Sunday 6 August 2017

அதிகமாக உணர்ந்தால் குறைவாக சிந்திப்பாய்.---ஓஷோ

❤❤மனிதன் மூன்று மையங்களிலிருந்து செயல்படுகிறான். ஒன்று தலை, மற்றொன்று இதயம், மூன்றாவது நாபிக்கமலம்.
நீ தலையிலிருந்து செயல்பட்டால் மேலும் மேலும் எண்ணங்களால் பின்னப்படுவாய். அவை உள்ளீடற்றவை, கனவுகளை கொண்டவை, – சொல்வது அதிகம், செய்வது ஒன்றுமில்லை. மனம் ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை. பொய்யான நம்பிக்கையை தரக்கூடிய அளவற்ற ஆற்றல் அதனிடம் உண்டு, ஏனெனில் அதனால் அதை பெரிது படுத்திக் காட்ட முடியும். மிகப் பெரிய ஆசை ஊட்டி, அளவற்ற நம்பிக்கை ஏற்றி நாளை இது நடக்கக் கூடும் எனக் கூறி ஏமாற்றும், ஆனால் அப்படி நடக்கவே நடக்காது. தலையில் எதுவும் எப்போதும் நடக்காது, எதுவும் நடப்பதற்கான இடம் தலை அல்ல.
இரண்டாவது மையம் இதயம். உணர்வுகளுக்கான மையம் இது. ஒருவர் இதயத்தின் மூலம்தான் உணர்கிறார். நீ வீட்டிற்கு அருகில் இருக்கிறாய் – வீட்டை வந்தடைய வில்லை ஆனால் நெருங்கி விட்டாய். நீ உணரும்போது நீ உயிர்ப்போடிருக்கிறாய், நீ நிலைப்படுகிறாய். நீ உணரும்போது ஏதாவது நிகழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மூளையில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதயத்தில் சிறிதளவாவது வாய்ப்பு உள்ளது.
ஆனால் உண்மையான விஷயம் இதயத்தில் இல்லை – உண்மையானது இதயத்தை விடவும் ஆழமானது – அதுதான் நாபிக்கமலம். அது இருப்பின் மையம்.
நினைப்பு, இருப்பு, உணர்வு இவைதான் மூன்று மையங்கள். ஆனால் நிச்சயமாக உணர்வு எண்ணங்களை விட இருப்புக்கு நெருக்கமானது. மேலும் உணர்வு ஒரு வழிமுறை போல செயல்படுகிறது. நீ மூளையிலிருந்து இறங்கி நாபிக்கு வர வேண்டுமானால் இதயத்தின் மூலமாகத்தான் வர வேண்டும். அதுதான் சாலைகள் பிரியும் முச்சந்தி. இருப்பிற்கு நேரிடையாக போக முடியாது , வழியில்லை. இதயத்தின் வழியாகத்தான் போயாக வேண்டும். அதனால் இதயம் ஒரு வழிமுறையாக செயல்படுகிறது.
அதிகமாக உணர்ந்தால் குறைவாக சிந்திப்பாய்.---ஓஷோ ❤❤❤❤

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.