டார்களே!

அங்கே நீங்கள் எதையோ அடைந்து விட்டதாக ஒரு போலியான உணர்வு தான் மேலோங்கும்.

உண்மையான சோதனை உங்களுக்கு சந்தையில் தான் கிடைக்கும்.

ஜன சந்தடியில் இருக்கும் போதுதான் உங்கள் ஞானத்துக்கு  உரைகல் கிடைக்கும். அங்கே இருந்து கொண்டு புழங்கிக் கொண்டு சமநிலை பெற்று ஞானம் பெறுபவனே உண்மையான ஞானி.

Saturday 26 May 2018

பாவம்

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.

ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.

மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார். மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான். தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறு மாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர். இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.

ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான். ‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண். அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்பதாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள். பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான். ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.

தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும்.

உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது. நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன!

Sunday 13 May 2018

தர்மம்

#தர்மம்_பற்றிய_பதிவு

“”எது தினமும் சூரியனை உதிக்கச் செய்வது?”

“”பிரம்மம்.”

“”மனிதன் எதில் நிலைத்து நிற்கிறான்?”

“”சத்தியத்தில்.”

“”மனிதன் எதனால் சிறப்படைகிறான்?”

“”மன உறுதியால்.”

“”மனிதன் எதனால் எப்போதும் துணை யுள்ளவனாகிறான்?”

“”தைரியமே மனிதனுக்குத் துணை.”

“”எந்த சாஸ்திரம் படித்து மனிதன் புத்திமானாகிறான்?”

“”இது சாஸ்திரத்தால் அல்ல; பெரியோர்களைப் பொறுத்தே.”

“”பூமியைவிட பொறுமைமிக்கவர் யார்?”

“”தாய்.”

“”ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் யார்?”

“”தந்தை.”

“”காற்றைவிட வேகமாகச் செல்வது எது?”

“”மனம்.”

“”புல்லைவிட அற்பமானது எது?”

“”கவலை.”

“”மனிதனுக்கு தெய்வத்திடமிருந்து கிடைத்த நன்மை எது?”

“”மனைவி.”

“”தேசாந்திரம் போகிறவனுக்கு யார் துணை?”

“”வித்தை.”

“”சாகப் போகிறவனுக்கு யார் துணை?”

“”தர்மம். அதுதான் அவன்கூட பயணம் செல்லும்…”

“”பாத்திரங்களில் எது பெரிது?”

“”அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிக்கொள்ளும் பூமி.”

“”எது சுகம்?”

“”சுகம் நல்லொழுக்கத்தில் நிலைபெறுகிறது.”

“”மனிதன் எதைவிட்டால் துயரமில்லை?”

“”கோபத்தை.”

“”எதை இழந்தால் மனிதன் தனவானாகிறான்?”

“”ஆசையை…”

“”மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்?”

“”கடன் வாங்காதவர்.”

“”வேகம் மிக்கது எது?”

“”நதி.”

“”வெற்றிக்கு அடிப்படை எது?”

“”விடாமுயற்சி.”

“”உலகில் மிகச்சிறந்த தர்மம் எது?”

“”கொல்லாமை.”

“”உலகெங்கும் நிறைந்து நிற்பது எது?”

“”அஞ்ஞானம்.”

“”முக்திக்குரிய வழி எது?”

“”பற்றினை முற்றும் விலக்குதல்.”

“”முக்திக்குத் தடையாக இருப்பது எது?”

“”"நான்’ என்னும் ஆணவம்.”

“”எது ஞானம்?”

“”மெய்ப்பொருளை அறிதல்.”

“”எப்போதும் நிறைவேறாதது எது?”

“”பேராசை.”

“”எது வியப்பானது?”

“”நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்டும், தான் என்றென்றும் வாழ்ந்திருப்போம் என்று மனிதன் நினைக்கிறானே, அதுதான்.”

“”பிராமணன், உயர்வானவன் என்பது குலத்தினாலா? ஒழுக்கத்தினாலா? கற்ற பல சாஸ்திரங்களினாலா?”

“”ஒழுக்கத்தினால் மட்டுமே உயர்ந்தவனாகிறான். நான்கு வேதங்கள் கற்றவனாயிருந்தாலும், கெட்டநடத்தை உள்ளவன் பிராமணன் அல்ல; இழிந்தவனே…”

பெற்ற தாய்- தந்தையை, பெரியோர்களை, மகிழ்விப்பவனே உலகில் தர்மனாகிறான்.

Wednesday 9 May 2018

தேஜஸ்

தேஜஸ்

தேஜஸ் என்பது சக்தி சேகரித்துக்கொள்வது. எந்த மனது ஓய்வெடுத்து சக்தியை சேகரித்து கொள்கிறதோ அதற்கு இந்த உலகில் தேஜஸ் கிடைக்கிறது. அப்போது அது பேசும்போது அது கவிதையாகிறது, அது போதனையாகிறது. அது சொல்லும் விஷயங்களுக்கு எந்த ஆதாரமும் தர்க்கமும் தர தேவையில்லை. மக்களுக்கு புரிய அதன் சக்தி மட்டுமே போதும். மக்களால் அது இதுதான் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும் இது ஏதோ ஒன்று என்று அவர்களுக்கு புரிந்திருக்கிறது. அதைதான் அவர்கள் தேஜஸ் என்றழைகின்றனர்.

முதன் முறையாக நான் தேஜஸ் என்றால் என்ன என்று உங்களிடம் கூறியிருக்கிறேன். நான் இதை அனுபவத்தின் வாயிலாக உணர்ந்திருக்கிறேன். இரவும் பகலும் வேலை செய்துகொண்டே இருக்கும் மனது வலிமையற்றதாக, சோர்வாக, இழுபறியோடுதான் இருக்கமுடியும். அது பயன்படும். அவ்வளவுதான். நீ காய்கறி வாங்கப் போகலாம். அது பயனுள்ளதாக இருக்கும். அதற்குமேல் அதற்கு சக்தி இருக்காது. அதனால் கோடிக்கணக்கான மக்கள் ஆணித்தரமின்றி, தேஜஸ் வலிமையின்றி, சொல்லாற்றல் இன்றி இருக்கிறார்கள்.

மனதை மௌனத்தில் வைத்து அது தேவைப்படும்போது மட்டும் உபயோகப்படுத்த முடிந்தால் – அது சாத்தியம்தான் – அப்போது அது வீரியத்தோடு வெளிப்படும். அது மிக அதிக சக்தியை பெற்றிருப்பதால் அதன் வார்த்தைகள் இதயத்தை ஊடுருவும். தேஜஸ் பெற்றவர்கள் மற்றவர்களை மனோவசியம் செய்து விடுவதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. அவர்கள் வசியம் செய்வதில்லை. அவர்கள் மிகவும் புத்துணர்வோடும், இளமையோடும் இருப்பதால் அப்படி நிகழ்கிறது. இது மனதிற்கு நிகழ்வது.

இருப்பில் இந்த அமைதி ஒரு அழிவற்றதை, ஒரு நிலையான பிரபஞ்சத்தை நீ ஒரு வரமாக நினைக்கும் ஒரு விஷயத்தை உன்னுள் திறக்கிறது. அதனால் தியானம்தான் மிகத்தேவையான மதம், ஒரே மதம் என்று நான் வலியுறுத்துகிறேன்.  வேறு எதுவும் தேவையில்லை. மற்ற எல்லாமே தேவையற்ற சடங்குகள்தான்.

தியானம் தான் அடிப்படை, மிக அடிப்படையானது. தியானம் உன் உள்ளிருப்பின் உலகத்தில் மிகவும் வளமையை உருவாக்கித் தரும். அதோடு உன்னுடைய திறன்களை உன்னுடைய மனதின் மூலமாக வெளிப்படுத்தும் சக்தியை பெற்றுத் தரும். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட விதமான திறனுடன்தான் பிறக்கிறார்கள். அவன் தனது திறனை முழுமையாக வாழ்ந்தால் தவிர அவனுள் ஏதோ ஒன்று குறையாகவே இருக்கும். ஏதோ ஒன்று. மனதுக்கு ஓய்வு கொடு. அதற்கு அது தேவை. அது மிகவும் எளிது. அதற்கு ஒரு சாட்சியாக இரு. அது உனக்கு பல விஷயங்களை கொடுக்கும்.

மெதுமெதுவாக மனம் மௌனமாக இருக்க கற்றுக் கொள்ளும். ஒருமுறை அமைதியாக இருக்க அது கற்றுக் கொண்டு விட்டால் பின் அது மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். பின் அதன் வார்த்தைகள் வார்த்தைகள் அல்ல. முன் எப்போதும் இல்லாத ஒரு தன்மை அதில் இருக்கும். அது சரியானதாகவும் வளமானதாகவும் இருக்கும். அவை ஒரு அம்பு போல துளைத்துக் கொண்டு போகும். அது எல்லா தடைகளையும் கடந்து இதயத்தை சென்றடையும்.பின் மனமானது மௌனத்தின் மூலம் அளப்பரிய ஆற்றல் பெற்ற ஒரு வேலையாள் ஆகும். அதன் பின் இருப்பு முதலாளியாகும். அதற்கு தேவைப்படும்போது மனதை உபயோகிக்கவும், தேவைப்படாத போது மனதின் இயக்கத்தை நிறுத்தி வைக்கவும் முடியும்.

- ஓஷோ