Wednesday 27 January 2016

இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க

இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.
• அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.
• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.
• கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.
• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன.
அது என்ன அடைப்பு? - அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.
தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ள
து. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.
முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.
கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.
ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.
இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.