Sunday, 2 April 2017

சந்திப்பிழையில்லாமல் எழுத

சந்திப்பிழையில்லாமல் எழுதக் கற்றுத் தாருங்கள் என்று பலரும் உள்ளஞ்சலில் வினவுகின்றனர். மூன்றாண்டுகளுக்கு முன்பு வலிமிகுதல் குறித்த பதிவுத்தொடர் ஒன்றை எழுதினேன். அதன் மொத்தத் தொகுப்பை இங்கே பதிகிறேன். புதியவர்களுக்குப் பயன்படும். நாம் எழுதுகின்ற எளிய தமிழுக்கு இதிலுள்ளவற்றைக் கற்பதே ஓரளவுக்கு முழுமை தரும். எல்லாரும் பயன்படுத்திக்கொள்க. இதைப் பத்துத் தடவை படித்து மனத்தில் இருத்திக்கொண்டால் பிழைகளை எளிதில் நீக்கலாம். படித்து முடிக்கையில் நாக்கும் தொண்டையும் வறண்டுவிடும். அருகில் தண்ணீர் வைத்துக்கொள்வது நல்லது. :)  
---------------------------------------------------
வலிமிகுதல் - விதிகளின் தொகுப்பு
---------------------------------------------------
தமிழ் இலக்கணம் தொடர்பான பதிவுகள் வரிசையில் இனி முக்கியமான பாடம் ஒன்றைச் சிறிய தொடராகவே எழுத உள்ளேன். வலி மிகுதல்’ பற்றியதே அது.

அ.கி. பரந்தாமனார் எழுதியவற்றை வழிகாட்டியாகக் கொண்டு இன்னும் விரிவுபடுத்தி அல்லது எளிமைப்படுத்தி எல்லாருக்கும் புரியும்படி எழுதுவேன்.

வலி மிகுதல் மற்றும் வலி மிகாமை குறித்த தெளிவு ஏற்பட்டுவிட்டால் எழுதுவன எல்லாம் பெரிதும் பிழையற்றனவாகும். தலைவலி மிகாமல் பார்த்துக்கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

வலி மிகுதல் என்றால் என்ன ? வல்லின மெய்யெழுத்துகள் வாக்கியக் கோவையில் இரண்டு சொற்களுக்கு இடையே கூடுதலாக மிகுதியாகி அமர்ந்துகொள்வது.

க்,ச்,ட்,த்,ப்,ற் - ஆகிய ஆறுமே வல்லின மெய்கள். டகர றகரங்களில் சொற்கள் இல்லாமல் இருப்பதால் இந்த இரண்டு எழுத்துகளும் பட்டியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும். மீதியுள்ள க்,ச்,த்,ப் மிகுவது - மிகாதிருப்பது பற்றித் தெரிந்துகொள்வதே நம் நோக்கம்.

வலிமிகுதல் என்னும் மொழிப் பண்பு தமிழ் மற்றும் மலையாளம் தவிர்த்த வேறெந்த உலக மொழி இலக்கணங்களிலும் இல்லை என்று சொல்கிறார்கள்.

வலிமிகுதல் 1 :
---------------------
இனி நிலைமொழி, வருமொழி என்கிற பயன்பாடு அடிக்கடி இருக்கும். இரண்டு சொற்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பேசுமிடத்தில் முதலில் உள்ள சொல் நிலைமொழி. அதை அடுத்து வருகிற இரண்டாம் சொல் வருமொழி. மல்லிகைப் பூ - என்பதில் முதலில் உள்ள மல்லிகை நிலைமொழி, அடுத்து வருகிற பூ வருமொழி. இதை நினைவில் வைத்துக்கொள்க.

இரண்டு பெயர்ச்சொற்களுக்கிடையே வருமொழி வல்லினத்தில் இருந்தால் வலிமிகும். இது அடிப்படை.

ஆடித் தள்ளுபடி, போக்குவரத்துக் கழகம், கண்மணிப் பூங்கா. தமிழ்ப் பாட்டு, அழகுக் குறிப்புகள்.

உம்மைத் தொகையாக வரும் பெயர்ச்சொற்கள் எனில் வலிமிகாது.

சங்கப் புலவர்களில் கபிலர் பரணர் அறிவேன்.
தவறாமல் தினமணி கதிர் படிப்பேன்.

உம்மைத் தொகை என்றால் இரண்டு பெயர்ச்சொற்களையும் ‘உம்’ என்ற விகுதி சேர்த்துக் கருதுவது. சங்கப் புலவர்களில் கபிலரும் பரணரும் அறிவேன், தவறாமல் தினமணியும் கதிரும் படிப்பேன் - இவ்வாறு அவை பொருள் தருவன.

வலிமிகுதல் 2 :
---------------------
இரண்டு பெயர்ச் சொற்களுக்கிடையே எளிதில் வலி மிகும் என்று பார்த்தோம். அடுத்து, சொற்கூட்டங்களின் பட்டியல் ஒன்று உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள சொல்லை அடுத்து வருவது வல்லினமாக இருந்தால் கட்டாயம் வலிமிகும். இந்த விதியைக் கேள்வியே இல்லாமல் பின்பற்றலாம். வலிமிகுதலில் எல்லாருமே தவறவிடும் இடம் இதுதான். அந்தச் சொற்களின் பட்டியல் இதோ :-

அ, இ, எ
அந்த, இந்த , எந்த
அங்கு, இங்கு, எங்கு
ஆங்கு, ஈங்கு, யாங்கு
அப்படி, இப்படி, எப்படி
ஆண்டு, ஈண்டு, யாண்டு
அவ்வகை, இவ்வகை, எவ்வகை
அத்துணை, இத்துணை, எத்துணை
இனி, தனி
அன்றி, இன்றி
மற்ற, மற்றை
நடு, பொது, அணு, முழு, புது, திரு
அரை, பாதி, எட்டு, பத்து, முன்னர், பின்னர்

இவற்றை அடுத்து வல்லினம் வந்தால் கட்டாயம் வலி மிக வேண்டும். நாம் இவற்றில் வலி மிகுதலைப் பெரும்பாலும் அனுசரிப்பதில்லை.

பாரதியார் ‘அங்கு சென்றான்’ என்றே எழுதுவாராம். அங்குச் சென்றான்’ என்று வலி மிகுவித்து எழுதுவதே சரி. நண்பர்கள் பாரதியிடம் ‘அங்கு சென்றான் என்றெழுதுவது தவறாயிற்றே... நீரே இப்படிச் செய்யலாமா ?’ என்று வினவுவார்களாம். ‘தவறுதான் ஓய்... அங்குச் சென்றான் என்றெழுதினால் நன்றாகவே இல்லை... அதனால்தான் அங்கு சென்றான் என்றே எழுதுகிறேன்...’ என்பாராம் பாரதியார்.

இவ்விடங்களில் வலி மிகுவித்து எழுதுவதே பிழையற்றிருக்கும். மிகவும் பல் கூச்சமெடுக்கும் பயன்பாடாக இருக்கிறதே என்று கருதினால் எழுதும் ஆசிரியரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல், அணுகுண்டு என்று பிழையாக எழுதுகிறோம். அணுக்குண்டு என்பதுதான் சரி.

வலிமிகுதல் 3
-------------------

இந்தத் தொடரின் அடுத்த இப்பதிவு சற்றே தாமதமானதற்குப் பொறுத்தருள்க. இந்த விளக்கங்களை எழுதியபின் பின்னூட்டங்களில்/உள்பெட்டியில் பதில் எழுதிக் கைவலி மிகுந்ததால் தள்ளிப் போட்டுவிட்டேன். பின்னூட்டங்களில் அவசியம் நான் விடையிறுத்தாக வேண்டிய இடங்களில் எப்போதும் தயங்காமல் எழுதியே வந்திருக்கிறேன். முடிந்தவரை அவ்வாறே செயல்படுவேன்.

குற்றியலுகரம் என்றால் என்னவென்று அறிவீர்கள்தாமே ? ஒரு சொல்லின் கடைசி எழுத்தாக வரும் கு,சு,டு,து.பு,று ஆகிய ஆறு உ’கர வல்லின உயிர்மெய்களும் உச்சரிப்பில் அரை மாத்திரையளவு தணிந்து ஒலிக்கும்.

க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று - என்று முடிகின்ற சொற்கள் யாவும் வல்லின மெய்யெழுத்தை அடுத்து வரும் குற்றியலுகரங்கள் என்பதால் அவை வன்தொடர்க் குற்றியலுகரங்கள் எனப்படும்.

இந்த வன் தொடர்க் குற்றியலுகரங்களை அடுத்து க,ச,த,ப-கர வரிசையில் உயிர்மெய் எழுத்துகள் வந்தால் வலி மிகும்.

எடுத்துச் செல்.
முடித்துக் கொடு.
கற்றுக் கொள்.

படித்துப் பார்த்தான்’ என்பதில் வலி மிகுந்ததற்கும் - எழுந்து பார்த்தான்’ என்பதில் வலி மிகாததற்கும் இப்போது
உங்களுக்குக் காரணம் புரிந்திருக்கும்.

ன்று, ந்து, ண்டு - என முடிபவை மெல்லின மெய்யெழுத்துகளை அடுத்துவரும் வல்லின உகர உயிர்மெய்கள். இவற்றுக்கு மென் தொடர்க் குற்றியலுகரங்கள் என்று பெயர். மென் தொடர்க் குற்றியலுகரங்களை அடுத்து வலி மிகாது.

உதாரணங்கள் :-

என்று சொன்னான்.
வந்து போனார்.

வலிமிகுதல் 4
-------------------

பெயரெச்சம் என்றால் என்னவென்று அறிவீர்களா ? முற்றுப்பெறாமல் முடிவுறாமல் எச்சமாகித் தொக்கி நிற்கும் ஒரு சொல் தன்னை அடுத்து ஒரு பெயரை வரவழைக்கும். அப்படி ஒரு பெயர்ச்சொல் வருவதால் மட்டுமே அது முற்றுப் பெறும். அத்தகைய சொற்கள் பெயரெச்சங்கள் எனப்படும்.

அடித்த கைகள், வெடித்த துப்பாக்கி, பணிந்த காவலன்.

மேலுள்ள இரண்டு சொற்களில் முதலில் உள்ள செயலைச் சொல்லும் சொல் தன்னை அடுத்து ஒரு பெயர்ச்சொல் வந்தால் மட்டுமே நிறைவுறுவதைக் காண்கிறீர்கள் (அடித்த, வெடித்த, பணிந்த). இல்லையேல் பூர்த்தியடையாமல் எச்சமாகி அத்துவானத்தில் நிற்கும். அடுத்து ஒரு பெயர்ச்சொல் வந்து முழுமையடைவது பெயரெச்சம்.

வினைச்சொல்லாக இருக்கையில் காலங்காட்டும்.

கடித்த பழம் - இறந்தகாலப் பெயரெச்சம்
கடிக்கின்ற பழம் - நிகழ்காலப் பெயரெச்சம்
கடிக்கும் பழம் - எதிர்காலப் பெயரெச்சம்

மேலுள்ள மூன்றும் வினையையும் காலத்தையும் காட்டுவதால் இவை தெரிநிலைப் பெயரெச்சங்கள் என்றும் வகைப்படும். இதில் கடித்த பழம் உடன்பாட்டுப் பெயரெச்சம். கடிக்காத பழம் என்று வந்தால் எதிர்மறைப் பெயரெச்சம்.

வினையையும் காலத்தையும் காட்டாமல் வெறுமனே பண்பை மட்டும் காட்டுகின்ற எச்சச்சொற்கள் உள்ளன. அவையும் தம்மை அடுத்துப் பெயர்ச்சொற்கள் வந்தால் மட்டுமே முழுமை பெறுவன. அவற்றைக் குறிப்புப் பெயரெச்சங்கள் என்று வகைப்படுத்துவர்.

சின்ன தம்பி
நல்ல குடும்பம்
அழகிய தமிழ்மகன்
புதிய பார்வை
இளைய தலைமுறை

மேலே காண்பவை பண்பை மட்டுமே சொல்லி அடுத்து ஒரு பெயர் வருவதால் மட்டுமே பூர்த்தியாகக் கூடிய குறிப்புப் பெயரெச்சங்கள்.

இப்பொழுது வலிமிகும் இடத்துக்கு வருகிறேன். மேலே விவரித்தபடியுள்ள பெயரெச்சங்கள் எவற்றுக்கும் - வினைச்சொல்லை அடுத்து வரும் பெயரெச்சங்கள் என்றாலும், அது மூன்று காலத்தைக் காட்டினாலும், உடன்பாடாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, வெறும் பண்பை மட்டுமே குறிக்கின்ற குறிப்புப் பெயரெச்சமாக இருந்தாலும் சரி - எங்கும் வலி மிகாது. எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள் - பெயரெச்சத்தை அடுத்து வலி மிகாது.

பாடாத தேனீ, ஓடாத குதிரை - போன்ற எதிர்மறைப் பெயரெச்சங்களில் கடைசி எழுத்து கெட்டு மறைவதும் உண்டு. பாடாத் தேனீ, ஓடாக் குதிரை - என. எதிர்மறைப் பெயரெச்சத்தின் கடைசி எழுத்து, ஈறு கெடுவதால் அது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று அழைக்கப்படும். ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மட்டும் வலி மிகும்.

ஆக பெயரெச்சங்களில் வலி மிகாது. உதாரணங்களின்படி - படித்த, அடித்த, நடக்கின்ற, ஓடுகின்ற, முடிக்கும், வெடிக்கும், உண்கின்ற, உண்ணாத, செய்த, செய்யாத, நல்ல, கெட்ட, தீய, சிறிய, பெரிய, பழைய, புதிய - எவ்வகைப் பெயரெச்சங்களிலும் வலி மிகா.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மட்டும் வலி மிகும்.

ஒட்டுமொத்தமாக வகுத்துப் பகுத்துத் தொகுத்து கிளிப் பிள்ளைகளுக்குச் சொல்வதுபோல் விளக்கியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

வலிமிகுதல் 5
-------------------
இத்தொடரின் முதல் பகுதியில் உம்மைத் தொகையில் வலிமிகாது என்று பார்த்தோம், நினைவிருக்கிறதா ?

பொதுவாக இரண்டு பெயர்ச் சொற்களுக்கு இடையே வலிமிகும் வாய்ப்பிருந்தால் மிகுவித்து விடுங்கள் (அது எப்படியும் சரியாகவே இருக்கும்) என்று ஆரம்பித்த நான் ஒரே ஒரு விதிவிலக்காக உம்மைத் தொகையைக் கூறினேன்.

காடுகரை என்பது உம்மைத் தொகை. காடும் கரையும் என்று இருபெயர்களுடன் ‘உம்’ சேர்த்து விரித்துப் பொருள் கொள்வதால் அது உம்மைத் தொகை என்றும் தெரிந்துகொண்டோம்.

மேலும் உதாரணங்கள் : பட்டிதொட்டி, செடிகொடி, இட்லி தோசை, இன்பதுன்பம், வள்ளி தெய்வானை, சேர சோழ பாண்டியர். இன்னும் சிலவற்றை நீங்களும் கற்பனை செய்து கண்டுபிடிக்கலாம். (அபூர்வமாக, ‘ஏற்றத்தாழ்வு’ போன்ற விதிவிலக்குகளும் உண்டு என்கிறார் அ.கி.ப.)

உம்மைத் தொகையைப் போலவே மேலும் இரண்டு தொகைகளைப் பார்க்கப் போகிறோம். உவமைத் தொகை மற்றும் பண்புத் தொகை.

தாமரைக்கண், மலைத்தோள் - இவற்றைத் தாமரை போன்ற கண், மலை போன்ற தோள் என விரித்துப் பொருள் காண்போம். முதலில் வருகின்ற சொல் அடுத்து வருகின்ற சொல்லுக்கு உவமையாய் இருப்பது. அச்சொற்கள் இரண்டுக்குமிடையில் போல, போன்ற என்று உவம உருபைத் தருவித்துப் பொருள் காண்பது வழக்கம். உவமைத்தொகை என்பது இதுதான். உவமைத் தொகைக்கு வலிமிகும்.

(உவமைத்தொகையைக் கண்ணாடி முன் நிறுத்தி இடவலம் மாற்றிப் போட்டால் அதுவே உருவகம் எனப்படும். மலைத்தோள் உவமைத்தொகை என்றால் தோள்மலை உருவகம்).

அடுத்து பண்புத் தொகை. உவமைத்தொகையில் முதற்சொல் உவமையாய் அமைந்ததைப் போல பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் அடுத்துள்ள சொல்லின் பண்பைக் குறிக்கும். அது நிறம், வடிவம், சுவை, குணம், அளவு (இன்னும் பல) என எவ்வொரு பண்பையும் குறிக்கக் கூடியது.

உவமைத்தொகைக்குப் ‘போன்ற’ என்ற உவம உருபை இடையிட்டுப் பொருள் விரித்ததுபோல பண்புத்தொகைக்கு ‘ஆகிய’ என்ற பண்புருபை இடையிட்டுப் பொருள் காண்பர்.
பண்புத்தொகையில் வலிமிகும்.

வெள்ளைத்தாள்
பொய்ப்பேச்சு
மெய்த்தன்மை

பண்புத்தொகையில் இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்ற வகையும் உண்டு. அதற்கும் வலிமிகும். நாம் அந்தப் பகுதிக்கே போக வேண்டியதில்லை. ஏனென்றால், முதலில் சொன்னதுபோல, இரண்டு பெயர்கள் காணப்பட்டாலே தயங்காமல் வலிமிகுவித்து விடுவோம்.

சுருக்கம் : உவமைத் தொகையிலும் பண்புத் தொகையிலும் வலிமிகும்.

வலிமிகுதல் 6
-------------------
வலிமிகுதல் பற்றிய இலக்கண அறிவைப் பெறுவதில் மிகவும் கடினமானது என்று கருதப்படக்கூடிய பகுதிக்குள் இப்போது நுழைகிறோம். அவ்வாறு கருதிக்கொண்டிருந்தது எத்தனை பெரிய மடத்தனம் என்று நீங்களே புரிந்துணரத் தக்க இடத்திற்குச் செல்லவிருக்கிறீர்கள். இலக்கணக் கதவுகள் உங்கள் கண்முன்னே பூவிதழ்களைப்போல் திறக்கக் காண்பீர்கள்.

மொழியில் சொல் என்பது அடிப்படையான ஓர் அலகு. தனித்துவமான துண்டு. ஒன்றுக்கு மேற்பட்டு, குறைந்தது இரண்டு சொற்களால் ஆவது சொல் தொடர் - சொற்றொடர். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்றொடர்களால் ஆவதுதான் வாக்கியம். வாக்கியத்தின் வழியாக மொழி உச்சத்தை அடைந்து உலகை ஆள்கிறது.

வலிமிகுதல் என்பது இரண்டு சொற்களுக்கு இடையே நடைபெறும் செயல். சொற்றொடர் ஒன்றின் உள்ளுக்குள்ளே நடக்கும் மொழிவினைதான் வலிமிகுதல். வலிமிகுதலைப் பற்றிய பறவைப் பார்வையைப் பெற வேண்டுமானால் சொற்றொடர் குறித்த அறிதலையும் அதன் வகைகளையும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகைமைகளில் எங்கே வலிமிகும், எங்கே வலிமிகாது என்பதை அறிந்தவுடன் இந்தப் பாடம் ஏறத்தாழ நிறைவு பெறவுள்ளது.

மாடு மேய்கிறது. மாடு ஒரு சொல். மேய்கிறது ஒரு சொல். மாடு மேய்கிறது என்பது சொற்களின் தொடர் வரிசை - சொற்றொடர். இந்தச் சொற்றொடர் மிக இயல்பாக எளிமையாக இருக்கிறது. ஆனால் மொழி என்பது இப்படி வெள்ளந்தியான எளிமையோடும் சாதாரண அம்சங்களோடும் இருப்பது மட்டுமில்லையே. அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நுண்மைகளையும் செறிவுகளையும் அறிவுப்புலத்தையும் தனக்குள் ஏற்றுச் செரித்து வன்மையடந்த ஒன்றல்லவா ?

முழுமையாகப் பொருள் காட்டும் எளிமையான சொற்றொடர்களால் ஆகியிருக்கும் தமிழ் மொழி, இன்னொரு புறத்தில், உள்மறைந்து தொக்கி நிற்கும் தன்மைகள் உள்ள சொற்றொடர்களாலும் உருவாகியிருக்கிறது. அத்தகைய சொற்றொடர்களை நாம் நம் அறிவைப் பயன்படுத்திச் சற்றே விரித்துப் பொருள் காண்கிறோம்.

மாடு புல் மேய்கிறது. இப்பொழுது ‘புல் மேய்கிறது’ என்கிற சொற்றொடரை மட்டும் கவனியுங்கள். புல் மேய்கிறது - முன் சொன்னதுபோல எளிமையாக அர்த்தப்படுத்தக் கூடாதல்லவா ? புல்லை மேய்கிறது’ என்று ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபை உடன் சேர்த்து விரித்துப் பொருள் கொள்கிறோம். மாடு புல்லை மேய்கிறது.

உள்ளுக்குள் ஒன்றும் தொக்கியிருக்காமல் வெகு இயல்பாய் எளிமையாய் அமைந்த சொற்றொடர்களைத் தொகாநிலைத் தொடர்கள் என்கிறோம். சுருக்கமாகத் ‘தொடர்’ என்பதும் உண்டு. மாடு மேய்கிறது மாதிரி.

உள்ளுக்குள் ஒன்று தொக்கி நிற்க (உருபு) அதைக்கொண்டு ஒரு சொற்றொடரை விரித்துப் பொருள்கொள்ள வேண்டிய, தொகுத்துப் பொருள் கொள்ள வேண்டிய சொற்றொடர்களைத் தொகைநிலைத் தொடர் என்கிறோம். சுருக்கமாகத் ‘தொகை’ என்பார்கள். புல் மேய்கிறது மாதிரி.

தொடர்’ என்று சொல்லப்பட்ட எளிமையான சொற்றொடர் வடிவங்களிலும், தொகை’ என்று சொல்லப்பட்ட தொகுத்துப் பொருள்கொள்ளக்கூடிய சொற்றொடர் வடிவங்களிலும் - வலிமிகுமா மிகாதா என்பதைத்தான் நாம் இனி பார்க்கப் போகிறோம்.

வலிமிகுதல் 7
-------------------
இரண்டு சொற்கள் சேர்ந்தால் அது சொற்றொடராகிறது. அது எளிமையாய் வெளிப்படையாய் இருந்தால் தொகாநிலைத்தொடர் (தொடர்) என்றும், விரித்துப் பொருள் காண இடமிருக்குமானால் அது தொகைநிலைத்தொடர் (தொகை) என்றும் சென்ற பதிவில் புரிந்துகொண்டோம்.

முதலில் தொடரின் வகைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

எழுவாய்த் தொடர்
விளித் தொடர்
வினைமுற்றுத் தொடர்
பெயரெச்சத் தொடர்
வினையெச்சத் தொடர்
வேற்றுமைத் தொடர்
இடைச்சொற்றொடர்
உரிச்சொற்றொடர்
அடுக்குத் தொடர்

எழுவாய்த் தொடர் -
கிளி பேசியது, புலி பாய்ந்தது - கிளி, புலி என எழுவாய் தொடங்கி நகரும் எளிமையான சொற்றொடர்கள். வலி மிகாது.

விளித் தொடர் -
தம்பி பார் - முதற்சொல் அழைக்கிறது அதாவது விளிக்கிறது. வலி மிகாது.

வினைமுற்றுத் தொடர் -
பாடியது பறவை - முதல் சொல் வினைமுற்றாக இருந்தும் மேலும் தொடர்வது. வலி மிகாது. (கண்டேன் சீதையை - புகழ்பெற்ற உதாரணம். வலிமிகும் தேவை இதற்கு இல்லை என்பதால் நமக்கு உதவவில்லை).

பெயரெச்சத் தொடர் -
வாடிய பயிர் - முதற்சொல்லாய் அமைந்த வினை, தன்னை அடுத்து பெயர் வந்து பூர்த்தியடையும்படி எச்சமாக இருப்பது. வலி மிகாது.

வினையெச்சத் தொடர் -
வரச் சொன்னான், பாடித் திரிந்தான் - முதற்சொல் வினையின் எச்சமாக நின்று அடுத்து ஒரு வினைச்சொல் வந்து பூர்த்தியடையும்படி இருப்பது. வலி மிகும்.

வேற்றுமைத் தொடர் -
இதைத் தனிப்பதிவில் விளக்குகிறேன்.

இடைச்சொற்றொடர் -
மற்றொன்று - மன், மற்று, கொல், போன்ற சொற்கள் பெயர் அல்லது வினைச்சொல்லுக்கு முன் வரும். மற்று+ஒன்று = மற்றொன்று. இதில் மற்று இடைச்சொல். ஒன்று என்னும் பெயருக்கு முன் வந்தது. செய்யுள்களில் அதிகம் பயன்பட்டது. வலி மிகாது. இப்போது தற்கால எழுத்து வழக்கில் இல்லை.

உரிச்சொற்றொடர் -
நனி பேதை, கடிகமழ் மலர், உறுபுகழ் - பெயருக்கோ வினைக்கோ உரியதாய் வரும் சொற்கள். வலிமிகாது. இதுவும் தற்கால வழக்கில் இல்லை.

அடுக்குத் தொடர் -
பாடு பாடு, போ போ, சிறு சிறு, சின்ன சின்ன - பொருள்தருகின்ற சொற்கள் அடுக்கி வருவது - வலி மிகாது.

சுருக்கம் : வினையெச்சத் தொடர் தவிர்த்த வேறெந்தத் தொடர்களுக்கும் வலிமிகாது. (வேற்றுமைத் தொடரை நாம் கடைசியில் பார்க்கவிருக்கிறோம்).

வலிமிகுதல் 8
-------------------
முந்திய பகுதியில் ‘தொடர்’களின் வகைகளையும் அவற்றில் வலி மிகும் மிகா இடங்களையும் பார்த்தோம். இனி ‘தொகை’களின் வகைகளையும் அவற்றில் வலிமிகும் மிகா இடங்களையும் பார்ப்போம்.

தொகை என்பது இரண்டு சொற்களுக்கு இடையே தொகையுருபு மறைந்திருப்பதால் நாம் விரித்துப் பொருள் கொள்வதற்கு இடம் தருவது. அது ஆறு வகைப்படும்.

1. வேற்றுமைத் தொகை
2. வினைத் தொகை
3. உவமைத் தொகை
4. பண்புத் தொகை
5. உம்மைத் தொகை
6. அன்மொழித் தொகை

சென்ற பதிவில் ‘தொடர்’ வகைகளில் வேற்றுமைத் தொடரை விளக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறேன். அத்துடன் இந்தப் பதிவிலும் முதல் வகையான வேற்றுமைத் தொகையையும் நிறுத்தி வைக்கிறேன். வேற்றுமைத் தொடரையும் வேற்றுமைத் தொகையையும் சேர்த்துத் தனியாகக் கற்க உள்ளோம். மீதமுள்ளவற்றைப் பார்ப்போம்.

வினைத்தொகை -
ஊறுகாய், சுடுசோறு, ஆடுகளம் - இரண்டு சொல்லில் முதற்சொல் ஏவல் பொருள் தந்து முக்காலத்திற்கும் விரித்துப் பொருள் காணும்படி அமைவது. வலி மிகாது என்பதைத் தெளிவாக அறிவீர்கள்.

உவமைத் தொகை -
தாமரைக்கண், மலைத்தோள், பனிப்பார்வை - முதற்சொல் இரண்டாம் சொல்லுக்கு உவமையாக வந்து இடையில் போன்ற என்ற உவம உருபை இட்டுத் தொகுத்துப் பொருள் காண்பது. வலி மிகும்.

பண்புத் தொகை -
பொய்ப்பேச்சு, மெய்க்கருத்து, கறுப்புக்குதிரை - முதற்சொல் இரண்டாம் சொல்லின் பண்பை விளக்குவதாய் அமைந்து ‘ஆன, ஆகிய’ போன்ற பண்புருவுகளை இட்டுத் தொகுத்துப் பொருள் காணும்படி இருப்பது. வலி மிகும்.

உம்மைத் தொகை -
காடுகரை, குழந்தைகுட்டி, தாய்தந்தை - இரண்டு பெயர்ச்சொற்களோடும் உம் விகுதியைச் சேர்த்துத் தொகுத்துப் பொருள் கொள்வது. வலி மிகாது.

அன்மொழித் தொகை -
துடியிடை தோன்றினாள், எழுகதிர் கிளம்பிற்று - மேற்காணும் எவ்வகைக்குள்ளும் அடங்காமல் தொகுத்துப் பொருள் காண வேண்டியிருப்பது. துடிபோன்ற இடையை உடைய பெண் தோன்றினாள். எழுந்த கதிர் கிழக்கிலிருந்து கிளம்புகிறது. இதில் வலி மிகுவதற்கும் மிகாமைக்கும் இதுவரை கற்ற விதிகளின்படி உரிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளும்படி இருக்கும்.

தொகைகளின் தனித்த குணம் - இரண்டும் வினைச்சொற்கள் என்றால் அவற்றுக்கு இடையே தொகை தோன்றாது.

அடுத்த பகுதியில் இந்தத் தொடரின் க்ளைமாக்ஸ் !

வலிமிகுதல் 9
---------------------
வினையொன்றே உயிராகப்
பண்பு காத்திருந்தேன்.

என்மொழிக்குள் உன்மொழி
அன்றிலின் அன்மொழியானது.

வேற்றுமை தீர்ந்து
உவமையாய் முன் நின்றாய்.

‘உம்மைப் பிடிக்கும்’
என்றாய்.

‘உம்மைத் தொகை பிடிக்குமா ?’
என்றேன்.

‘உம்’ என்றாள்.
‘ஏன் ?’ என்றேன்.

‘உன்னையும் என்னையும்
அதுவே சேர்க்கிறது.
நீயும் நானும்
அதனால் இணைகிறோம்’ என்றாள்.

‘உம்’ என்னும்
உன் சம்மதச் சொல் கொண்டிருப்பதால்
எனக்கும் அதுவே பிடிக்கும்’ என்றேன்.

‘எனக்குப் பிடித்ததற்கு
இன்னொரு காரணமும் உண்டு’ என்றாள்.

‘என்ன ?’ என்றேன்.

‘இணைப்பில் வலி தோன்றாது.
உணர்த்த விரும்பும் பொருள் மட்டுமே
தோன்றும் ’ என்று கண் தாழ்ந்தாள்.

வலிமிகுதல் 10
--------------------
வலிமிகுதல் தொடரின் கிளைமாக்ஸ்-ஐப் படிக்கவுள்ளீர்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் புரியாமை என்னும் வில்லன் வென்றுவிடுவான் என்பதால் ஊன்றிப் படியுங்கள்.

ஒரு சொற்றொடரின் பொருள் வெவ்வேறு விதமாகவும் வேற்றுமைப்படலாம். அந்த வேற்றுமையை உணர்த்த வேற்றுமை உருபுகள் எனச் சில இருக்கின்றன. மரவேலி என்பதை எத்தனை விதமாய் விரிக்கலாம் பாருங்கள். மரத்தில் செய்த வேலி, மரத்திற்கு வேலி, மரத்தினது வேலி, மரத்தால் ஆகிய வேலி என்று புலமைக்கு எட்டிய வகையில் பொருள் கொள்ளலாம்.

இவ்வாறு சொற்றொடர் இடையே துல்லியமாய்ப் பொருள் வேற்றுமை தோன்றப் புரிந்துகொள்ளத் தோன்றியதே வேற்றுமை. சொற்றொடரின் பொருள் நுணுக்கங்களில் வேற்றுமை கற்பிக்கிறது.

இந்த வேற்றுமைக்கு உருபுகள் உள்ளன. அவற்றை எண்வாரியாகப் பெயரிட்டு இனங்காட்டுகிறார்கள். ஒன்று முதல் எட்டு வரையிலான வேற்றுமைத் தொடர்கள் மற்றும் தொகைகள். தொடர் என்றால் இயல்பாய் வருவது, தொகை என்றால் தொகுத்துப் பொருள் பெறுவது என்று நமக்குத் தெரியும்.

முன்னதாக வேற்றுமை உருபுகள் என்னென்ன என்று பார்ப்போம்.

முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ
மூன்றாம் வேற்றுமை உருபு – ஆல், ஆன், ஒடு, ஓடு.
நான்காம் வேற்றுமை உருபு – கு
ஐந்தாம் வேற்றுமை உருபு – இன், இல்
ஆறாம் வேற்றுமை உருபு – அது, ஆது
ஏழாம் வேற்றுமை உருபு – கண்
எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.

இப்போது விளக்கத்திற்கு வருகிறேன். இந்த வேற்றுமை
உருபுகள் ஒரு சொற்றொடரில் மறைந்திருக்க நாம் அவற்றை விரித்துத் தொகுத்துப் பொருள் காண்கிறோம். அதுவே வேற்றுமைத் தொகை. விரிவு செய்து பொருள் காண்பதற்காக சம்பந்தப்பட்ட சொற்றொடரோடு உரிய வேற்றுமை உருபை இணைத்து இயல்பான ஒரு சொற்றொடரை விளைச்சலாய்ப் பெறுவோம் அல்லவா, அந்த இயல்பான சொற்றொடர் வேற்றுமைத் தொடர்.

மற்றொரு நிலைமையும் இங்கே உண்டு. ஒரு சொற்றொடரில் வேற்றுமை உருபை மட்டும் சேர்த்து விரித்துப் பொருள்கொண்டாலும் போதாத நிலை ஏற்படும். வேற்றுமை உருபோடு ஒரு வினைச்சொல்லையும் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு ‘வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை’ என்று பெயர். புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கிறதல்லவா ? உதாரணத்திற்கே போவோம், வாருங்கள்.

முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை என்பதால் இரண்டாம் வேற்றுமையிலிருந்து தொடங்குகிறேன்.

தண்ணீர் குடித்தான் – இது இரண்டாம் வேற்றுமைத் தொகை – எப்படி ? – தண்ணீரைக் குடித்தான்’ என்றே ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபை முதற்சொல்லோடு இணைத்துப் பொருள் கொள்கிறோம். தண்ணீர் குடித்தான்’ என்பது வேற்றுமை உருபு உள்மறைந்து தொகுத்துப் பொருள்காணும்படி இருக்கிறது. அந்த வேற்றுமை உருபு இரண்டாம் வேற்றுமை உருபு. ஆக,

தண்ணீர் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொகை (தொகுக்கச் சொல்கிறது)

தண்ணீரைக் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொடர் (தொகுத்தபின் இயல்பாகிவிட்டது).

தண்ணீர்க்குடம் – இதை எப்படிப் பொருள் விரிப்பீர்கள் ? ‘தண்ணீரை உடைய குடம், தண்ணீரைப் பிடிக்கும் குடம்’ இப்படி இரண்டாம் வேற்றுமை உருபோடு ஒரு வினைச்சொல்லையும் சேர்த்து (அந்த வினைச்சொல் இரண்டாம் சொல்லின் – குடம் - பயனை விளக்குவதாக இருக்கும்) அர்த்தம் கண்டோம். இதுவே இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.

இப்போது நாம் வழக்குக்குள் நுழைகிறோம்.

இரண்டாம் வேற்றுமை (ஐ)
--------------------------------------
தண்ணீர் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

தண்ணீரைக் குடித்தான் – இரண்டாம் வேற்றுமை உருபுடன் வந்த விரிந்த தொடர் – வலி மிகும்.

தண்ணீர்க் குடம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

இப்படி எட்டு வேற்றுமைகளுக்கும் பார்க்கப் போகிறோம்.

மூன்றாம் வேற்றுமை (ஆல்)
---------------------------------------
கை காட்டினான் – மூன்றாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

கையால் காட்டினான் – மூன்றாம் வேற்றுமை உருபுடன் வந்த விரிந்த தொடர் – வலி மிகாது

தங்கக் கிண்ணம் - தங்கத்தால் செய்த கிண்ணம் – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

நான்காம் வேற்றுமை (கு)
------------------------------------
வள்ளித் திருமணம் – நான்காம் வேற்றுமைத் தொகை – வலி மிகும்

வள்ளிக்குத் திருமணம் – நான்காம் வேற்றுமை உருபுடன் வந்த விரிந்த தொடர் – வலி மிகும்

கூலிப்படை – கூலிக்குக் கூடிய படை – நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலிமிகும்.

ஐந்தாம் வேற்றுமை (இன், இல்)
--------------------------------------------
தாய்மொழி கூறு – ஐந்தாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

தாய்மொழியில் கூறு – ஐந்தாம் வேற்றுமை உருபுடன் விரிந்த தொடர் – வலி மிகாது

பழச்சாறு – பழத்தில் பிழிந்த சாறு – ஐந்தாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

ஆறாம் வேற்றுமை (அது)
------------------------------------
கிளிப்பேச்சு – ஆறாம் வேற்றுமைத் தொகை – வலி மிகும்

கிளியினது பேச்சு – ஆறாம் வேற்றுமை உருபுடன் விரிந்த தொடர் – வலி மிகாது

ஆறாம் வேற்றுமைக்கு உடன் தொக்க தொகை அபூர்வம்.

ஏழாம் வேற்றுமை (கண்)
-----------------------------------
மலை திரிவோர் – ஏழாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

மலையின்கண் திரிவோர் – ஏழாம் வேற்றுமை உருபுடன் விரிந்த தொடர் – வலி மிகாது

மலைக்கோவில் – மலையின்கண் எழுந்த கோவில் – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

முதலாம் வேற்றுமையை இன்னும் பார்க்கவில்லை. முதலாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது. அது வேறொன்றுமில்லை. எழுவாய்த் தொடர் என்று பார்த்தோமில்லையா ? அதையே தொகையில் முதலாம் வேற்றுமைத் தொகை (எழுவாய் வேற்றுமை) என்பார்கள். எளிமையாய் இருக்கும். காற்று குளிர்ந்தது. கை சுருங்கியது. – வலி மிகாது.

இன்னொன்று - எட்டாம் வேற்றுமை, இதை விளி வேற்றுமை என்பார்கள். தொடரில் பார்த்த விளித்தொடர் போன்றதுதான் இதுவும். அண்ணா தோற்காதே – அண்ணா யாரிடம் தோற்காதே – என்பதுபோல் தொகுத்துக்கொள்ள இடமிருப்பதால். இங்கும் வலிமிகாது.

வலிமிகுதல் குறித்த பாடங்கள் ஏறத்தாழ நிறைவை எய்துகின்றன. இன்னும் எளிய விதிகள் சில இருக்கின்றன. அவற்றை அடுத்த பகுதியில் எழுதுவேன்.

பிறகு இவற்றில் உள்ள ஓரிரு முரண்கள், அவற்றைக் களையும் விதங்கள் பற்றிய தெளிவையும் எழுதவுள்ளேன். அத்துடன் இப்பகுதி நிறைவடையும்.

வலிமிகுதல் 11 - கள் விகுதிக்கு வலி மிகுமா ?
----------------------------------------------------------------
கள் - மது என்ற பொருளில் வந்தால் தனிச்சொல். பன்மைச் சொற்களில் கள் என்று இடம்பெறும் ஈற்று விகுதிக்குப் பன்மை விகுதி என்று பெயர். வெறும் விகுதியாய் வருவதால் அது தனிச்சொல் இல்லை.

சொல் வகைமையில் கள் விகுதியை இடைச்சொல்லில் சேர்ப்பார்கள். இடைச்சொல்லுக்கு வலி மிகாது. கிறு, கின்று, ஆநின்று - ஆகியவை கூட இடைச்சொல்தான்.

வாழ்த்துக்கிறோம் என்று வலி மிகை செய்து எழுதுவதில்லை. வாழ்த்துகிறோம் என்றே எழுதுகிறோம். அதுபோலவே வாழ்த்துகள் என்றே எழுத வேண்டும். வாழ்த்துக்கள் என்பது பெரும் பிழை.

வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் என்பதால்தான் வாழ்த்துக்கள், எழுத்துக்கள், கருத்துக்கள், பாட்டுக்கள் என்று எழுதுவதாகச் சொல்வார்கள். பரிமேலழகரே ‘எழுத்துக்கள்’ என்று எழுதியிருப்பதாக ஆதாரமும் உண்டு.

வன்தொடர்க் குற்றியலுகர வலிமிகும் விதி தன்னை அடுத்து மற்றொரு தனிச்சொல் வந்தால்தான் பொருந்துமே அன்றி கள் என்னும் இடைச்சொல்லான பன்மை விகுதிக்குப் பொருந்தாது.

கள் விகுதி வலிமிகுந்தும் மிகாமலும் குழப்பமான புழக்கத்தில் இருக்கிறது. அந்தப் பழக்கத்தால்தான் வாழ்த்துக்கள் என்கிறோம்.

1. தனி நெடிலை அடுத்தோ (ஓரெழுத்து ஒருமொழி) நெடிலில் முடியும் சொற்களை அடுத்தோ கள் விகுதிக்கு வலி மிகும்.

ஆக்கள், ஈக்கள், பாக்கள், தேனீக்கள், வெண்பாக்கள்.

ஆனால், ஐகாரத்திலும் ஔகாரத்திலும் வலி மிகாது. கைகள், பைகள், பண்டிகைகள்.

ஔகாரத்தில் ஏதும் சொற்கள் உள்ளதாகத் தெரியவில்லை.

2. உ’கரத்தில் முடியும் இரண்டு குறில் எழுத்துகள் (குறிலிணை) உள்ள சொற்களை அடுத்து கள் விகுதி வந்தால் வலிமிகும். தெருக்கள், அணுக்கள், வடுக்கள், பருக்கள்.

உ’கரத்தில் முடியும் இரண்டுக்கும் மேற்பட்ட குறில்கள் என்றாலோ அல்லது நெடிலை அடுத்த உகரக் குறில் என்றாலோ வலி மிகாது. அழகுகள், விழுதுகள், ஆடுகள், வீடுகள்.

ள்’ என்று முடியும் பெயர்ச்சொற்களோடு கள் விகுதி சேர்த்துப் புணர்த்தவும் கூடாது. ஏனென்றால் புணர்ச்சி விதி ஏற்க இது தனிச்சொல் இல்லை. நாள்கள், பொருள்கள், வாள்கள், தோள்கள் என்றுதான் எழுதவேண்டும். நாட்கள், பொருட்கள் என்று எழுதக் கூடாது.

கள் விகுதி சார்ந்த ஐயங்களில் முழுமையாகத் தெளிவு பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துகள் !

வலி மிகுதல் 12 – இன்னும் சில நிலைமைகள்
--------------------------------------------------------------
1. ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வலிமிகும். ஓரெழுத்துச் சொற்களால் ஆகியவையே ஓரெழுத்தில் அமைந்த ஒருமொழி. பூப்பறித்தான். டீக்கடை. தீத்தெறித்தது. ஓரெழுத்து ஒருமொழியில் வலி மிகாத நிலைமைகளும் இருக்கின்றன. நீ செல். போ பணிந்து.

2. வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலி மிகவேண்டும் என்பது அடிப்படை. அதன்படி கொக்குப் பறந்தது, சிட்டுப் பாடியது என்றே எழுத வேண்டும். செய்யுளில் இவ்வாறு எழுதுகின்ற வழக்கம் இருக்கிறது. ஆனால் உரையில் இவ்வழக்கு கைவிடப்பட்டுவிட்டது. தமிழறிஞர்களின் வாதப் பிரதிவாதங்கள் இரண்டையும் சரியென்றே ஏற்கின்றன.

3. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலி மிகாது. ஆனால் சிற்சில இடங்களில் அதுவும் ‘கள்’ விகுதியிலும் கூட வலி மிகுத்து எழுதுவது இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்துக்கள், பந்துக்கள், கந்துக்கடன். கந்துக்காரன்.

4. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது என்பதால் மருந்து விற்கும் கடையை ‘மருந்து கடை’ என்று எழுதவேண்டும். இதற்கு ‘மருந்தைக் கடைந்து தா’ -இரண்டாம் வேற்றுமைத் தொகையில் - என்பதுபோன்ற ஒரு பொருளும் வருகிறது. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாக ‘மருந்தை விற்கும் கடை’ என்ற பொருளில் மருந்துக் கடை என்றே எழுதுகிறோம்.

5. ஊர்காவலர், மெய்க்காவலர் என்று ஐந்தாம் வேற்றுமைத் தொகையாக வலிமிகாமல் எழுதப்படவேண்டும். ஆனால், ஊர்க்காவலர், மெய்க்காப்பாளர் என்றே எழுதப்படுகிறது.

6. ஒன்று, ஒரு, இரண்டு, இரு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, அறு, ஏழு, எழு – ஆகிய எண்சொற்களை அடுத்து வலி மிகாது. அரை, பாதி, எட்டு, பத்து ஆகிய சொற்களுக்குப் பின் கட்டாயம் வலி மிக வேண்டும்.

7. படி’ என்ற சொல் தான் சேர்ந்தாலும் தன்னை அடுத்து வல்லினம் வந்தாலும் வலி மிகாது. அதன்படி இதன்படி, சொன்னபடி, செய்தபடி. ஆனால் அப்படி, இப்படி, எப்படி – ஆகிய சொற்களை அடுத்து வலி மிக வேண்டும்.

8. அத்தனை, இத்தனை, எத்தனைக்கு வலி மிகாது. அத்துணை, இத்துணை, எத்துணைக்கு வலி மிகும்.

9. கீழ் என்பதை அடுத்து வலிமிகுவதும் மிகாததும் ஏற்கப்படுகிறது. கீழ்க்கணக்கு, கீழ்த்திசை, கீழ்தளம்.

10. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே- என்பதற்கொப்ப மரபையும் தொல் பெருமைகளையும் போற்றிக்காப்பதையும் தகுதியான புதுமைகளை ஏற்று நடப்பதையும் இருகண்களாகக் கருதி இந்தத் தொடரை இனிதே நிறைவு செய்கிறேன்.

ஆர்வத்துடன் பின்தொடர்ந்த அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் !

- கவிஞர் மகுடேசுவரன்

கனகதாரா_ஸ்தோத்ரம்

# கனகதாரா_ஸ்தோத்ரம்
அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:
முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:
ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநிகபக்ஷ்மநேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:
பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:
காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:
ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:
விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
ஆநந்தஹேதுரதிகம் முரவித்விஷோ(அ)பி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:
இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த
ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:
தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா
மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ:
கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை
ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை
நமோஸ்து நாளீகநிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை
நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை
நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை
நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை
சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதா
நி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே
யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே
ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்
திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்
ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்
கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:
ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:
# கனகதாரா_மந்திரத்தின்_அர்த்தம்
# தமிழில்...!!
1. மரகதத மாலை மலர் மொட்டுகளை மொய்கின்ற பொன்னிற கருவண்டு போல்!
மாதவன் மார்பினில் வாசம் புரிந்தங்கு மெய்சிலிர்ப்பு ஏற்றும் விழிகள். மரகதத மாலை மலர் மொட்டுகளை மொய்கின்ற பொன்னிற கருவண்டு போல் !
மாதவன் மார்பினில் வாசம் புரிந்தங்கு மெய்சிலிர்ப்பு ஏற்றும் விழிகள். பரவும் பல் வடிவத்தின் செல்வவளம் ஆக்கிடும் திருமகளின் அழகு விழிகள் !
பரிவோடும் அந்த இரு விழிகளின் கடை நோக்கு மங்களம் எனக்கு அருள்கவே.
2. நீலமா மலரினில் உல் சென்று வெளி வந்து உலவிடும் பெண்வண்டு போல்,
நீலமா முகில் வண்ணன் திருமுகம் காண்கின்ற ஆசையால் மேல் சுளன்று - கோலம் கண்டு
உடன் நாணம் ஏற மீண்டும் கீழ் வந்து மேல் சென்றிடும் குறு நகையால்
அலை மகள் கண் வரிசை என்வாழ்வில் செல்வம் எல்லாம் தருகவே.
கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே!
3. ஆனந்தமாய் சற்று விழிகளை மூடிய முகுந்தனை  காணும் விழிகள் ஆனந்தம் தந்தபடி இமை சிறிதும் அசையாமல் இனிமையை வார்க்கும் விழிகள் மன்மத சாயலை தன்னில் ஏற்கும் விழிகள் பள்ளிகொள்ளும் பரமனின் - மனைவியாம் திருமகளின் பாதி மூடும் விழிகள் செல்வ சுகம் யாவும் தருக.
எந்த கடை பார்வை நாரணனின் கவ்ஸ்துவ மார்பினில் வாழ்கின்றதோ எந்த கடை பார்வை இந்திரனின் நீலமணி சரமாய் ஒளிர்கின்றதோ
4. எந்த கடை பார்வை சுந்தர திருமாலின் தேவைகளை தருகின்றதோ அந்த கடை பார்வை வீசிடும் கமலமகள் மங்களம் எனக்கு அருள்கவே கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே.
கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே நீருண்ட மேகமாய் காருண்டு காட்சி தரும் விஷ்ணுவின் திருமார்பினில் நிலைகொண்டு ஒளிர்கின்ற மின்னளாகி அகில உலகுக்கும் தாயுமாகி பார்கவ குலத்திற் அவதரித்து
5. பூஜை செய்வதற் உரியதாகி பரிமளிக்கும் வடிவம் எதுவோ அது என்னில் மங்களம் மழை பொலியட்டுமே மங்கலங்கள் யாயும் தன்னிடத்தில் கொண்ட மாயன் வைகுந்தன் நெஞ்சில் மதுகைடவர்யெனும் வலிமைமிகு அசுரனை மாயத திருமாலின் நெஞ்சில் மன்மதன் சென்று அமர வழிசெய்த அந்த கடல்குமரி திருவின் பார்வை புன்சிரிபேந்திடும் அந்த கடை கண் பார்வை என்னையும் அருளட்டுமே கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே.
6. உலகாளும் வாய்ப்பையும் இந்திர பதவியையும் வேடிக்கையாய் கொடுக்கும் முரணை வெற்றிகொண்ட விஷ்ணுவிற்கு பெரும் ஆனந்தம் தந்து நிற்கும் நீலோத் பல மலரினில் உட்புற பகுதிபோல் நளினமாய் தோன்றிநிற்கும் நிலமகளின் கடைநோகில் ஒரு பாதி என்மீது கணமேதும் பொலியட்டுமே.
மறுமைக்கு தேவையாய் உல்லென செயல்களை செய்கின்ற தகுதி இல்லா மனிதர்கும்கூட எந்த கடை பார்வை சொர்கத்தை தருகின்றதோ..!!
7. அந்த கருணை பார்வை கொண்டவள் தாமரை மலர்மீது வீற்றிக்கும் அன்னையாம் ஸ்ரீ மகா லக்ஷ்மியின் திருநோக்கு தேவைகளை அருளட்டுமே கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே கருனையெனும் அருள் காற்றினை நன்மைதர கூட்டியே வந்துநிற்கும் திருமகளின் விழியெனும் தயைகொன்ட நீருண்ட கரியமா வண்ணமேகம் ஏழ்மையால் துயருற்று வாழ்கின்ற சாதக குஞ்சுகலாம் எங்களுக்கு,
8. செல்வமழை பெய்து பெரும் பாவம் வறுமை நீக்கி வளம்மெல்லாம் அருளட்டுமே கலைமாமகள் என்றும் கருட கொடியானின் அலைமாமகள் என்றுமாய் நிலமாலும் சாகம்பரி என்றும் பிறை சூடும் பெம்மானின் மலைமகளும்மாய் உலகத்திலே நின்று  உயிர் படைத்தது காத்து முடிப்பதை விளையாட்டென செய்பவள் மூவுலகம் ஆளும் நாராயணனின் நாயகியே போற்றி போற்றி கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே..!!
9. நல்ல பல செயலுக்கு ஏற்றபடி பயன்தரும் வேத வடிவினளே போற்றி நளினமிகு அழகிய குணங்களின் உறைவிடமே ரதி தேவி போற்றி போற்றி எல்லை இல்லா சக்தி எனவாகி தாமரையில் அமரும் மலர்மகளே போற்றி .
எங்கும் விளங்கிடும் பூரணமே எளில்புரிச உத்தமனின் துணையே போற்றி செங்கமல மலர் போன்ற சிங்கார முகம் கொண்ட திருமகளே போற்றி போற்றி.
மந்தரமலை அசையும் பாற்கடல் தோன்றிய மாமகளே போற்றி போற்றி சந்திர தேவனுடன் தேவர் அமுதத்துடன் பிறந்தவளே போற்றி போற்றி!
10. நந்தகோவிந்தன் நாராயணனின் நாயகியே நிலமகளே போற்றி போற்றி கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே தங்கநிற தாமரையை செந்தளிர் கரமேந்தும் செந்திருவே போற்றி போற்றி தரணி மண்டலம் முழுதும் அரசாட்சி செய்கின்ற நாயகியே போற்றி போற்றி தேவாதி தேவர்க்கு ஆதிமுதல் தயை புரியும் செல்வமே போற்றி போற்றி!
11. சாந்தமென்னும் வில்லை ஏந்திடும் இராமனின் இல்லறமே போற்றி போற்றி பிருகு முனியின் புதல்வியாய் அவதாரம் செய்தவளே தேவியே போற்றி போற்றி திருமாலின் வலமார்பில் நிறைவாக உறைபவளே திருமகளே போற்றி போற்றி கமலமென்னும் மலரினில் ஆலயம் கொண்டவளே இலக்சுமியே போற்றி போற்றி.
காலடிகள் மூன்றினால் உலகினை அளந்த தாமோதரனின் துணையே போற்றி கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே!
12. ஒளிசுடரும்  காந்தியும் தாமரை விழிகளும் கொண்டவளே போற்றி போற்றி உலகம் அனைத்தையும் இயக்கிடும் மங்கல நாயகியே போற்றி போற்றி அமரருடன் அனைவரும் அடிபணிந்தே தொழும் அலைமகளே போற்றி போற்றி.
நந்தகோபன் குமரன் நந்தகோபாலனின் நாயகியே போற்றி போற்றி செல்வங்கள் தருபவளே ஐம்புலனும் ஆனந்தம் பெற்றிடும் தாயே பல்வகை பதவிகள் அறியாசனகளை தருகின்ற கமலனயணி அழல் வினைகளை போக்குபவளே எங்கள் அன்ஞானம் நீக்குபலே செல்வியே தொழுகிறேன் உன்னையே அன்னையே என்னையே என்றும் காப்பாய்!
13. கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே தொழுகின்ற அடியார்க்கு பொழுதெல்லாம் துணை நின்று செல்வங்கள் யாவற்றையும் முளிதாக பொலிகின்ற திருநோக்கு எவருடைய கடைகண்ணின் கருணை நோக்கு அந்த கருணை நோக்கு முரஹரியின் மனம் வாழும் திருமகளே உனது நோக்கு உன்னை ஏன் மனதாலும் மெய்யாலும் சொல்லலும் துதிசெய்து புகழ்கிறேன் நான்..!!
14. பத்ம மலரில் வாழும் பத்மினி பத்மத்தை கையேந்து பதுமை நிதியே புத்தொளி வீசும் வெண்ணாடை மணமாலையுடன் ஒளிகின்ற செல்வச்சுடரே பகவதி ஹரினாதனின் பிரனனாயகியே நெஞ்சம் எல்லாம் அறிந்தோம் ஜகம் மூவிநிற்கும் பெரும் ஐஸ்வரியம் தருபவளே...!!!
என்னிடம் கருணை காட்டு கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே!
15. தேவகங்கை நதியின் தூய நல்நீரினை பொற்குடத்தில் திசைகளில் மத யானைகள் ஏந்தி நீர்ராற்று திகழ்கின்ற தெய்வ அழகே தாவும் அலைகடல் அரசன் பெற்ற பெண்னே உலகம் யாவிற்குமே அன்னையே தரனிகளின் தலைவனாம் திருமாலின் மனைவியே காலையுனை துதிசெய்கிறேன்....
அரவிந்த மலர்போன்ற அழகிய கண்ணனின் ஆனந்த காதலி நீ ஐஸ்வரியம் இல்லாமல் ஏழ்மையில் புலல்வதில் முதல்வனாய் நிற்பவன் நான் அருள்வெள்ளம் மலை மோதும் உன்கடை கண்களில் பார்வைக்கு
16. ஏங்கிநிற்கும் அடியனை உந்தயயை உண்மையாய் தேடிடும் என்னை நீ காண வேண்டும் கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே...
இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே...
அயிஸ்வரியம் தந்தருள்கவே மூன்று வடிவங்களின் உருவமாய் நிற்பவள்
மூவுலகினிற்கும் தாயாம் மோகன இலச்சுமியை...!!
மேல்சொன்னை துதிகளால் நிதம் புகழும் மனிதர் எவரும்
சான்றோர்கள் போற்றிடும் அறிவாளி ஆகிறான்...!!
செல்வம்மெல்லாம் பெறுகிறான்..!!
ஜெகமிதில் மேம்பட்ட குணமெல்லாம் கைவர
பாக்கியம் பல பெறுகிறார்...!!
செல்வமெலாம் பெறுகிறார்...!!
பாக்கியம் பல பெறுகிறார்...!!
# ஓம_சிவாயநம_ஓம் …

Saturday, 1 April 2017

கேலி

எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை அற்புதமானது...
1. புத்தகங்களை துணை கொள்.
2. உடலுழைப்பை அதிகரி.
3. சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.
4. குளிர் நீரில் குளி.
5. கொஞ்சமாய் சாப்பிடு.
6. தியானம் கைகொள்.
7. இறவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.
8. உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.
9. உணவில் கீரை சேர்த்துக் கொள்.
10. எத்தனை வலித்தாலும் அழாதே. சிரி.
11. ஆத்திரம் அகற்று.
12. கேலிக்கு புன்னகை தா.
13. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.
14. நட்புக்கு நட்பு செய்.
15. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.
16. அலட்சியப் படுத்தினால் விலகி நில்.
17. அன்பு செய்தால் நன்றி சொல்.
18. இதமாகப் பேசு.
நீ ஜெயிப்பாய். இது நிச்சயம் ! ! !
வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய். இது சத்தியம்.
#படித்ததில்ரசித்தது