Saturday 15 April 2017

இயற்கையை உணர்வோம்

மண்ணிற்கேற்ற மரங்கள் 2
அரசமரம் (Peepal tree)

"ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழைபெய்தேதீரும்" எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்....

நமது மண்ணின் மரங்களைப்பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரசமரத்திலிருந்தே துவங்கவேண்டும் அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும் எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம்...

மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம்.நன்கு வளர்ந்த அரசமரம் சுமார் நூறுஅடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது.இவற்றின் பலனும் மிகப்பெரியது. அதனால்தான் நமது முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கையில்  இதற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்துவந்துள்ளனர்...

எந்தச் சூழ்நிலையிலும் யாரும் இதை வெட்டிவிடவேகூடாது என்பதற்காகவே இதை வணக்கத்திற்குரிய கடவுள் நிலையில் வைத்திருந்தது தமிழ்ச்சமூகம்.வேறு எந்தக்காரணத்தைச் சொன்னாலும் வெட்டிவிடுவார்களோ என்கிற அக்கறைகூட அதன்கீழே சாமிசிலைகளை நட வைத்திருக்கலாம்.அவ்வளவு முக்கியத்துவமும் சிறப்பும் பெற்றதே இந்த அரசமரம்...

புத்தரிற்கு போதிமரத்தின் கீழ் ஞானம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது அந்த போதிமரம் வேறெதுவுமில்லை அரசமரம்தான்.ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுதான் மூளைக்காண உணவு.வளர்சிதை மாற்றத்தில் சிதைகிற உடலை சரிகட்டுவதில்  பிராணவாயுவின் பங்கே மிகமிக அதிகம்.பிராணன் என்கிற உயிர்வளியை நன்குவளர்ந்த ஒருமரம் நாளொன்றிற்கு சுமார் இரண்டாயிரத்து நானூறு கிலோவரை வெளியிடுகிறதாம்.ஒரு மனிதனுக்கு தேவையான உயிர்வளியின் அளவு நாளொன்றிற்கு எண்ணூறு கிராம் எத்தனைபேருக்கு உதவுகிறது என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.இதை அரசமரம் என்பதில் தவறே இல்லை.மற்றொரு சிறப்பாக அரசமரமானது இரவுநேரத்திலும் பிராணவாயுவை வெளியிடுவதாக சொல்கிறார்கள்.
இவ்வளவு உயிராற்றலின்கீழ் யார்தொடர்ந்து அமர்ந்திருந்தாலும் ஆரோக்கியமும் சிந்தனைத்தெளிவும்(ஞானம்)பெற்று புத்தனாகலாம் என்பதில் சந்தேகமில்லை !!!...

சும்மா மரத்தினடியில் இரு உடலின் ஆரோக்கிய குறைபாடுநீங்கும் எனச் சொன்னால் யாரும்பின்பற்ற மாட்டார்கள் என்பதாலோ என்னவோ அதை கடவுளாக்கி அதன்வேரினடியில் நீரைஊற்றி சுற்றிவா என அதன்கீழே ஒரு சிலையையும் வைத்திருக்கின்றனர்.நாமோ இன்று காரணத்தை மறந்து காரியத்தைமட்டும் செய்து கொண்டிருக்கும் போலி நாகரீகச்சமூகத்தில் இருக்கிறோம்.மரத்தின் வேரைச்சுற்றிலும் கான்கிரீட் தளத்தைப்போட்டு அதன் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் கொண்டாடப்படவேண்டிய பொருள் காணாமல் போய்விட்டது.அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரைமட்டும் பிடித்துக்கொண்டோம் காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது....

இந்த கோடையின் துவக்கத்திலேயே மிகுவெப்பத்தால் படுகிற வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.அருகில் ஏதாவது அரசமரம் இருந்தால் அதனடியில் சிறிதுநேரம் அமர்ந்துபாருங்கள் அந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் அனுபவித்துவிட்டு செல்லுங்கள். இயற்கையும் கோடைக்குத்தகுந்தபடி புதிய தளிர் இலைகளுடன் தயார்படுத்தியிருக்கும் அழகையும் கவனியுங்கள்....

அஸ்வத்தம்,
அச்சுவத்தம்,
திருமரம்,
போதி,
கவலை,
பேதி,
கணவம்,
சராசனம்,
மிப்பலம்...
இதுவெல்லாம் அரச மரத்தின் பெயர்கள்....

எல்லாப்பறவைகளும் இரவு அடைவதற்கு எல்லாமரங்களையும் தேர்ந்தெடுக்காது ஆனால் பெரும்பாலான பல பறவைகள் இரவு இருப்பிடமாக பெரும்பாலும் அரசமரத்தை விரும்புகின்றன.பல்லுயிர்ச்சூழல் பெருக்கத்தில் உதவுவதில் பெரும்பங்கைக் கொடுப்பது அரச மரங்களே.இதன் பழங்களை பறவைகள் விரும்பு உண்ணும் என்பது இன்னும் சிறப்பு....

இனியாவது இதன் மகத்துவத்தை உணர்ந்து வேறு அன்னிய மரங்களைத் தவிர்த்து,வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நமது மண்ணின்மரமான அரசமரத்தினை நட்டு இந்த பூமியை குளிர்வித்து, மழையை ஈர்த்து சுகமாக நல்ல காற்றினை வரும் தலைமுறையை சுவாசிக்கச் செய்வோம். நீரைப்போல் காற்றையாவது காசுகொடுத்து வாங்காமல் இருப்போம்....

இங்கேயும் பாருங்கள்:

இயற்கையை உணர்வோம், இனிதாக வாழ்வோம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.