Tuesday 21 August 2018

கோவில்

#கோவில்கள்

இன்றைய மக்களுக்குக் கோயிலின் மதிப்புத் தெரியவில்லை.பள்ளி கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு மொழியும் தர்க்கமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதனால் அறிவு வளர்கிறதே தவிர இதயம் மூடித்தான் கிடக்கிறது. உயிர்த்துடிப்புள்ள கோயிலின் மகிமை இன்றைய மனிதருக்குத் தெரியவில்லை.அதன் அர்த்தமும் புரியவில்லை. இதனால் நமது கோயில்கள் மெல்ல மெல்ல தம் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன.

இந்தியாவின் இரசவாதம் முழுவதும் கோயில்களில்தான் இருக்கின்றன.இந்தியா எல்லாவற்றையும் கோயில்களிருந்தே பெற்றது. ஒரு காலத்தில் மனிதனுடைய வாழ்வில் நிகழ்வன எல்லாமே கோயிலோடு தொடர்புகொண்டதாக அமைந்திருந்தது.

அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கோயிலுக்குத்தான் போவான். மனதில் கவலை ஏற்பட்டால் கோயிலுக்குச் செல்வான்.மகிழ்ச்சி ஏற்பட்டாலும் நன்றி தெரிவிக்க கோயிலுக்குத்தான் ஓடுவான்.

குடும்பத்தில் ஏதாவது நல்ல காரியம் என்றால் மலர்களும் பழங்களும் ஏந்தி அவன் கோயிலுக்குத்தான் செல்வான். வாழ்வில் சிக்கல் ஏற்பட்டாலும் கோயில்தான் புகலிடம். இந்தியனுக்கு கோயில்தான் எல்லாம். அவனது எல்லா ஆசா பாசங்களும் கோயிலைச்சுற்றியே செயல்பட்டன. அவன் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் தனது கோயிலை தங்கமும் வெள்ளியும் நகைகளும் கொண்டு அலங்கரித்தான்.

-- ஓஷோ --
நூல் : மறைந்திருக்கும் உண்மைகள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.