Sunday 11 March 2018

மனதை கவனிப்பது

💚 மனதை கவனிப்பது எப்படி...

குழந்தையாய் இருக்கையில் மனம் என்ற ஒன்று தர்க்கங்கள் இன்றி இருக்கும்.

வளர வளர நமது வாழ்க்கைமுறை, கல்வி, சமுதாயச் சூழ்நிலைகள் மனதிற்கு நிறைய சேகரிப்புகளைத் தந்து தர்க்கம் சார்ந்த முடிவுகளை உருவாக்கி வைத்துக்கொள்ளும்.

இந்த முடிவுகளின் சேகரிப்புதான் நமது தற்போதய மனம்.

இப்படிச் சேர்த்தவைகள் நல்லவைகளுக்காக நம்மால் சுயவிருப்பத்துடன் பயன்படுத்தப்படுகிறது.

மனம் எப்போதுமே முன்னும் பின்னும் தாவிக் குதிக்கும், தங்கிக்கிடக்குமே தவிர உரிய கணத்தில் இருப்பதில்லை. அது பயனற்றதைப் பேசிக்கொண்டு இருக்கும்.

மனம் பேசினால் அது பயனற்ற வார்த்தைகளாக, வெளிப்பட்டு நம்மை அந்தகணத்தில் இருக்கவிடாமல் செய்துவிடும்.

பயனற்ற பேச்சு, பயனற்ற எண்ணங்களில் மனம் ஓடிக்கொண்டிருக்க எதோ வாழ்கிறோம் என்ற அளவில் வாழலாமே தவிர வாழ்கையை முழுமையாக வாழ முடியாது.

கண்ணை மூடி உடல் உணர்வை, சூழலை, ஒலியை கவனிக்க முற்படுங்கள்.

எவ்வளவு நேரம் முடியும்?

சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் கவனிக்க இயலாது. மனம் தாவ ஆரம்பித்துவிடும். இன்னும் என்னென்ன வேலை இருக்கு இப்படி உட்கார்ந்திருக்கே என்றோ., ஆபீஸ், குடும்பம், நட்பு, திரைப்படம் என வெளியேஓடிவிடும்.

அந்த கணத்தில் நாம் இருக்க உதவி செய்யாது இந்தமனத்தை சரி செய்ய ஒரே தீர்வு அதை சாட்சி பாவனைக்கு ஆட்படுத்த வேண்டும். அதாவது நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மைக் கவனிக்கப் பழக்க வேண்டும்.

சாட்சி பாவம் என்பது விலகி நின்று கவனித்தல், வருகின்ற எண்ணங்களோடு தவறான அல்லது தர்க்க ரீதியான அபிப்ராயம் ஏதுமின்றி இருத்தல்.

இதுவே தியானத்தில் நடப்பது.

எண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே நின்று கவனியுங்கள்.

எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக்கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம்.

உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனிப்பதில் அந்தக் கணங்கள் இருக்கின்றன்.

கவனிக்கும் நுட்பம் வாய்த்தால் நான் என்பது வேறு.. தோன்றுகின்ற எண்ணங்களோ, கவலைகளோ, கருத்துகளோ நான் அல்ல என்பது அனுபவமாகும். இது அவைகளுடனான உங்களின் உறவை செம்மைப்படுத்தும்.

தியானத்தில் நடப்பதை வாழ்க்கையாக்க முடிகிறதா... நீங்களே ஞானி வேறு எங்கும் தேடவேண்டாம்.

மனதினால் செய்ய முடியாத விஷயம் நடுநிலையில் இருப்பதாகும்.ஒரு துருவத்திலிருந்து எதிர் துருவத்திற்கு செல்வது மனதின் இயல்பாகும்.

நீங்கள் நடு நிலையில் இருந்தால் மனது மறைந்துவிடும்.இது கடிகாரத்தில் உள்ள ஊசலைப் போன்றது.ஊசல் நடு நிலையில் நின்று விட்டால் கடிகாரம் நின்று விடுகிறது.

நடு நிலையில் நிற்பதே தியானம்.

இந்த மனம் அதிக தூரத்தில் உள்ளதையே நாடுகிறது.

அருகாமை உங்களுக்கு சலிப்பைத் தருகிறது.

தூரத்தில் உள்ளது நம்பிக்கை தருகிறது.

கனவைத் தருகிறது.

மிகவும் வசீகரமாக இருக்கிறது.

நீங்கள் அந்தக் கோடிக்குப் போய்விட்டால் , நீங்கள் புறப்பட்ட இடம் மீண்டும் அழகாகக் காட்சி அளிக்கிறது.

மனம் முரண்பாடுகள் நிறைந்தது.
மனம் முழுமையாக இருக்க முடியாது.

யாரையாவது நீங்கள் நேசிக்கும்போது உங்கள் வெறுப்புத் தன்மையை அடக்கி வைக்கிறீர்கள்.
நேசித்தல் முழுமையாக இல்லை.

உங்கள் வெறுப்பு எந்நேரமும் வெளிப்படலாம்.

நீங்கள் ஒரு எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறீர்கள்.

எல்லா உறவுகளும் விருப்பும் வெறுப்பும் உடையவை.

மனம் உங்களுக்கு எதிரானதற்கே செல்ல வற்புறுத்தும்.எதிரானதற்குச் செல்லாதீர்கள்.

மையத்தில் நின்று இந்த மனம் செய்யும் ஏமாற்று வேலையைக் கவனியுங்கள்.

இந்த மனம் உங்களை அதிகாரம் செய்து கொண்டிருக்கிறது.💚

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.