Saturday 6 August 2016

ரூமி புத்தரானார்.

சூஃபி துறவிகளில் மிகச் சிறந்தவர் கவிஞர் மௌலானா ஜலாலுதீன் ரூமி.கவிஞர் தன் ஊர் கடைத்தெரு வழியாகப் போய்க்கொண்டிருந்தார்.

தங்கப்பட்டறைகள் நிறைந்த பகுதியைக் கடந்து கொண்டிருந்தார்.

அவர் கடுமையான பிரார்த்தனைகள் எல்லாம் செய்து பார்த்து விட்டவர்.
ஆனால் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.விரக்திதான் மிஞ்சியது.அவருடைய கைகளில் எப்போதும் வெறுமைதான்.
பிரார்த்தனை அவரிடமிருந்து நழுவிக்கொண்டே இருந்தது.அவரால் அதைப் பிடித்து நிறுத்த முடியவே இல்லை.வெகுவாக பிராயத்தனப்பட்டார்.முஷ்டியை இறுக்கி வைத்து முயற்சி செய்து பார்த்துவிட்டார்.ஆனால் எப்போது திறந்து பார்த்தபோதும் அவருடைய கைகள் வெறுங்கைகளாகத்தான் இருந்தன.

தங்கப்பட்டறைகள் நிறைந்த பகுதி வழியாகக் கடைவீதியில் நடந்து கொண்டிருந்தார்.தங்கப் பாளங்களைத் தட்டி தட்டி உருவம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
ஏகப்பட்ட இரைச்சல்.அவர் அங்கே கொஞ்ச நேரம் நின்றார்.

திடீரென்று அவரை எதுவோ பிடித்துக் கொள்வது போல இருந்தது.சுத்திகள் தங்கத்தைத் தட்டும் போதெல்லாம் அல்லா அல்லா என்ற ஒலி கிளம்புவதைக் கேட்டார்.

அவரால் நம்பவே முடியவில்லை.ஒரு சூட்சமமான மாற்றம் அவருக்குள் நிகழ்ந்தது.

அவரை ஒரு பரவசம் நிறைத்தது.நடனமாட ஆரம்பித்து விட்டார்.சுழற்காற்றாக சுழன்று நடனமாட ஆரம்பித்து விட்டார்.

அன்று அந்தச் சின்னஞ்சிறிய ஊரில் தங்க ஆசாரிகள் தட்டி எழுப்பிய ஒலியில் ரூமியின் முதல் பரவச நடனம் ஆரம்பமானது.

செய்யவேண்டும் என்று நினைத்துச் செய்த காரியம் அல்ல.ஆனால் அந்தப் பரவச நிலையில் வேறு என்ன செய்ய முடியும்.?

நெஞ்சத்தில் அவ்வளவு ஆனந்தமும் பரவசமும் தோன்றும்போது வேறு என்ன செய்ய முடியும்.?

பல மணிநேரம் பரவச நடனம் தொடர்ந்தது.

கடைவீதியில் இருந்தவர்கள் எல்லோரும் அவரைச் சுற்றி சூழ்ந்து கொண்டார்கள்.பைத்தியம் பிடித்து விட்டதோ என்று நினைத்தார்கள்.

அன்று ரூமி புத்தரானார்.

அதன்பின் ஜலாலுதீன் மிகப்பிமாதமான குருவாக ஆனார்.

சரியான கணத்துக்காக காத்திருப்பதே அவருடைய வாழ்நெறி என்றாகிப்போனது.

"பிரபஞ்சம் நீ நடனமாட வேண்டும் என்று விரும்புகிறதா? நடனமாடு.!"

"பிரபஞ்சம் நீ பாட வேண்டும் என்று விரும்புகிறதா? பாடு.!"

"நீயாகச் செய்வது அதில் ஏதும் இல்லை.!நீ கர்த்தா அல்ல.!"

- ஓஷோ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.